Wednesday, December 16, 2009

நிழற்படங்கள்



            நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா?' என்ற எனது கேள்வி, இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும்? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன்.

            சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன. எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை. சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும். அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை. அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள். இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுகிறார்கள். வேறு ஏதேனும் சொல்லிச் சமாளிப்பவர்களும் இருக்கிறார்களெனினும் அந்தக் கேள்விக்கு அந்த மழுப்பல் உண்மையான பதிலென ஆகிவிடுவதில்லை.

            அவ்வளவு நேரமும் சிரிப்பும் கேலியும் கிண்டலும் மிதந்து வழிந்தபடியும், பிறக்கப்போகும் எமது குழந்தைக்கான ஆடைகள், பொருட்கள் நிரம்பியுமிருந்த அறைக்குள் சில கணங்கள் மௌனம் வந்தமர்ந்தது. 'ஏதாவது சாப்பிடுறீங்களா?' எனக் கேட்டபடி கணவர்தான் அம் மௌனத்தைக் கலைத்துவிட்டார். கணவரது நண்பர் தனது நாட்குறிப்பும் ஆடைகளுமிருந்த பெட்டியில் மீண்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் எனக்கும் கணவருக்கும் காட்டிய பாஸ்போர்ட் புகைப்பட அளவான அவரது பதினைந்து வருடங்களுக்கு முன்னரான ஓர் நாளின் ஓர் கணத்தினை உள்ளடக்கிய இளமைக்காலப் புகைப்படம் அமைதியாகக் கட்டிலில் கிடந்தது.

            கணவர் தான் அமர்ந்திருந்த கட்டிலிலிருந்து எழுந்தார். குளிரூட்டி திறந்து தோடம்பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று தோலுரிக்கத் தொடங்கினார். நண்பர் தனது நாட்குறிப்பினை எடுத்து அதன் முதல் பக்கத்தின் இடதுபுறத்திலிருந்த பொலிதீன் உறைக்குள் அப் புகைப்படத்தை வைத்துப் பத்திரப்படுத்தினார். அவர் அதில் எனது கணவரின் இப்போதைய வயதுகளில் மிகவும் இளமையாக இருந்தார். ஒரு காலத்தில் அவருக்கு முன்நெற்றியில் அடர்ந்த முடி இருந்திருக்கிறது. அவர் இன்றுதான் எமது நாட்டிலிருந்து வந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு, வந்த களைப்புப் போகக் கொஞ்சம் தூங்கியெழுந்திருந்தார். அந்தப் புகைப்படம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அதனை பாஸ்போர்ட் எடுக்கவென பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எடுத்தாராம். பின்னர் அதனையே வாகன அனுமதிப்பத்திரம் எடுக்கவும் விசாக்கள் எடுக்கவும் இன்ன பிற தேவைகளுக்கும் இன்றுவரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லிச் சிரித்தார். அப்பொழுதுதான் நான் இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்தேன்.

            இவர் வருவதைப் பற்றி கணவர் முன்னரே சொல்லியிருந்தார். எனக்கும் அவருக்கும் திருமணமாகி இன்னும் முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை. ஒரு பெரிய வீட்டுக்குள் நாமிருவரும் மட்டுமென்பதால் தினம் எம்மிருவருக்கும் பேசப் பல விடயங்கள் இருந்தன. நேற்றைய இரவு இவர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில் இருவரோ பலரோ சேர்ந்திருக்கும் இடத்தில் அங்கு இல்லாத ஒருவரது பெயரை அல்லது நிகழ்வின் முனையொன்றை சபையில் இழுத்துவிட்டால் போதும். அவரது பிறப்பு முதல் இன்று வரை தானறிந்ததெல்லாம் அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிப்படும். அவரது இதுவரையான நடவடிக்கை, நடத்தைகள் அலசப்பட்டு அங்கிருக்கும் நீதிபதிகளால் அவர் குறித்து தீர்ப்பெழுதப்படும். அதுதான் நேற்றைய இரவு எனக்கும் கணவருக்குமிடையில் நடந்தது.

            வரப்போகும் நண்பர் குறித்து சும்மாதான் இவரிடம் கேட்டுவைத்தேன். அவருக்குப் பெண் பார்க்கப் புகைப்படம் கொடுக்கும் தேவையற்று அவராகவே அனாதை விடுதியொன்றிலிருந்து தனது மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தது எனக்கு நேற்றே தெரியும். ஆனாலும் இக் கேள்வி வெளிக்கிளம்பிய சமயத்தில் அது என் நினைவில் இருக்கவில்லை. எல்லோருடைய எல்லா நிகழ்வுகளையும் கொண்ட நினைவுகளைக் காவித்திரியும்படியான மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நிச்சயமாக எனக்கு அது இல்லை.

