Thursday, June 25, 2009

அடைக்கலப் பாம்புகள்


       எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம். தோலில் என்ன மாதிரியான வடிவங்களிருந்தன என்று நினைவில்லை. நான் அந்தக் காலைவேளையில் கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். வீடு கூட்டிக் கொண்டிருந்த தங்கை  கட்டிலுக்கடிக்கடியில் தும்புத் தடியைப் போட்டு இழுத்ததில் உள்ளிருந்த பாம்பு மாட்டிக்கொண்டு வெளியே வந்து விழுந்தது. அவள் 'பாம்பு, பாம்பு' எனப் பெரிதாகக் கத்தத் தொடங்கி விட்டிருந்தாள். நான் சத்தம் கேட்டு அதிர்ந்து முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தபொழுது அவள் ஓடி விட்டிருந்தாள். பாம்பைத் துணைக்குச் சேர்த்த தும்புத்தடி நிலத்தில் கிடந்தது. பாம்பைக் காணவில்லை.

        சவரம் செய்து கொண்டிருந்த அப்பா, முகத்தில் பாதி நுரையோடு தங்கையின் அலறலுக்கு ஓடி வந்து என்னறையை எட்டிப் பார்த்தவாறு நின்றிருந்தார். அம்மாவின் ஒரு கையில் ஈர மா அப்பியிருந்தது. சமையலறையில் வேலையாக இருந்திருக்க வேண்டும். பாம்பு திரும்பவும் போய் கட்டிலடியில் ஒளிந்திருக்க வேண்டுமென்பது அவர்களது ஊகம். 'டேய்..இறங்காதேடா..நிலத்தில காலை வைக்காதேடா' என எனது கட்டிலைச் சுற்றியும் என்னைக் கொத்தவென்றே பல நூறு பாம்புகள் நெளிவது போன்று வாசலில் நின்றிருந்த அம்மா பதறிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பாம்பு நாங்களிருந்த மொத்த வீட்டையும் விழுங்கிவிடுமெனப் பயந்தோ அல்லது தனது சாகசத்தை விவரிக்கவெனவோ தங்கை அயல்வீடுகளுக்கெல்லாம் செய்தி பரப்பி உதவி கேட்டு விட்டிருந்தாள். அயல்வீடுகளின் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எனது அறை வாசலை நிறைத்தார்கள். ஏதோ அவர்களது பேச்சும், மொழியும் பாம்புக்குக் கேட்டு அது வேறு திட்டத்துக்கு நகருமென நினைத்தார்களோ என்னவோ எல்லோருமே மெதுவான குரலில் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். நான் கட்டிலில் மேற்சட்டையின்றி இருந்ததால் எல்லோரின் முன்பும் இயல்பாக வந்த ஒரு கூச்சத்தோடு காய்ச்சல் கண்டவனைப் போல போர்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். இப்படி எழும்பிய முகத்தோடு இவ்வளவு அசிங்கமாக ஊரை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென பாம்பு நினைத்ததோ இல்லையோ, நான் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

        பாம்பு சீறிப் பாய்ந்து வந்து தன் வாயை அகலத் திறந்து அவர்கள் எல்லோரையும் ஒரே மூச்சில் விழுங்கி விடுமோ என்பது போல அந்த அறைக்குள் அடியெடுத்து வைக்கப் பலரும் பயந்தார்கள். பாம்பு கட்டிலின் அடியில் எந்த மூலையில் ஒளிந்திருக்கிறது எனப் பலரும் தூர இருந்தே குனிந்து குனிந்து பார்த்தார்கள். அறைக்குள் பரவியிருந்த மின்சார வெளிச்சம் கட்டிலுக்கு நிழலைக் கொடுத்து அதனடியை இன்னும் இருட்டாக்கியிருந்தது. ஒருவரது பார்வைக்கும் பாம்பு எட்டவில்லை. ஒருவர் தனது கூரிய கண்களுக்குத் தென்பட்ட பாம்பு கட்டிலின் வலது மூலையிலிருக்கிறது என்றார். இன்னொருவர் இடது மூலையிலென்றார். இப்பொழுது ஒற்றைப் பாம்பு இரண்டு பாம்புகளாகி விட்டிருந்தது. தங்கை அதற்குள் ஏதோ பெருங்கதையைச் சொல்வதைப் போல மூச்சு வாங்கி வாங்கித் தான் அந்தப் பாம்பை இழுத்துப் போட்டதைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் இரு அடி நீளப்பாம்பு எனச் சொன்னது பலரது வாய்வழியாகப் போய் இறுதியில் ஆறு அடி நீளப்பாம்பாகி ஓய்ந்தது.

        கட்டிலடியில் வந்து ஒளித்திருப்பதனால் சிலர் அது சாரைப் பாம்பாக இருக்கும் என்றார்கள். சிலர் நல்ல பாம்பென்றும், இல்லாவிட்டால் புடையனாக அல்லது கண்கொத்திப் பாம்பாக இருக்கக் கூடுமென்றும் சொன்னார்கள். புடையனென்றால் அது நல்ல விஷமாம். சாரை அவ்வளவாக விஷமில்லையாம். கண்கொத்திப் பாம்பென்றால் கண்ணை மட்டும் குறி பார்த்துக் கொத்திவிடுமாம். அது நல்ல பாம்பென்றால் ஏதேனும் பழைய பகையை மனதில் வைத்து பழி வாங்க வந்திருக்குமென்றார்கள். நான் பாம்புக்கு என்ன செய்திருக்கிறேன். அது என்னைப் பழி வாங்க?

        பெருநாட்களுக்கு, திருநாட்களுக்கு ஊருக்குள் வரும் பாம்பாட்டி, மகுடி ஊதுகையில் ஆடும் நீளமான நல்ல பாம்பைக் கூட எட்டி நின்றே பார்த்திருக்கிறேன். அதுவும், எல்லோரும் சுற்றிவர நின்று பாம்பு, 'எந்நாளும் ஒரே இசைதான்' என்று மகுடி இசையை வெறுத்துத் தங்கள் கால்களுக்கிடையால் எங்காவது ஓடி விடுமோ எனப் பயந்து, அழுக்குச் சாக்கடையருகில் நிற்பது போல ஆண்கள் அன்று உடுத்திருக்கும் தங்களது புதுச் சாரனை அல்லது களிசானை, பெண்கள் தங்கள் புதுப்பாவாடையை அல்லது சேலையை முழங்காலோடு சேர்த்துப் பிடித்தவாறு ஓடுவதற்குத் தயாராக நின்றபடிதான் பாம்பாட்டியின் மகுடி வாசிப்பைக் கேட்டு அச்சத்தோடு பாம்பு நடனத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பார்கள்.