            நான் மிகவும் மறதியானவளென அம்மா கூடச் சொல்வாள். எனது தந்தைவழி, தாய்வழி தூரத்து உறவுகளை நெடுநாட்களின் பின்னர் சந்திக்கையில் நான் பல தடவைகள் அவர்களின் பெயர்களையும் அவர்களோடு எனக்கிருக்கும் உறவுமுறைகளையும் மறந்துவிடுவேன். பிறகு வந்து அம்மாவிடம் கேட்கும்பொழுதில் அம்மா இதனைச் சொல்வாள். அப்படியே என்னிடம் தனதும் அப்பாவினதும், அவர்கள் இருபுறத்தினதும் முந்தைய உறவுமுறைகள் குறித்தும் மிகவும் பொறுமையாக விலாவாரியாக சொல்லத் தொடங்குவாள். அம்மாக்கள் எப்பொழுதுமே பழைய ஞாபகங்களின் ஊற்றுக்கள். அவ்வூற்றுக்களைக் கிளறி பழங்கதைகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

            நேற்றிரவு கணவர் இந் நண்பரது காதல் குறித்துச் சொன்னபோதும் அப்படித்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாமா மகள் மேல் அறிந்தவயது முதல் காதல். இரு வீட்டினரும் ஒன்றும் சொல்லவில்லையாம். இவரும் இவரால் இயன்றவிதமெல்லாம் அந்த வீட்டுக்கு உதவியிருக்கிறார். அந்தப் பெண் நல்ல அழகியாம். அழகான பெண்களெல்லாம் ஊரின் நிலாக்களென நினைக்கிறேன். எந்தத் தெருவில், எந்தப் பெண் அழகாக இருக்கிறாளென ஊரின் இளைஞர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். பெண்களிடமும் ஆண்கள் குறித்து இது மாதிரியான பட்டியல்கள் இருக்கின்றன.

            சொல்லவந்த விடயத்தை விட்டு வேறெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். ஏனோ எனக்கு எல்லாவற்றையும் கோர்வையாகச் சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல ஏதேனும் சொல்ல வந்து வேறொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பேன். சிறுவயது முதலே இப்படித்தான். பாலர் வகுப்பில் எனது பென்சில் திருடிக்கொண்டு போனவனை எனக்குத் தெரியும். ஆனாலும் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி அவர் அங்க அடையாளங்கள் கேட்டபோது வெள்ளைச் சட்டை, நீலக் களிசானென பள்ளிச் சீருடை குறித்துச் சொன்னேன். கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அப்பா சட்டெனச் சிரித்துவிட்டார். வார்த்தைகள் எப்பொழுதும் இப்படித்தான். மனித உணர்வுகளை உடனுக்குடன் மாற்றும் வித்தைகளை அவை அறிந்திருக்கின்றன. அவற்றின் சாவிகளைக் கொண்டிருக்கின்றன.

            அந்தப் பெண் மிகவும் அழகானவளென்பதோடு இவரை உயிருக்குயிராகக் காதலித்தாளாம். ஒரு சமயத்தில் இவருக்கு வியாபாரம் நொடித்து வெளிநாடு வர நேர்ந்ததும் இரு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் நிச்சயம் செய்துவிட்டு இவரை வெளிநாடு அனுப்பிவைத்திருக்கிறார்கள். அப் பெண்ணை எங்கோ கண்ட, இவரை விடவும் சொத்துக்கள் நிறைந்தவனாக இருக்கக் கூடுமானவொரு செல்வந்த இளைஞன், அவளை மணமுடிக்கவென ஆசைப்பட்டு இவரது மாமாவிடம் கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் இவரது மாமா முந்தைய நிச்சயத்தை முறித்து அவளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்து விட்டாராம். பணத்துக்கு எல்லாச் சக்தியுமுண்டென பலரும் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும். அல்லது அதனை எல்லோரும் போல நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் பணத்துக்கு அந்தச் சக்தியைத் திணிக்கிறது. பணமும், அது சார்ந்த நம்பிக்கையும் தான் பலரது வாழ்க்கையை வழிநடத்துகிறது, சீரழிக்கிறது.