        பாம்பை விடவும் பாம்பாட்டியுடன் கூடவரும் குரங்கு அதிகமான ஆட்டத்தைக் காட்டி ரசிக்கச் செய்யும். மனிதர்களைப் போலவே சின்னச் சின்னதாய் வண்ண வண்ண ஆடை அணிந்து, சின்னதாக ஒரு தொப்பி போட்டுக் கொண்டு பல்லை இளித்தபடி ஆடும்போது சில மனிதர்களது நடனத்தை விடவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். ஒரு நீண்ட கோலைக் கழுத்தில் வைத்துக் கொண்டு திருடன், பொலிஸ் கதை சொல்லும். அதை விடப் பெரிய குரங்குகள்தான் பொலிஸில் இருப்பதாலோ என்னமோ அக் கதையில் மட்டும் எப்பொழுதும் திருட்டுப்பயலின் கதாபாத்திரம்தான் குரங்குக்கு வழங்கப்பட்டிருக்கும். அதுவும் தலையில் பானை திருடிப் போவது போலவும் பிறகு பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு பொலிஸ் தன்னைக் கைது செய்து கொண்டு போவது போலவும் நடித்துக் காண்பிக்கும். இப்பொழுதெல்லாம் கைது செய்யப்பட்டுப் பல்லிளித்துக் கையசைத்துச் செல்லும் அரசியல்வாதிகளைப் போல நடிக்க அப்பொழுதே குரங்குக்குத் தெரிந்திருக்கிறது என்பதில்  ஆச்சரியம்தான் எனக்கு.

        இறுதியில் பாம்பினதும், குரங்கினதும் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் குரங்கு, பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தனது தொப்பியை நீட்டியபடி காசு கேட்டு வளைய வரும். அப்போது பார்த்துக் கொண்டிருந்த சில குரங்குகள் காசு போடாமலேயே பின்னால் நகர்ந்து மாயமாவதையும் கண்டிருக்கிறேன். அப்பொழுதுகளில் கூட நான் பாம்புக்கோ, குரங்குக்கோ, அவற்றின் சொந்தக்காரனுக்கோ மனதளவில் கூடத் துரோகம் செய்ததில்லை. காசு போட்டுவிட்டுத்தான் நகர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னில் நல்ல பாம்புக்கென்ன கோபமிருக்கமுடியும்?

        வந்திருந்த இன்னுமொருவர் அது மண்ணிறப் பாம்பு என்பதால் அதற்கு வேறு ஒரு பெயர் சொன்னார். பெயர் நினைவில்லை. ஆனால் அந்தப் பெயருடைய பாம்பைத் தொட்டாலே உயிர் போய்விடுமென்றார். வந்திருந்த எல்லோரும் பாம்பை நான் என் நெற்றியில் வைத்திருப்பதைப் போல என்னைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலொருவர் என்னைக் கட்டிலிலிருந்து அப்படியே தூரப் பாய்ந்து ஓடி வந்துவிடும்படி சொன்னார். அதிலொரு சிக்கலிருந்தது. கட்டிலை விட்டும் பாய வேண்டுமானால் எழுந்து கட்டிலின் மேல் ஏறி நிற்க வேண்டும். கட்டிலின் மேல் ஏறி நின்றால் தாழ்ந்த கூரையில் சத்தமாகச் சுழலும் பழங்காலத்து மின்விசிறி கழுத்தை வெட்டி முண்டமாக்கிவிடுமென ஐயப்பட்டேன். அதனால் அதுவும் சாத்தியமாகவில்லை.

        முன்னொரு முறை தயிர்க்கார மாமி வீட்டுப் பெண்ணை இப்படித்தான் ஒரு மண்ணிறப் பாம்பு தீண்டிவிட்டது. அந்த மாமி வீடு அடுத்த ஊரிலிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பத்துநிமிட சைக்கிள் பயண தூரம். மாமியென்றால் சொந்த, இரத்தபந்த உறவுமுறை மாமி ஏதும் இல்லை. கிராமங்களில் அப்படித்தான் ஊர் மக்களை, தெரிந்தவர்களை  ஏதாவது உறவு முறை வைத்து அழைக்கவே பழக்கப்பட்டிருந்தோம். அதனால் நாம் அவரை மாமி என்றழைத்தோம். அத்தோடு இன்னுமொரு காரணம் இருந்தது. அந்த மாமிக்கு ஒரு அழகான, எங்களை விடவும் இளவயதில் ஒரு மகளிருந்தாள். அந்த விதவை மாமி தனது மகளோடு எங்கோ தூரத்திலிருந்து வந்து, அடுத்த ஊரிலிருந்த தன் தம்பி வீட்டில் தங்கியிருந்தார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமலோ, அல்லது வருமானத்துக்கென்றோ தயிர் தயாரித்து விற்கத்தொடங்கியிருந்தார். மண் சட்டிகளில் நிரப்பி வீட்டுத் திண்ணையிலிருந்த கண்ணாடி அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தயிரை அவரது மகள்தான் விற்பாள். மாமிக்குக் கணக்கு வழக்குத் தெரியாது. அப்படியொரு அழகான பெண் அடுத்த ஊரில் தயிர் விற்கிறாளெனக் கேள்விப்பட்டதும் நானும், எனது நண்பர்கள் இருவரும் சைக்கிள்களில் ஒருமுறை அந்த ஊருக்குப் போய் அவளது வீட்டுமுன்பிருந்த தெருவில் சுற்றி அவளைப் பார்த்துவந்தோம்.

        முழுக்க முழுக்கத் தயிரும் வெண்ணையும் நெய்யும் மட்டும் தின்றே வளர்ந்திருப்பாளோ என எண்ண வைக்கும்படியான மிக அழகான நிறம். கூர்மையான விழிகள். நல்ல கறுப்புப் பட்டுத் தாவணியின் நுனிகள் இரண்டில் முடிச்சுக்களிட்டு நேராகக் கொடியில் காயப்போட்டது போல ஒரு சுருக்கம் கூட இல்லாமல் நீண்ட அழகிய, அடர்த்தியான கூந்தல். இந்த மாதிரியான கூந்தல் சீனப்பெண்களுக்கே வாய்க்கக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அவிழ்த்து விட்டிருந்தாள். அவளைப் பார்த்த கணம் முதல் நாங்கள் மூவரும் அவளைக் காதலிக்கத் திட்டமிட்டோம். தனக்குத்தானெனச் சொல்லி அப் பதின்ம வயதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டோம். இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்தோம். மூவரும் போய் தினமும் அவளை வளைய வருவதும், அவள் யாரை விரும்புகிறாளோ அவனுக்கு மற்றவர்கள் விட்டுக் கொடுக்கவேண்டுமெனவும் ஒற்றுமையாகத் தீர்மானமெடுத்துக் கொண்டோம்.

         எங்களூருக்கு கிழமைக்கு ஒரு முறை தயிர்க்காரன் வருவான். ஊரிலுள்ளவர்கள் அவனிடமே எப்பொழுதும் தயிர் வாங்கிக்கொள்வார்கள். கடனுக்கும் தந்துசெல்வான். மாதம் முடியப் பணம் கொடுப்போம். கத்தியால் வெட்டியெடுக்கும்படியான நல்ல, சுத்தமான கெட்டித்தயிர். அப் பெண்ணைப் பார்க்கப் போகவேண்டுமென்றால், அவளுடன் பேச வேண்டுமென்றால் அவர்களிடம் போய் தயிர் வாங்கவேண்டும். தயிர்க்காரனிடம் வாங்கிப் பழகிப் போயிருந்த எனது வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும் அப் பெண்கள் தயாரித்து விற்கும் தயிரை வாங்கத் தயாரில்லை. அப்பொழுதுதான் நாங்கள் தயிர்க்காரனுக்கு ஒரு துரோகம் செய்தோம். தான் தயாரிக்கும் தயிர் கெட்டியாக, கிழவன் ஏதோ தீயதைக் கலக்கிறானென ஊருக்குள் பரப்பிவிட்டோம். கிணற்றடியிலிருந்த ஒரு வாயாடிக் கிழவியிடம் 'அது உண்மையா?' என்பதுபோல விசாரித்தும் பார்த்தோம். அதன்பிறகு அவ் வதந்தி இலகுவாக ஊருக்குள் பரவிவிட்டது.

        இப்பொழுது எனது வீட்டுக்கு, அயல் வீட்டுக்கு, இன்னும் ஊருக்குள்ளிருந்த சில சொந்தக்கார வீடுகளுக்கென்று தயிர் வாங்கிவரும் பொறுப்பை நானெடுத்துக் கொண்டேன். அப்படியே நண்பர்களும் ஒவ்வொரு வீடாகப் பொறுப்பெடுத்திருந்தார்கள். மூவரும் தினமும் வேளைக்கொருவராகப் போய் தயிர் வாங்கி வந்துகொடுத்துச் சமூக சேவையாற்றிக் கொண்டிருந்தோம். நான் தயிர் வாங்கப் போகும்வேளை எப்பொழுதுமே முறைத்துப் பார்த்தபடி அவளது மாமாவும் கூடவே இருப்பார். அவள் ஏதாவது புத்தகம் வாசித்தபடி இருப்பாள். என்னைக் கண்டதும் மெலிதாகச் சிரித்தபடியே, காசை வாங்கிக் கல்லாவில் போட்டு விட்டுத் தானியங்கிக் கதவைப் போலத் திரும்பி தயிர்ச் சட்டிகளை அலுமாரியிலிருந்து எடுத்துவைப்பாள். மாமா அதை நாரில் கட்டிப் பின் சைக்கிளின் பின்பகுதியில் பிணைத்துத் தருவார். இனி எடுத்துக் கொண்டு வரவேண்டியதுதான். சைக்கிளில் ஏறும் கணத்தில் அவளைப் பார்ப்பேன். அவள் என்னைக் கண்டுகொள்ளாமல் திரும்பவும் புத்தகத்துக்குள் மூழ்கிப் போயிருப்பாள். அவள் முதுகுக்கும் கதிரைக்கும் சிக்காத தலைமுடியில் சில காற்றிலாடி நாளைக்கும் வா என்கும்.

        இவ்வளவுதான் எனக்கும் அவளுக்கும் நடந்திருக்கும். ஆனால் இரவில் நண்பர்கள் மூவரும் கூடிக் கதைக்கும்பொழுது இச் சம்பவத்துக்குள் பல பொய்கள் வந்துவிழும். அந்தப் பெண் தனியே இருந்தாள் என்றும், என்னைப் பார்த்துச் சிரித்தாள் என்றும் என்னை விரும்புவதாகச் சொன்னாளெனவும் நான் சொல்வேன். நண்பர்களும் இதேபோலக் கதையளப்பார்கள். அவள் தனக்குத்தானென ஒவ்வொருவரும் உள்ளுக்குள் மருகி  சிலிர்த்துக் கொள்வோம். இப்படிச் சில நாட்கள் கழிந்திருக்கும். ஒருநாள் தயிர் வாங்கப் போனவேளை அவளில்லை. தயிரும் அன்று விற்கப்படவில்லை. என்றுமே வெளியில் வந்து கண்டிராத அவளின் தாய், அன்று வெளியே வந்தார். கோட்டுப் போல மெலிந்த அந்த மனுஷி வெளியே வந்து தன் மகளை விஷப்பாம்பு கொத்திவிட்டதென்றும் நாட்டுமருந்துக்கும் விஷம் இறங்காமல் நகரத்திலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலையோடு சொன்னார். நான் சைக்கிளை மூச்சு வாங்க வாங்க வேகமாக மிதித்துவந்து நண்பர்களிடம் தகவலைப் பரிமாறினேன்.

        அவர்களும் பதறிப்போனார்கள். நாங்கள் மூவரும் பஸ் பிடித்து வைத்தியசாலைக்குப் போய் அவளைப் பார்த்துவருவது எனத் தீர்மானித்துக் கொண்டோம். அவ்வேளை ஊருக்குள் பஸ் காலையும் மாலையும் மட்டுமே வந்துபோகும். நாங்கள் அடுத்த நாள் காலை பஸ் பிடித்துப் போய்க் காத்திருந்து நோயாளர் பார்வை நேரத்தில்  வைத்தியசாலைக்குள்ளே போனோம். முறைத்துப் பார்த்தபடி மாமா நின்றிருந்தால் தற்செயலாக, வேறு யாரையோ பார்க்கவந்தது போல காட்டிக் கொள்ளவேண்டுமென முன்பு பேசிக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக அவள் மட்டுமே அங்கு இருந்தாள். மிகுந்த கரிசனையோடு வந்திருக்கும் எங்களைப் பார்த்ததும் ஒருவித வெட்கத்தோடு புன்னகைத்தாள். எழுந்து உட்கார முயற்சித்தாள். விடிகாலையில் மாட்டிடம் பால் கறக்கும் போது ஏதோவொரு மண்ணிறப் பாம்பு அவள் காலைக் கொத்திவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்றுதான் அவளது குரலைக் கேட்டோம். மிக இனிமையான குரல்.

        நாங்கள் மூவரும் எதிர்பார்க்காச் சமயம் கையில் தேனீர்ப் போத்தலோடு நன்கு வளர்ந்து, உயர்ந்த, திடகாத்திரமான ஒரு இளைஞன் எங்களருகில் வந்து நின்றான். அவள், எங்களை 'ஒரு ஊருக்கே தயிர் வாங்க வருபவர்கள்' என அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் புன்னகைத்தான். பிறகு எங்களிடம் அவள், அவர் தன் மாமாவின் மகன் என்றாள். அவளைத் திருமணம் செய்யப்போகிறவர் என்றாள். எங்கள் மூவர் முகமும் பேயறைந்து வாடிப் போயிற்று. மாமாவின் முறைத்த கண்கள் இப்பொழுது அவன் முகத்திலிருந்தது போலப்பட்டது. அன்று அவளிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்த நாங்கள் 'அந்த விஷப் பாம்பு ஏன் அவனைக் கொத்தியிருக்கக் கூடாது?' எனப் பாம்பின் மேல் கோபப்பட்டோம். அதன்பிறகு அந்த ஊர்ப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. திரும்பவும் தயிர்க்காரக் கிழவன், கெட்டித் தயிரோடு ஊருக்குள் வந்துபோகத் தொடங்கினான்.