            அவளுக்குத் திருமணமானதை அறிந்து இவர் மிகவும் உடைந்துபோனார். நீண்ட காலக் காதலைத் தன் நெஞ்சிலே கொண்டிருந்த அந்தப் பெண்ணும் மிகவும் மனவேதனைப் பட்டிருக்கக் கூடும். அழுதிருக்கக் கூடும். திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டேனென அடம்பிடித்திருக்கக் கூடும். பெண்ணை ஒரு விடயத்திற்கென வலியுறுத்துவது ஆணுக்கு மிக இலகுவான விடயமோ எனத் தோன்றுகிறது. அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்.

            இப்படித்தான் எனது பக்கத்துவீட்டுப் பெண்ணுக்கு அவளது காதலனை மறந்துவிடும்படி சொல்லி அவளது பெற்றோர் முதலில் நன்றாகத் திட்டிப் பார்த்தார்கள். அடித்துப் பார்த்தார்கள். அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் விஷக் குப்பியைக் கையில் வைத்தபடி அவனை மறக்காவிட்டால் தாங்கள் செத்துப் போவதாகச் சொல்லி அழுதார்கள். அதுவரை அழுது பார்த்திராத அவளது அப்பாவின் கண்ணீர் அவளை அசைத்தது. ஆண்களின் கண்ணீருக்கு இளகிவிடும் தன்மை பெண்களிடம் இருக்கிறது போலும். அடிக்கு மிரளாதவள் அன்புக்கு அடங்கிப் போனாள். பிறகு இரவு தோறும் காதல் நினைவுகள் வாட்ட, தலையணையால் கண்ணீர் துடைத்தபடிக் கிடந்தவள் அடுத்தநாள் காலையில் அதே விஷத்தைக் குடித்துச் செத்துப்போயிருந்தாள். இப்படித் தாங்களே மகளைச் சாகடித்ததற்கு அவனுடனே சேர்த்து வைத்திருக்கலாமேயென அப்பாவும் அம்மாவும் பிணத்தினைப் பார்த்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.

            பக்கத்துவீட்டுப் பெண்ணெதற்கு? எனக்கே ஒரு காதலிருந்தது. ராகுலன் என்றொருவன். நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இணையத்தில் அறிமுகம். சில நாட்கள் தொடர்ந்து பேசியதில் காதல் வந்தது. பெண்கள் தங்கள் பார்வையாலே ஆண்களைக் கவர்ந்து விடுவதைப்போல ஆண்களால் முடிவதில்லை. ஆண்களின் பார்வைக்குப் பெண்களிடம் அதிகளவான ஈர்ப்பில்லை. ஒரு பெண் நடந்துபோனால் திரும்பிப் பார்க்கும் பல ஆண்களுள் தனக்கான ஆணை மட்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமென அவள் உணர்ந்திருக்கிறாள்.ஆண்கள் பெண்களைக் கவரவேண்டுமென்றால் பேசவேண்டும். மிக அழகான வார்த்தைகள் கூட வேண்டாம். அவனது அன்பு சொரியும் இலட்சியங்களை அவளறிய வைத்தால் போதும்.

            ராகுலன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவனது இலட்சியமே ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுப்பதுதானென முதலில் சொல்ல ஆரம்பித்தபோது மிகவும் மகிழ்ச்சியாகிப் போய்விட்டது எனக்கு. புகைக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ தனக்கு கிஞ்சித்தேனும் இல்லை என்றான். பிற பெண்களிடம் வீணாகப் பேசுவது கூட இல்லையென்றான். எனது புகைப்படம் கேட்டான். அனுப்பி வைத்தேன். அதைப்பார்த்த கணத்திலிருந்து என்னைக் காதலிப்பதாக அழகிய வார்த்தைகளில் சொன்னான். இலட்சியம் என்னவாயிற்று என நான் கேட்கவில்லை. அவனனுப்பியிருந்த புகைப்படத்தில் நெற்றியில் திருநீரெல்லாம் இட்டு ஒரு அப்பாவித்தனமான களையை முகத்தில் காட்டியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவனைச் சாந்தசொரூபியெனக் கண்ட நான் காதலில் விழுந்தேன். தொடர்ந்தும் புகைப்படங்கள் பரிமாறிக் கொண்டோம். காதலை தினம் தினம் உரையாடல்களிலும் மின்னஞ்சல்களிலும்  சொல்லிக்கொண்டோம்.

            பின்பொருநாள் தற்செயலாக கல்யாணம் செய்து குடும்பமாக வாழ்வதை வெறுத்த முற்போக்குவாதித் தோழியிடம் அவளது காதலைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவள் அவளது காதலனென்று சொல்லி ராகுலனின் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தாள். அதில் ராகுலன் அரை நிர்வாணமாக, கையில் மதுப்புட்டியுடன், இரு பக்கமும் இரு பெண்களை அணைத்தபடி லேசாக ஆடிக்கொண்டிருந்தான். இது போலப் பல புகைப்படங்களைக் காட்டினாள். கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முற்போக்கு இலட்சியம் அவனிடமும் இருப்பதாகச் சொன்னதால்தான் தான் அவனைக் காதலிப்பதாகத் தோழி சொன்னாள். அவனுக்கு அவளிடம் வேறு பெயர். வேறு முகமூடி.