        இப்பொழுது கட்டிலடியில் ஒளிந்திருப்பது தண்ணீர்ப் பாம்பென்றால் அவ்வளவு பயம் இல்லை. தண்ணீர்ப் பாம்புக்கு அவ்வளவு விஷமில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தண்ணீருக்குள் இருக்கும் போது அது தீண்டினால் கரைக்கு வந்துவிட வேண்டுமென்றும், கரையிலிருக்கும்போது தீண்டினால் தண்ணீருக்குள் இறங்கிவிட வேண்டுமென்றும் ஊரில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரிந்த நண்பனொருவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீர்ப் பாம்பொன்று கால் சுண்டு விரலைத் தீண்டிவிட்டது. உடனே கரைக்கு ஏறித் துடைத்தது பாதி, துடைக்காதது மீதியென அவசர அவசரமாக உடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினான். 'பயப்படாதடா..விஷமெல்லாம் இப்ப இறங்கியிருக்கும்டா' என்று சொல்லச் சொல்லக் கேட்காமல் 'போற உசுரு வீட்லயே போகட்டும்' என்று வீட்டுக்கு ஓடிப் போனான். பிறகு உடனே வைத்தியரிடம் போய் ஊசியெல்லாம் போட்டுக் கொண்டான். அதுபோல இப்பொழுது ஒரு ஊசியோடு போகுமென்றால் பயப்படாமல் நிலத்தில் காலை வைக்கலாம். உயிரோடு போகுமென்றால் எப்படிக் காலைக் கீழே வைப்பது? அதில் வேறு தங்கை போட்டு விட்டுப் போன தும்புத்தடி, பாம்பைப் போலவே உருவெடுத்துத் தோன்றிக் கொண்டிருந்தது.

        அறை முழுதும் பெற்றோல் வாசனையைப் பரவவிட்டால் ஒளிந்திருக்கும் பாம்பு எங்கிருந்தாலும் வெளியே ஓடி வந்துவிடுமென ஒருவர் சொன்னார். அந்த விடிகாலையில் நகரத்துக்கு ஓடிப்போய் பெற்றோல் வாங்கிவருவது சாத்தியப்படாது என்பதனால் அந்த யோசனை கைவிடப்பட்டு எனது அறை காப்பாற்றப்பட்டது. 'சரி..பெற்றோலுக்குப் பதிலாக மண்ணெண்ணைய் பாவிப்போம்' என இன்னொருவர் கூறினார். மண்ணெண்ணைய் வீட்டிலிருந்தது. இப்பொழுது மண்ணெண்ணையை எப்படி அறை முழுதும் ஊற்றுவதா, விசிறுவதா, தெளிப்பதா எனச் சிறிய ஆலோசனை நடந்தது. இறுதியில் நீண்ட மூங்கில் கழியொன்றின் முனையில் ஒரு புடவையைச் சுற்றி அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கட்டிலுக்கடியில் அங்குமிங்குமாக ஆட்டினால் ஒளிந்திருக்கும் பாம்பு, அதன் வாடை தாங்காமல் எப்படியும் வெளியே ஓடிவந்துவிடுமெனும் முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கும் முதலில் வாசலில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். பிறகு வாசலின் இரட்டைக் கதவில் ஒன்று மூடப்பட்டு மற்றதன் அருகில் மண்ணெண்ணெய்ப் புடவையை எதிர்முனையில் சுற்றியிருந்த நீண்ட கழியை வைத்தபடி ஒருவர் குந்திக் கொண்டிருந்தார். யன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருந்ததால் வெளியேறும் பாம்பு எப்படியும் கதவு வழியாகத்தான் வருமென அவர் ஓடத்தயாராக இருந்தபடியேதான் அக் கழியை கட்டிலடிக்கு அனுப்பி ஆட்டிக் கொண்டிருந்தார். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலால் ஆட்டியும் பாம்பு வரவில்லை. எனக்குத்தான் அந்த வாசனைக்கு மூக்கரித்துக் கொண்டிருந்தது.

        'அதுதான் முன்பே சொன்னேன்..பாம்புக்கென்ன மோப்பம் புடிக்கிற சக்தியா இருக்கு?' என்றபடி வேறொருவர் முன்னே வந்தார். அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்தான். 'அப்போ மகுடிச் சத்தம் கேட்டா மட்டும் அது ஆடுதே..அதுக்கென்ன காதா இருக்கு?' என்று திருப்பிக் கேட்டார் கழியை வைத்திருந்தவர். 'இப்படிச் சும்மா கதைச்சுக்கொண்டிருக்காம ஆக வேண்டியதைப் பார்ப்போம்' என்றார் ஆலோசனைக் கூட்டத்தின் மற்றவர். அவர் எனது அப்பா. அப்பாவுக்கு பாம்புடனான அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். இருந்திருக்கின்றன என அவரே சொல்லியுமிருக்கிறார். அவரது சிறிய வயதிலெல்லாம் ஊரில் இந்தளவுக்கு நெருக்கமாக வீடுகளோ, கடைகளோ இருந்ததில்லையாம். வீட்டுக்கு முன்னாலுள்ள வயல்..அதைத்தாண்டிக் காடு..அதையும் தாண்டினால் தூரத்தே தெரியும் மலை. முன்னரெல்லாம் காட்டுக்குள் இரவு நரிகள் ஊளையிடுவது கேட்குமாம். ஊருக்குள் கோழிகளை வேட்டையாட காட்டுப் பூனைகள் வந்து போகுமாம். இப்பொழுதும் மலை இருக்கிறது. காடுமில்லை. வயலுமில்லை.

        அப்பொழுது அப்பம்மாவுக்குச் சொந்தமான பெரிய வயலில் ஒரு பெரிய, நீள நாகம் இருந்திருக்கிறது. அதைக் காவல் நாகமென அப்பா சொன்னார். அது நீளமானது. எலிகளிலிருந்தும், இன்னும் விஷ ஜந்துகளிலிருந்தும், திருடர்களிடமிருந்தும் அவ் வயலைக் காத்து வந்தது. தண்ணீர் செல்லும் வாய்க்காலின் மூலையொன்றில் படுத்து ஓய்வெடுக்கும் அதனை அப்பா நிறையத் தடவை பார்த்திருக்கிறார். அவரை அது எதுவும் செய்யாதாம். அந்த வயலுக்குச் சொந்தக்காரர்களை அது எதுவுமே செய்யாதாம். பல பரம்பரைகளாக அது இருந்து வந்ததாம். பிறகு அப்பம்மா, அப்பாவுக்கு அவ் வயலை எழுதிக் கொடுத்த பொழுதும் அங்கேயே இருந்திருக்கிறது. அப்பா, அப்பம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வயலை மூடி, மண் நிரப்பி, கட்டிடங்கள் கட்ட விற்ற பின்னர் ஓர் நாளில் அப் பாம்பு அவ் வாய்க்காலில் செத்துக் கிடந்ததாம். அது செத்த அன்று அப்பம்மா சாப்பிடக் கூட இல்லையாம். அன்றோடு வயலுக்கும் காவலற்றுப் போயிற்று. இயற்கைக்கும் காவலற்றுப் போயிற்று.

        இப்பொழுது திரும்பவும் ஆலோசனைக் கூட்டம் கூடியிருந்தது. 'ஒரு கீரிப் பிள்ளையை அறைக்குள்  விட்டால் அது பாம்பை எப்பாடு பட்டேனும் வெளியே இழுத்துக் கொண்டுவந்து விடும் ' என தெருமுனைப் பெரியவர் சொன்ன யோசனைதான் அந்த யோசனைகளிலேயே மிகவும் அபத்தமான யோசனையாகப்பட்டது. பாம்புக்கு நிஜமாகவே காதிருந்தால், அதற்கும் நம் மொழி தெரிந்திருந்தால் ஊர்ந்து ஊர்ந்து சிரித்திருக்கும்.

        அறைக்குள் பாம்பு எப்படி வந்திருக்குமென பெண்கள் கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததுவும் வேடிக்கையாக இருந்தது. சிலர் விறகுக் கட்டுடன் சில சமயம் காட்டுப் பாம்புகள் சேர்ந்து வருமென்றார்கள். அப்படி ஒரு சமயம் அதைச் சொல்லிக் கொண்டிருந்த பெண்ணின் மாமியாரை விறகுக்கட்டோடு வந்த ஒரு பாம்பு கடித்துவிட்ட செய்தியை பாம்புக்கு நன்றி கலந்த புன்னகையோடு பகிர்ந்துகொண்டாள். பிறகு பாம்புதான் செத்ததாம். மாமியாரே அதை அடித்துக் கொன்றுபோட்டாராம். அப்போது அவர் பாம்பைத் திட்டிய வசவுகளில் பாதி தனக்கென்றாள். அத்தோடு நின்றுவிடாமல் தூரத்துக்குக் கொண்டுபோய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு வந்தாராம். பாம்புகள் பற்றியெரியும் வாசனை கூட மனிதர்களுக்கு ஆகாது என அப்பெண் சொன்னாள். இச் சமயம் எங்கள் வீட்டுக்குப் புதிதாக விறகுக்கட்டு எதுவும் வந்திருக்கவுமில்லை. இப் பாம்பெப்படி வந்திருக்கும்?

        அடுத்து அப்பாவுக்கு வந்த யோசனையை செயல்படுத்திப் பார்த்தார்கள். அடுத்த வீட்டுக்குப் போய் வீழ்ந்துகிடந்த தென்னமோலையின் கீற்றுக் கீற்றாக உருவியெடுத்து வந்து மூங்கில் கழியின் ஒரு முனையில் கட்டினார்கள். கதவடியில் அமர்ந்தபடி அந்த நீண்ட மூங்கில் கழியின் ஒரு முனையைப் பற்றியபடி இப்பொழுது அப்பா. மறுமுனையில் எண்ணெய்த் துணிக்குப் பதிலாக நீளநீளமான தென்னமோலைக் கீற்றுக்கள். அதன் மூலம் கட்டிலடியை அவர் கூட்டுவது போல அங்குமிங்குமாக உசுப்பிவிட்டார். அதற்குப் பலனிருந்தது. கட்டிலடியைக் கூட்டுவதற்கு இடம் விடுவோமென பாம்பு நினைத்ததோ என்னவோ வெளியே ஓடி வந்துவிட்டது. அது மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறமென இப்பொழுது நன்றாகத் தெரிந்தது.

        ஈரடியுமல்ல, ஆறடியுமல்ல. எல்லோரையும் பதைபதைக்க வைத்த அது, ஒரு அடிக்கும் குறைவாக இருந்த ஒரு புல்லுப் பாம்பு. ஒரு குஞ்சுப் பாம்பு. முற்றத்தில் உலாத்தியிருந்தால் புழு என எண்ணி மைனாப் பறவை தூக்கிப் போகக் கூடிய அளவான சின்னப்பாம்பொன்று. நேற்று முற்றத்தில் பதிக்கவென மைதானத்திலிருந்து சதுரம் சதுரமாக  வெட்டிக் கொண்டு வந்து சுவரோரமாகப் போட்டிருந்த சிறு புல்லுப் பாத்தித் துண்டுகளோடு சேர்ந்து வந்துவிட்டிருக்கிறது. பின்னர் தனித்திருக்கப் பயந்து முன்னிரவில் யன்னல் வழியே அறைக்குள்ளே வந்து விட்டிருக்கிறது.

        வாசலடியிலிருந்தவர்கள் கூப்பாடு போட்டபடி அப் பாம்பு ஓட வழி விட்டார்கள். அடியடா..பிடியடா எனச் சத்தங்கள் வேறு. நானும் இப்பொழுது கட்டிலிருந்து தைரியமாக இறங்கிவிட்டேன். பெரும் வீரர்களைப் போல பாம்பின் பின்னாலேயே விரட்டிப் போனோம். அது ஊர்ந்து ஊர்ந்து போய் நாங்கள் என்றுமே தேடி மீளப் பெற்றுக் கொள்ளமுடியாதபடிக்கு புதுக் கட்டடங்கள் கட்டக் கொண்டு வந்து போட்டிருந்த பெரிய கருங்கல் குவியலின் இண்டு இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டது, எங்கள் வயலைப் போல.

- எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை.

45 comments:

சென்ஷி said...

அடைக்கலப் பாம்புகள் - மனதில் தங்கச்செய்து விட்டாய் ரிஷான்..

☀நான் ஆதவன்☀ said...

அருமை ரிஷான். காட்சிகளை கண் முன் விரியவைக்கிறது உங்கள் எழுத்து.

நிச்சயம் பரிசு உண்டு. வாழ்த்துகள்

Unknown said...

Superb Rishan

ராமலக்ஷ்மி said...

"அடைக்கலப் பாம்புகள்"...அடக்க முடியாத சிரிப்புடன் வாசித்தேன் ரிஷான். எதைச் சொல்ல எதை விட:)!? அத்தனை அருமையான விவரிப்பு. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!! வெற்றி நிச்சயம்.

இளைய அப்துல்லாஹ் said...

நீ நல்ல ஓரு கதைசொல்லியாக வளர்ந்திருக்கிறாய் மனதார வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறதெடா

kevinlee said...

' உங்கள் கதை பிரமாதம் ... '

விநாயக முருகன் said...

அருமை அருமை தோழரே.. வாழ்த்துக்கள். எங்கள் மனதில் தங்கிவிட்டது.

மொழி said...

அந்த பாம்பு மேல சத்தியமா உங்களுக்கு பரிசு உண்டு...:-)
அருமையான விவரிப்பு....கடைசியில் ஒரு நல்ல தொடல்..
வாழ்த்துக்கள்....
நான் பார்த்த வரை - பெற்றோல்? பெட்ரோல்..?.....

ஆர்.வேணுகோபாலன் said...

வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு உயிருள்ள பாம்பைக் கண்ட அனுபவம், ஏறக்குறைய முதல் காதல் அனுபவம் மாதிரி. எளிதில் மறக்காது. சினிமா, புத்தகம் அல்லது பரமபதசோபன படத்தைப் பார்த்தால் கூட முதல் முதலில் பார்த்த அந்தப் பாம்பு நினைவுக்கு வரும். எண்ணைக்குளியலுக்குத் தயாராகிவிட்டது போல பளபளக்கும் அதன் வழவழப்பான உடலும், கத்திரிபோல வெளியே நீளுகிற அதன் நாக்கும் உடலைச் சிலிர்க்க வைக்கும். வீட்டுக்குள்ளே பாம்பிருக்கிறது என்று தெரிந்து விட்டால், நடந்து போவதா, துள்ளித்துள்ளிப் போவதா என்று குழப்பம் வரும். சுருக்கமாகச் சொன்னால் பாம்பைப் பார்க்கிற பெரும்பாலானோருக்கு முதல் முதலில் ஏற்படுவது மரணபயம் தான். கதையைப் படிக்கிறபோது பாம்பைக் கண்டு பயந்து ஓடிய எனது பிள்ளைப்பருவம் நினைவுக்கு வந்தது. அட்டகாசம் போங்கள்!

தமிழன் வேணு

ஆர்.வேணுகோபாலன் said...

வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு உயிருள்ள பாம்பைக் கண்ட அனுபவம், ஏறக்குறைய முதல் காதல் அனுபவம் மாதிரி. எளிதில் மறக்காது. சினிமா, புத்தகம் அல்லது பரமபதசோபன படத்தைப் பார்த்தால் கூட முதல் முதலில் பார்த்த அந்தப் பாம்பு நினைவுக்கு வரும். எண்ணைக்குளியலுக்குத் தயாராகிவிட்டது போல பளபளக்கும் அதன் வழவழப்பான உடலும், கத்திரிபோல வெளியே நீளுகிற அதன் நாக்கும் உடலைச் சிலிர்க்க வைக்கும். வீட்டுக்குள்ளே பாம்பிருக்கிறது என்று தெரிந்து விட்டால், நடந்து போவதா, துள்ளித்துள்ளிப் போவதா என்று குழப்பம் வரும். சுருக்கமாகச் சொன்னால் பாம்பைப் பார்க்கிற பெரும்பாலானோருக்கு முதல் முதலில் ஏற்படுவது மரணபயம் தான். கதையைப் படிக்கிறபோது பாம்பைக் கண்டு பயந்து ஓடிய எனது பிள்ளைப்பருவம் நினைவுக்கு வந்தது. அட்டகாசம் போங்கள்!

தமிழன் வேணு

ஃபஹீமாஜஹான் said...

"நான் கட்டிலில் மேற்சட்டையின்றி இருந்ததால் எல்லோரின் முன்பும் இயல்பாக வந்த ஒரு கூச்சத்தோடு காய்ச்சல் கண்டவனைப் போல போர்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தேன்."
" வந்திருந்த எல்லோரும் பாம்பை நான் என் நெற்றியில் வைத்திருப்பதைப் போல என்னைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்."

"கிணற்றடியிலிருந்த ஒரு வாயாடிக் கிழவியிடம் 'அது உண்மையா?' என்பதுபோல விசாரித்தும் பார்த்தோம். அதன்பிறகு அவ் வதந்தி இலகுவாக ஊருக்குள் பரவிவிட்டது."

"நானும் இப்பொழுது கட்டிலிருந்து தைரியமாக இறங்கிவிட்டேன். பெரும் வீரர்களைப் போல பாம்பின் பின்னாலேயே விரட்டிப் போனோம்."

ரிஷான்,
கதையோட்டத்துடன் நகைச்சுவை உணர்வுடனான இப்பகுதிகளும் கச்சிதமாகக் கையாளப்படடுள்ளன.
வாழ்த்துக்கள்.

Kavinaya said...

அருமை ரிஷு! பாம்பில் தொடங்கி, பாம்பாட்டியிடம் சென்று, தயிர்க்காரப் பெண்ணுடன் காதலில் தொடர்ந்து, இப்படியாக, சங்கிலித் தொடராய் நிகழ்வுகளைத் தொட்டுச் சென்ற விதம் வெகு அழகு!

Unknown said...

superb rishan

Sakthy said...

கதை அருமை ரிஷான் ..கதையோடு இயல்பாகவே உங்கள் நகைச்சுவை உணர்வும் கலந்து காட்சிகளை கண் முன் விரியவைக்கிறது .. எங்கே இருந்து இந்த கரு முளைத்து உங்களுக்குள் இப்போது ? சொந்த அனுபவமா இல்லை புகைப் படத்தில் இருந்து கதை உதயமானதா? எப்படி இருந்தாலும் பாவம் நீங்க மட்டும் அல்ல... அந்தப் குட்டிப் பாம்பும் தான்.

ஒளியவன் said...

ஒரு சிறு நிகழ்வை, அதுவும் ஒற்றை வரியில் சொல்லக் கூடியதை சிறுகதையாக்கியது அருமை.

geethasmbsvm6 said...

அருமையாக யதார்த்தமான நிகழ்வுகளைச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள். பாம்புகள் இங்கே அடிக்கடி வந்து போயிட்டு இருக்கிறதாலே அவ்வளவு பயம்னு சொல்ல முடியலை, கொஞ்சம் சிரிப்பாவே இருந்தது. அதிலும் இந்த ஒரு கதையிலேயே காதல், வீரம், ஹாஸ்யம், பயம், கேலி என அனைத்தையும் சொல்லிட்டீங்க.

Begum said...

அன்பு ரிஷான்

அருமை...வாழ்த்த வார்த்தையில்லை. ஒரு வித்தியாசமான கதை படித்த மகிழ்வு என் மனதில். வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆயிஷா

கோபிநாத் said...

அருமையான நடை ரிஷான்...வாழ்த்துக்கள் ;)

ஆல்பர்ட் said...

அன்பினிய ரிஷான்,
அருமையான கதை நகர்த்தல்;ஒவ்வொன்றையும்
நகர்த்திய பாங்கில் அந்த நிகழ்வை கண்ணுக்குள்
நிழலாடச் செய்துவிட்டீர்கள். திரைப்படத்தில் காட்சிகள்
விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல ஒரு காதல், ஒரு
சணடை, நகைச்சுவை என்று புகுத்திச் செல்லும் உத்திபோல‌
தயிர்க் காதல்,அதில் வரும் மாமா வில்லன்,மாமியை பாம்பு
கடித்ததை விவரிக்கும் மருமகள்,என்று ஒவ்வொன்றையும் ரசனையோடு
இட்டுச் சென்றுள்ளது .....அட அந்தப் பாம்பு என்ன ஆனது என்ற ஆவலோடு
வாசகனை தொடர்ந்த வாசிப்புக்கு உட்படுத்தும் விதம் பாராட்டும்படியுள்ளது.

இந்தக் கதையைப் படித்ததும் எனக்கும் இதுபோன்ற ஒரு
கிராமத்து வீட்டுக் கட்டிலில் படுத்திருந்தபோது 6 அடி நீளமுள்ள‌
நல்ல பாம்பு காலிலிருந்து தலை முழுக்க மூடிப்படுத்திருந்த என் மீது ஊர்ந்ததும்
அசையாமல் அச்சத்தோடு படுத்திருந்தது... 7ம்வகுப்பு படிக்கும்போது
இரவு திண்ணையில் கிடந்த பாம்பின் தலை மீது கால் வைத்து
இரண்டுநாள் காய்ச்சலோடு கிடந்தது....குளிக்க கிணற்றுக்குச் சென்றபோது
கிணற்றுப் பாறையில் இரண்டு தண்ணீர் பாம்புகள் படுத்திருந்ததும்
ஆளரவம் கேட்டு சல்லென்று தண்ணீருக்குள் தாண்டிய பாம்புகளுக்குப் பின்
பயந்துகொண்டே குளித்ததும்... அமெரிக்கா வந்து மூன்று முறை
சுதந்திரமாக உலவிய பாம்புகளைக் கண்டது....ம்ம்ம்ம்ம் என்
சுயபுராணம் நீண்டுவிடும்போல....என் மலரும் நினைவுகளைக்
கிளப்பிய உங்கள் "அடைக்கலப் பாம்புகள்" வாசகர்கள் அனைவருக்கும்
பிடிக்கும்.....முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள், ரிஷான்.
மிக்க அன்புடன்,
ஆல்பர்ட்,
அமெரிக்கா.

M.Rishan Shareef said...

அன்பின் சென்ஷி,

//அடைக்கலப் பாம்புகள் - மனதில் தங்கச்செய்து விட்டாய் ரிஷான்..//

பதிவுக்கு முதல் ஆளாக வந்திருக்கிறீர்கள். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நான் ஆதவன்,

//அருமை ரிஷான். காட்சிகளை கண் முன் விரியவைக்கிறது உங்கள் எழுத்து.