            நல்லவேளை எனது பெற்றோருக்கு என்னைத் திட்டவோ, அடிக்கவோ, மிரட்டவோ வைக்காமல் நானாகவே அவனை விட்டும் நீங்கிக் கொண்டேன்.  ஒரு நம்பிக்கைத் துரோகியுடனான, ஒரு பெண்பித்தனுடனான காதலை அன்றொழித்தது தான். அதற்குப் பிறகு எப்பொழுதாவது அவனைப்பற்றி ஏதாவது செய்தி வந்துகொண்டிருக்கிறது. தன்னை இரண்டு கிலோ தங்கத்துக்கும் ஒரு வாகனத்துக்கும் விற்று ஒரு பணக்காரப்பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டதாக சமீபத்தில் செய்தி வந்திருக்கிறது. அந்த மணப்பெண் மேல் மிகுந்த அனுதாபம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவனோடு இன்னும் எத்தனை பொய்களை அவள் எதிர்கொள்ள வேண்டுமோ?

            உண்மைக்காதல்கள் மட்டும் தான் எப்பொழுதும் துயரங்களைக் கொண்டிருக்கும். கசப்பு மருந்தின் வெளிப்புற இனிப்புப் பூச்சைப் போல துயரங்களுக்கு மேல்தான் உண்மைக்காதல் தடவப்பட்டிருக்கும். சிறிதாவது அதன் மேற்பகுதி உராய்ந்துவிடும் போது துயரச் சுவையை வெளிக்காட்டும். எனக்கும் இதே கதைதான். நான் ராகுலனை உண்மையாகவே நேசித்திருந்ததை அவனை விட்டகன்று விட்ட பின்னர்தான் உணர்ந்தேன். என் முதல் காதல் தந்த துயரை, வாட்டத்தை அப்பொழுதுதான் உணர்ந்தேன். நீண்ட நாள் உண்ணப்பிடிக்காமல், இணையம் வரப்பிடிக்காமல் பசியிலிருந்திருக்கிறேன். தாகித்திருந்திருக்கிறேன். அழுதுகொண்டே இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிரிந்த வருத்தம் அந்த நயவஞ்சகனுக்கு, ஏமாற்றுக்காரனுக்குக் கொஞ்சமேனும் இருந்திருக்காது. அவனுக்கென்ன ? கடலில் ஒரே ஒரு அப்பாவி மீனா இருக்கிறது? தொடர்ந்தும் வலைவீசுவான். சிக்குவதையெல்லாம் சீரழித்துக் கொல்வான்.

            இந்த நண்பர் பிறகு பல வருடங்களை மிகவும் கவலையோடு வெளிநாட்டிலேயே கழித்தார். முதலில் இழந்த காதலியை நினைத்து நினைத்தே தான் திருமணம் செய்ய மறுத்தவர் பிறகு நாட்டுக்குப் போய் வீட்டாரின் வேண்டுகோளுக்காகச் சம்மதித்து, தானே ஒரு அநாதை விடுதியிலிருந்து விபத்தில் சிக்கி முகத்தில் பல தழும்புகளைக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளை நல்ல வசதியாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் கூட உண்டு. இவர் மணமுடிக்க இருந்த மாமா பெண்ணின் வாழ்க்கை சில வருடங்களில் துன்பத்துக்குள் ஆழ்ந்தது. அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி இடுப்பெலும்பு உடைந்து வீட்டில் இருக்கிறான். முன்பு போலவே அவள் தையல்வேலை செய்துதான் குடும்பம் நடக்கிறதாம்.

            இவர் பல வருடங்களுக்கு முன் எப்பொழுதோ காதலித்ததை இன்னுமா நினைவில் வைத்திருக்கிறாரென எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவர்  தோலுரித்து, தோடம்பழச் சுளைகளைத் தனித்தனியாக்கி ஒரு தட்டில் வைத்தெடுத்து வந்து அவரிடம் நீட்டினார். 'அவள் ரொம்பக் கஷ்டப்படுறா' எனச் சொன்னபடி குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நண்பரின் கண்கள் கலங்கியிருந்தன. அந்தக் கண்கள் என்றும் அழியாதவொரு காதலைச் சொல்லின.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி

# நவீன விருட்சம் காலாண்டு இதழ் - 84
# திண்ணை

Monday, November 2, 2009

முற்றுப்புள்ளி


(01)

            நளீம் நானாவுக்கும், நுஸ்ரத் ராத்தாவுக்குமான காதல், கல்யாணத்தில் முடியாமல் போனது ஒரு பலாப்பழத்தால் எனச் சொன்னால் ஆச்சரியமாகத்தானிருக்கும். நிஜமாகவே ஒரு பலாப்பழமும் நானும் சிஹானும்தான் காரணமாக ஆகிவிட்டோம்.

            அப்பொழுது எனக்கும், சிஹானுக்கும் எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். நளீம் நானாவுக்கு இருபது வயதிருந்திருக்கலாம். படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். கிராமத்து பிரதான வீதியோரமாகவே எனது வீடு. சிஹானின் வீடும், நளீம் நானாவின் காணியும் எனது வீட்டுக்குப் பின்னாலுள்ள பெரும் மேட்டுக்கு மேலிருந்தது. எனது வீட்டுக்குப் பின்னாலிருந்த சிஹானின் வீட்டு வாயிலிலிருந்து மொத்தக் கிராமத்தையும் முழுவதுமாகப் பார்த்துவிடலாம்.

            நளீம் நானாவின் காணிக்குப் போக, நுஸ்ரத் ராத்தாவின் வீட்டின் இடதுபுற மதிலோடு ஒட்டி மூன்றடிப் பாதை உண்டு. கருங்கற்களைப் படிகளாய்ப் பதித்த பாதை. அந்தளவுக்கு உயரமான மேட்டுநிலம் அது. மழை நாட்களில் சேற்றோடு பெருகிவரும் வெள்ளம் அப்பாதையை நிரப்பும். அத்தோடு நளீம் நானாவின் காணியிலிருந்து நீரோடு உருண்டுவரும் சிறு, சிறு கருங்கற்கள் அக் காணிக்கு நேர் கீழ் வீடான நுஸ்ரத் ராத்தாவின் வீட்டுக் கூரையில் விழுந்து ஓட்டையாக்குவதால் நுஸ்ரத் ராத்தாவின் குடும்பத்துக்கும், நளீம் நானாவின் குடும்பத்துக்கும் முற்காலத்திலிருந்து ஆகாது.

            நளீம் நானாவின் வீடு எமது வீடுகளுக்குச் சற்றுத் தொலைவில், தள்ளி இருந்தது. ஆனாலும் அவர் எப்படியும் கிழமைக்கு மூன்று தரமாவது தனது காணியைச் சுற்றிப்பார்க்க வந்துவிடுவார். அவரது மேட்டுக்காணியிலிருந்துதான் நாங்கள் பட்டம் விடுவது, குருவி அடிப்பது, ஓணான் பிடிப்பது போன்ற சாகசங்களைச் செய்துவந்தோம். எதுவுமே சொல்ல மாட்டார். பண்டைய கால ராஜாக்களைப் போலத் தன் தோட்டத்துக் காணியின் பெரும் பாறையொன்றில் வீற்றிருந்து கீழே தெரியும் நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலையே ஏறிட்டுப் பார்த்தபடியிருப்பார் அவர். மணிச் சத்தத்தோடு வரும் நளீம் நானாவின் சைக்கிள் எனது வீட்டின் மதிலருகே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதறிந்த நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலும் திறக்கும். காதல் புன்னகைகளும் சைகை பாஷைகளும் இருவருக்குமாக மாறி மாறிக் காற்றில் பறக்கும். ஏதுமறியாத நாம் அக் காற்றைக் குறுக்கறுத்துப் பட்டம் விட்டபடி அலைந்துகொண்டிருப்போம்.

            அம் மேட்டுக் காணியிலிருந்த பெரிய, உயரமான விருட்சங்களில் அடிக்கடி எங்கள் பட்டங்கள் சிக்கிக் கொள்ளும். கெஞ்சிக் கூத்தாடி, நளீம் நானாவை ஏறி எடுத்துத் தரச் சொல்வோம். அவரும் ஒரு போர் வீரரின் லாவண்யத்தோடு நுஸ்ரத் ராத்தாவின் அறை ஜன்னலை மாறிமாறிப் பார்த்துவிட்டு ஏறத்தயாராகுவார். அவரது நோக்கம் அறிந்த நுஸ்ரத் ராத்தாவின் கையசைவுகள் மரத்தில் ஏற வேண்டாமெனச் சொல்லும். ஆனாலும் செயல் வீரர் கருமமே கண்ணாக மரத்தில் ஏறி, பட்டத்தை எடுத்துத் தந்துவிட்டு ஒரு பெருமிதத்தோடு அறை ஜன்னலை நோக்குவார். நுஸ்ரத் ராத்தா கண்களில் வியப்பைப் பரிசளிப்பார். அதற்காகவே பட்டங்கள் அடிக்கடி சிக்கவேண்டும் போலிருக்கும்.