நிச்சயம் பரிசு உண்டு. வாழ்த்துகள்//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜ்ஜு,

//Superb Rishan//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//"அடைக்கலப் பாம்புகள்"...அடக்க முடியாத சிரிப்புடன் வாசித்தேன் ரிஷான். எதைச் சொல்ல எதை விட:)!? அத்தனை அருமையான விவரிப்பு. என் மனமார்ந்த பாராட்டுக்கள்!! வெற்றி நிச்சயம்.//

முன்னைய கதை ஒரே சோகமாக இருந்ததால் இதனை நகைச்சுவை நடையில் முயன்றேன். சிரிக்கவைத்ததில் மகிழ்ச்சி. :)

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் அனஸ் நானா,

//நீ நல்ல ஓரு கதைசொல்லியாக வளர்ந்திருக்கிறாய் மனதார வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறதெடா//

உங்கள் கருத்து என்னைப் பெரிதும், தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது. மகிழ்வைத் தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நானா !

M.Rishan Shareef said...

அன்பின் கெவின் லீ,

//' உங்கள் கதை பிரமாதம் ... '//

நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் என்.விநாயகமுருகன்,

//அருமை அருமை தோழரே.. வாழ்த்துக்கள். எங்கள் மனதில் தங்கிவிட்டது.//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மொழி,

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//அந்த பாம்பு மேல சத்தியமா உங்களுக்கு பரிசு உண்டு...:-)
அருமையான விவரிப்பு....கடைசியில் ஒரு நல்ல தொடல்..
வாழ்த்துக்கள்....
நான் பார்த்த வரை - பெற்றோல்? பெட்ரோல்..?.....//

பெற்றோல் எனும் சொல்லையே இலங்கையில் பயன்படுத்துகிறார்கள். அதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன் வேணு,

//வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு உயிருள்ள பாம்பைக் கண்ட அனுபவம், ஏறக்குறைய முதல் காதல் அனுபவம் மாதிரி. எளிதில் மறக்காது. சினிமா, புத்தகம் அல்லது பரமபதசோபன படத்தைப் பார்த்தால் கூட முதல் முதலில் பார்த்த அந்தப் பாம்பு நினைவுக்கு வரும். எண்ணைக்குளியலுக்குத் தயாராகிவிட்டது போல பளபளக்கும் அதன் வழவழப்பான உடலும், கத்திரிபோல வெளியே நீளுகிற அதன் நாக்கும் உடலைச் சிலிர்க்க வைக்கும். வீட்டுக்குள்ளே பாம்பிருக்கிறது என்று தெரிந்து விட்டால், நடந்து போவதா, துள்ளித்துள்ளிப் போவதா என்று குழப்பம் வரும். சுருக்கமாகச் சொன்னால் பாம்பைப் பார்க்கிற பெரும்பாலானோருக்கு முதல் முதலில் ஏற்படுவது மரணபயம் தான். கதையைப் படிக்கிறபோது பாம்பைக் கண்டு பயந்து ஓடிய எனது பிள்ளைப்பருவம் நினைவுக்கு வந்தது. அட்டகாசம் போங்கள்! //

மிகச் சரி.. மற்ற எல்லாவற்றையும் விட பாம்புக்கு எல்லோரும் பயந்துவிடுகிறோம். அதன் வேகமும் விஷமும் காரணமாக இருக்கலாம். அவ்வளவு பெரிய யானையைக் கூட ஆறுதலாகப் பார்த்து ரசிக்கும் நாம், சின்னஞ் சிறு பாம்பைக் கண்டு விட்டால் தப்பி ஓடி விட வழி தேடுகிறோம். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//"நான் கட்டிலில் மேற்சட்டையின்றி இருந்ததால் எல்லோரின் முன்பும் இயல்பாக வந்த ஒரு கூச்சத்தோடு காய்ச்சல் கண்டவனைப் போல போர்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தேன்."
" வந்திருந்த எல்லோரும் பாம்பை நான் என் நெற்றியில் வைத்திருப்பதைப் போல என்னைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்."

"கிணற்றடியிலிருந்த ஒரு வாயாடிக் கிழவியிடம் 'அது உண்மையா?' என்பதுபோல விசாரித்தும் பார்த்தோம். அதன்பிறகு அவ் வதந்தி இலகுவாக ஊருக்குள் பரவிவிட்டது."

"நானும் இப்பொழுது கட்டிலிருந்து தைரியமாக இறங்கிவிட்டேன். பெரும் வீரர்களைப் போல பாம்பின் பின்னாலேயே விரட்டிப் போனோம்."

ரிஷான்,
கதையோட்டத்துடன் நகைச்சுவை உணர்வுடனான இப்பகுதிகளும் கச்சிதமாகக் கையாளப்படடுள்ளன.
வாழ்த்துக்கள்.//

ம்ம்..பெரிதாகப் போடப்பட்டிருந்த இந்தக் கதைக்கான பாம்புப் படத்தை, பார்க்கப் பயமாக இருப்பதால் சின்னதாகப் போடும்படி கட்டளையிட்ட ஆள் நீங்கள். உங்கள் தைரியம் பாராட்டத்தக்கது. :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//அருமை ரிஷு! பாம்பில் தொடங்கி, பாம்பாட்டியிடம் சென்று, தயிர்க்காரப் பெண்ணுடன் காதலில் தொடர்ந்து, இப்படியாக, சங்கிலித் தொடராய் நிகழ்வுகளைத் தொட்டுச் சென்ற விதம் வெகு அழகு!//

:)
நம்ம வாழ்க்கையும் அப்படித்தானே? அதனால்தான்..இதில் சில அனுபவங்களும் கலந்திருக்கு. :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் மஞ்சுளா,

//superb rishan//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//கதை அருமை ரிஷான் ..கதையோடு இயல்பாகவே உங்கள் நகைச்சுவை உணர்வும் கலந்து காட்சிகளை கண் முன் விரியவைக்கிறது .. எங்கே இருந்து இந்த கரு முளைத்து உங்களுக்குள் இப்போது ? சொந்த அனுபவமா இல்லை புகைப் படத்தில் இருந்து கதை உதயமானதா? எப்படி இருந்தாலும் பாவம் நீங்க மட்டும் அல்ல... அந்தப் குட்டிப் பாம்பும் தான்.//

சொந்த அனுபவம்தான்.புகைப்படம் பின்னர் தேடி எடுத்தேன்.எனது பால்யத்தில் வீட்டுக்கு முன்னால் சிறு வயலிருந்தது. இப்பொழுது அதிலெல்லாம் பல மாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன . :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி.

M.Rishan Shareef said...