            காணியில் காய்த்திருக்கும் கொய்யாப்பழங்கள், வெரலிக்காய்கள் போன்ற சிறு சிறு பழங்களைக் காதல் பரிசாகத் தரும் நளீம் நானாவுக்கு உதவியாக, நுஸ்ரத் ராத்தாவிடம் யாருமறியாமல் அவற்றைக் கொண்டு போய்க்கொடுப்பது எமது அவ்வப்போதைய வேலையாக இருந்து வந்தது. எமக்கும் அவ்வப்போது பழங்கள் கிடைப்பதாலும், நளீம் நானாவின் உதவிகள் கிடைப்பதாலும் யாரிடமும் சொல்லாமல் இவ்விடயத்தை ஒரு ரகசியம் போலக் காத்துவந்தோம்.

(02)

            நுஸ்ரத் ராத்தா வீட்டுத் தலைவாசலுக்கு முன்னாலிருந்த பகுதியிலிருந்து வீதியோடு ஒட்டிய வீட்டு வெளி மதில் வரையில் திராட்சைக் கொடிப்பந்தல் போட்டு, காய்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருக்கும். வீதி வரையில் நீண்ட பந்தலில், மதிலைத் தாண்டி தெருவைப் பார்த்தவாறு காய்த்திருக்கும் திராட்சைக் குலைகளை யாரும் பறித்துவிடாமலும், கண்வைத்து விடாமலுமிருக்க பொலிதீன் பைகளால் அவற்றை மறைத்துக் கட்டியிருந்தார் நுஸ்ரத் ராத்தாவின் வாப்பா.

            அவர் அப்படி மறைத்துக் கட்டவேண்டிய தேவையேயில்லை. ஊராரை அழைத்து அவர் அக் குலைகளை இலவசமாகப் பறித்துப் போகும்படி ஆணையிட்டால் கூட யாரும் பறித்துச் செல்ல மாட்டார்கள். குருவிகள் கூட ஒரு தடவை அப் பழங்களைக் கொத்திப் பார்த்தால் ஊரை விட்டே பறந்தோடிப் போகும்.  அவ்வளவு புளிப்புச் சுவை கொண்டவை அப் பழங்கள். பழப்பரிமாற்றங்கள் நடக்கும் நாளில் நளீம் நானாவுக்கு திராட்சைக்குலையொன்றினைப் பறித்துக் கொள்ளும்படி சொல்லுமாறு எங்களிடம் சொல்லிவிடுவார் நுஸ்ரத் ராத்தா.

            மதிய நேரத்துக்குப் பின்னர் எங்கள் தெருவில் சனமிருக்காது. நுஸ்ரத் ராத்தா வீட்டிலும் மதிய உணவு உண்ட மயக்கத்தில் நுஸ்ரத் ராத்தாவைத் தவிர மற்ற எல்லோரும் உறங்கிக்கொண்டிருப்பர். எம்மிடம் சொல்லிவிடுவது போதாதென்று சைகையிலும் சொல்லும் நுஸ்ரத் ராத்தாவின் கட்டளையை சிரமேற்கொண்டு மதிய உணவுக்கு தனது வீட்டுக்குப் போய் வருகையில், தெருவில் யாருமற்ற வேளையில், நுஸ்ரத் ராத்தாவின் வீட்டைத் தாண்டி  வரும் கணத்தில் ஒரு திராட்சைக் குலையை சைக்கிளில் இருந்து எழும்பிப் பறித்துக் கொண்டு அவரது பாறைச் சிம்மாசனத்துக்கு எடுத்து வருவார் நளீம் நானா.

            நளீம் நானா கொடுத்தனுப்பிய கொய்யாப்பழத்தினை அவர் பார்க்க, அறை ஜன்னலருகிலிருந்து புன்னகையுடன் சுவைப்பார் நுஸ்ரத் ராத்தா. இங்கு புளித் திராட்சைகளைக் கடிக்கும் நளீம் நானாவின் முகத்தில் நவரசங்களும் மிளிரும். புன்னகை, அஷ்டகோணலாகி உடல் சிலிர்க்கும். இருந்தும், தலைவியின் அன்புக் கட்டளையென்பதால் கருமமே கண்ணாக முழுக் குலையையும் உள்ளே தள்ளுவார் அவர். இப்படியாக அவர்களது காதல் நாளொரு பழமும் பொழுதொரு புளிப்புமாக வளர்ந்தது.

            ஒரு நாள் மதியத்திற்குப் பிற்பாடு, நானும் சிஹானும் கவட்டுவில்லில் கல் வைத்துக் குருவியடித்துக் கொண்டிருந்தோம். மாமரத்தில் அழகிய பூமைனாவொன்று பார்வைக்கு வசமாகச் சிக்கியது. சிஹான் குறிபார்த்து அடித்ததில் மைனாவின் சிறகொன்றில் கல் பட்டு, கருங்கற் படியருகில் வீழ்ந்தது. நாம் இருவரும் ஓடிப் போய்ப் பிடிக்க முன்பு பெருஞ்சிரமத்தோடு எழும்பிப் பறந்த மைனா திரும்பவும் கருங்கற் படியோடு ஒட்டியிருந்த நுஸ்ரத் ராத்தா வீட்டு மதிலைத் தாண்டிப் போய் அவர்கள் வீட்டு முன்னாலிருந்த திராட்சைக் கொடிக்குள் வீழ்ந்து சிக்குண்டது.

            மைனாவை எடுக்கவேண்டும். எல்லோரும் மதிய உணவு மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருப்பர். எனினும் இருவருக்குமே நுஸ்ரத் ராத்தா வீட்டுக்குப் போய் மைனாவை எடுத்துவரப் பயம். நுஸ்ரத் ராத்தாவுடைய உம்மாவின் குரலும், அவரது சண்டையிடும் வழக்கமும் ஊரறியப் பிரசித்தம். என்ன செய்வதென அறியாமல் வழமை போலவே நளீம் நானாவிடம் அடைக்கலம் புகுந்தோம்.

            தான் மருமகனாகப் போகும் வீட்டுக்கு முதன்முதலாகத் திருடனைப் போலப் போவதை அவர் விரும்பியிருக்க மாட்டாரெனினும் எங்களது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அவர் மைனாவை எடுத்துத்தர இசைந்தார். கருங்கற் படியிலிருந்து எம்பி ஏறி, மதில் மேல் நின்றார். பின்னர் மதிலிலேயே தொடர்ச்சியாக நடந்துபோய் திராட்சைப் பந்தலுக்குள்ளிருந்த மைனாவை கண்களால் தேடினார். கண்டுகொண்ட பின்னர், பந்தலுக்குள் இறங்குவதற்காக, பந்தலுக்காகப் போட்டிருந்த பாக்குமர உருளையில் காலைவைத்தார். 'டமார்' எனச் சப்தமெழுப்பியபடி பந்தலையும் உடைத்துக் கொண்டு பந்தலுக்குள் எசகுபிசகாக விழுந்தார்.

            சப்தம் கேட்டெழுந்த நுஸ்ரத் ராத்தாவின் உம்மா 'கள்ளன், கள்ளன்' என ஓலமிடத் தொடங்கினார். நல்லவேளையாக அவர் ஓடி வந்து முன் வாசல் கதவைத் திறக்க முடியாதபடிக்கு வாசலைப் பந்தல் அடைத்துக் கொண்டிருந்தது. நளீம் நானா விழுந்த வேகத்தில் எழுந்து மதிலைத் தாண்டிக் குதித்து தப்பித்து ஓடிவிட்டிருந்தார். இராமனின் பாதணியை பரதன் காத்துநின்றது போல, திருடனைக் கண்டுபிடிக்கவென நளீம் நானா விட்டுச் சென்றிருந்த ஒற்றைச் செருப்பினை நுஸ்ரத் ராத்தாவின் வாப்பா நெடுநாள் காத்துவந்தார். அவர் பரம்பரை, பரம்பரையாக வளர்த்துவந்த கொடி, எவனோ ஒரு போக்கிரியால் உடைந்து போனதென வீதியில் வருவோர், போவோரிடமெல்லாம் கூட சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். நமது பூமைனாவுக்கு என்னவாயிற்று எனத்தான் இன்று வரைக்கும் தெரியவில்லை.

            அன்று தப்பித்துப் போன நளீம் நானா ஒரு கிழமைக்கு தோட்டத்துப்பக்கம் வரவேயில்லை. நுஸ்ரத் ராத்தா எங்களை அழைத்து, நளீம் நானாவைப் பற்றி ஆதூரமாகவும் , கவலையோடும் விசாரித்தார். அன்று விழுந்த வேகத்தில் நளீம் நானாவுக்கு இடுப்பு சுளுக்கிக் கொண்ட விடயத்தை நாம்தான் அவரிடம் கூறினோம். ஏறத்தாழ பத்து நாட்களின் பின்னர் காணிக்கு வந்த நளீம் நானாவின் கால்களில் புதுச் செருப்புக்கள் மின்னின.