அன்பின் ஒளியவன் பாஸ்கர்,

//ஒரு சிறு நிகழ்வை, அதுவும் ஒற்றை வரியில் சொல்லக் கூடியதை சிறுகதையாக்கியது அருமை.//

:)
வாழ்வின் ஒவ்வொரு கணங்களும் கூட ஒவ்வொரு நிகழ்வுகளால் ஆனதுதானே? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் கீதா சாம்பசிவம்,

//அருமையாக யதார்த்தமான நிகழ்வுகளைச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள். பாம்புகள் இங்கே அடிக்கடி வந்து போயிட்டு இருக்கிறதாலே அவ்வளவு பயம்னு சொல்ல முடியலை, கொஞ்சம் சிரிப்பாவே இருந்தது. அதிலும் இந்த ஒரு கதையிலேயே காதல், வீரம், ஹாஸ்யம், பயம், கேலி என அனைத்தையும் சொல்லிட்டீங்க.//

பாம்புகள் அங்கே அடிக்கடி வந்துபோகுமா? நீங்கள் சொல்லும்போதே உடல் சிலிர்க்கிறது. இலேசாகச் சொல்கிறீர்கள். தைரியசாலி தான் நீங்கள் :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஆயிஷா,

//அன்பு ரிஷான்

அருமை...வாழ்த்த வார்த்தையில்லை. ஒரு வித்தியாசமான கதை படித்த மகிழ்வு என் மனதில். வாழ்த்துக்கள்.

அன்புடன் ஆயிஷா//

உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. நலமா சகோதரி?

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கோபிநாத்,

//அருமையான நடை ரிஷான்...வாழ்த்துக்கள் ;)//

உங்கள் தொடர்வருகை ஊக்கம் தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஆல்பர்ட்,

//அன்பினிய ரிஷான்,
அருமையான கதை நகர்த்தல்;ஒவ்வொன்றையும்
நகர்த்திய பாங்கில் அந்த நிகழ்வை கண்ணுக்குள்
நிழலாடச் செய்துவிட்டீர்கள். திரைப்படத்தில் காட்சிகள்
விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல ஒரு காதல், ஒரு
சணடை, நகைச்சுவை என்று புகுத்திச் செல்லும் உத்திபோல‌
தயிர்க் காதல்,அதில் வரும் மாமா வில்லன்,மாமியை பாம்பு
கடித்ததை விவரிக்கும் மருமகள்,என்று ஒவ்வொன்றையும் ரசனையோடு
இட்டுச் சென்றுள்ளது .....அட அந்தப் பாம்பு என்ன ஆனது என்ற ஆவலோடு
வாசகனை தொடர்ந்த வாசிப்புக்கு உட்படுத்தும் விதம் பாராட்டும்படியுள்ளது.

இந்தக் கதையைப் படித்ததும் எனக்கும் இதுபோன்ற ஒரு
கிராமத்து வீட்டுக் கட்டிலில் படுத்திருந்தபோது 6 அடி நீளமுள்ள‌
நல்ல பாம்பு காலிலிருந்து தலை முழுக்க மூடிப்படுத்திருந்த என் மீது ஊர்ந்ததும்
அசையாமல் அச்சத்தோடு படுத்திருந்தது... 7ம்வகுப்பு படிக்கும்போது
இரவு திண்ணையில் கிடந்த பாம்பின் தலை மீது கால் வைத்து
இரண்டுநாள் காய்ச்சலோடு கிடந்தது....குளிக்க கிணற்றுக்குச் சென்றபோது
கிணற்றுப் பாறையில் இரண்டு தண்ணீர் பாம்புகள் படுத்திருந்ததும்
ஆளரவம் கேட்டு சல்லென்று தண்ணீருக்குள் தாண்டிய பாம்புகளுக்குப் பின்
பயந்துகொண்டே குளித்ததும்... அமெரிக்கா வந்து மூன்று முறை
சுதந்திரமாக உலவிய பாம்புகளைக் கண்டது....ம்ம்ம்ம்ம் என்
சுயபுராணம் நீண்டுவிடும்போல....என் மலரும் நினைவுகளைக்
கிளப்பிய உங்கள் "அடைக்கலப் பாம்புகள்" வாசகர்கள் அனைவருக்கும்
பிடிக்கும்.....முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள், ரிஷான்.//

உங்கள் நீண்ட கருத்து மனதைப் பெரும் பூரிப்புக்குள் ஆழ்த்தியது.
எல்லோருடைய வாழ்க்கையிலும் இவைபோலப் பாம்புகள் குறிக்கிடுகின்றன போலும்..அதுபோல ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை கதைகள் இருக்கும்?

உங்கள் அனுபவங்களைப் பார்த்து மிகவும் ரசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

என்னை ஊக்குவிக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

முபாரக் said...

சூப்பரா இருக்கு

பூங்குழலி said...

கதை ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்தது ரிஷான் .
பாம்பில் ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் கதையை கொண்டு சென்ற விதம் அருமை .இடையே இடையே அழகான கிளைக்கதைகள் ..
வயலின் காவல் தெய்வம் என்று பாம்பை சொல்லி விவரித்த கதை வெகு அருமை .

இந்த கிளைக் கதைகளை சொல்லுவதற்கான அடித்தளமாக பாம்பு வீட்டுக்குள் வந்ததை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .அதையும் கூட இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள் .இறுதியில் பாம்பு வெளியேறியதையும் எந்த ஒரு புனைவுகளும் இல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .வயலை போல ஒளிந்துக் கொண்டது என்பது கொஞ்சம் வலிய சேர்த்தது போல் இருந்தது .

எனக்கு இந்த கதையில் ,அதன் கிளைக்கதைகளுக்குள் நீங்கள் கதையை இட்டுச் சென்றது ரொம்ப பிடித்திருந்தது ரிஷான் .அதோடு கதையின் தலைப்பும் .....

M.Rishan Shareef said...

அன்பின் முபாரக்,

//சூப்பரா இருக்கு//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//கதை ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்தது ரிஷான் .
பாம்பில் ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் கதையை கொண்டு சென்ற விதம் அருமை .இடையே இடையே அழகான கிளைக்கதைகள் ..
வயலின் காவல் தெய்வம் என்று பாம்பை சொல்லி விவரித்த கதை வெகு அருமை .

இந்த கிளைக் கதைகளை சொல்லுவதற்கான அடித்தளமாக பாம்பு வீட்டுக்குள் வந்ததை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .அதையும் கூட இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள் .இறுதியில் பாம்பு வெளியேறியதையும் எந்த ஒரு புனைவுகளும் இல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .வயலை போல ஒளிந்துக் கொண்டது என்பது கொஞ்சம் வலிய சேர்த்தது போல் இருந்தது .

எனக்கு இந்த கதையில் ,அதன் கிளைக்கதைகளுக்குள் நீங்கள் கதையை இட்டுச் சென்றது ரொம்ப பிடித்திருந்தது ரிஷான் .அதோடு கதையின் தலைப்பும் .....//

உங்கள் விரிவான, தெளிவான கருத்து என்னை மேலும் எழுத ஊக்குவிக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

நல்லா இருக்கு ரிஷான், வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் கிருஷ்ணபிரபு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்களுக்கு,

'உரையாடல் போட்டி'க்கு அனுப்பப்பட்ட எனது 'அம்மாவின் மோதிரம்' சிறுகதைக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவ்வேளையில் இச் சிறுகதைக்கு பின்னூட்டமிட்டும், தனி மடலிலும் இக் கதை குறித்தான கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்ட அன்பான உள்ளங்கள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

parameswary namebley said...

கதை சற்று பெரிதாக இருந்தாலும், விருவிருப்பு சற்றும் குறையவில்லை.
கதையை கண் முன்னே படமாக பார்ப்பது போல ஒரு உணர்வு.
வாழ்த்துகள்.