(03)

            நுஸ்ரத் ராத்தாவின் உம்மா நாட்டுக் கோழிகள் வளர்த்து வந்தார். காலையில் திறந்துவிடும் கோழிகள் அனேகமாக நளீம் நானா வீட்டுக் காணியில்தான் மேய்ந்தபடி இருக்கும். ஒரு முறை ஒரு கோழியைக் கீரிப்பிள்ளை அடித்து இழுத்துக் கொண்டுபோகையில் நாங்கள் கண்டு கீரியை அடித்துவிரட்டிக் கோழியைக் காப்பாற்றிவிட்டோம். அரை உயிரோடு இரத்தம் வழிய நிலத்தில் கிடந்து துடித்தது அது. கோழியைக் கொண்டுபோய் நுஸ்ரத் ராத்தா வீட்டில் கொடுத்துவரும்படி எமக்குக் கட்டளையிட்டார் நளீம் நானா. இரத்தம் வழியத் துடிதுடிக்கும் அதனைச் சுமக்க எம்மாலாகாது எனக் கூற மிகுந்த தயக்கத்தோடு தனது தோட்டத்திலிருந்து நுஸ்ரத் ராத்தாவின் வீட்டின் கொல்லைப்பக்கமாக நளீம் நானா கோழியை எடுத்துவந்தார்.

            புது ஆடையோடு தலை வாசல் வழியே பன்னீர் தெளிக்க உள் நுழைவதாகக் கனவு கண்டுகொண்டிருந்த மருமகன், அவ்வீட்டுக்கு கொல்லைப்புறமாக கைகளில் இரத்தம் வழியச் செல்லவேண்டி வருமென நினைத்துக் கூட பார்த்திருந்திருக்க மாட்டார். நானும், சிஹானும் சமையலறைக்குள்ளிருந்த நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடம் போய் விடயத்தைக் கூறினோம். பெரும் பதற்றத்துடன் , கீரியைச் சபித்துச் சப்தமெழுப்பியபடி வெளியே வந்தார் அவர். நளீம் நானாவின் கையிலிருந்த கோழியின் தலையை ஒரு குழந்தையைத் தடவுவது போல தடவிக் கொடுத்தார். பின்னர் வீட்டில் ஆண்கள் யாருமில்லையெனச் சொல்லி நளீம் நானாவையே கோழியை அறுத்துத் துப்புரவாக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார். நுஸ்ரத் ராத்தாவும் சமையலறை ஜன்னலிலிருந்து நளீம் நானாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். வருங்கால மாமியாரின் பணிவான கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்வீரர் அக்கோழியை அறுத்துத் துப்புரவாக்கிக் கொடுத்தார்.

            அன்றிலிருந்துதான் நளீம் நானாவை நேருக்கு நேராகக் காணும் பொழுதுகளில் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவும் வாப்பாவும் அவருடன் புன்னகைக்கத் தொடங்கினர். சலாம் சொல்லிக் கொண்டனர். தோட்டத்துப் பப்பாளிப் பழங்கள் எங்களால் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடமே நேரடியாகக் கொடுக்கப்பட்டன. நளீம் நானாவும், நுஸ்ரத் ராத்தாவும் தங்கள் காதல் தடைகளின்றி நிறைவேறுமென்ற மகிழ்வோடு கனவுகள் கண்டு, காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர் அந்த சங்கடமான நாள் வரும் வரையில்.

            நளீம் நானா தோட்டத்தில் அகன்ற, பெரிய பலாமரமொன்று இருந்தது. பென்னம்பெரிய காய்கள் காய்த்துத் தொங்கும். நல்ல சுவையான சுளைகளைக் கொண்ட பலாப்பழங்கள் ஊர் முழுதும் வாசனை பரப்பக் கூடியன. அம்மரத்திலும் அப்படியாக ஒரு பழம் கனிந்தது. வாசம் வீசும் அப் பழத்தைக் கண்ட நுஸ்ரத் ராத்தா, அதைத் தங்கள் வீட்டுக்குத் தரமுடியுமா எனக் கேட்டு நளீம் நானாவிடம் எங்களைத் தூது அனுப்பினார். தோட்டத்துப் பழங்களையெல்லாம் தானாகக் கொடுத்தனுப்புபவர், நுஸ்ரத் ராத்தாவே கேட்ட பின்பு கொடுக்காமல் இருப்பாரா ? அவரே மரத்தில் ஏறி அப்பழத்தினைப் பறித்துக் கயிறு கட்டி இறக்குவதை ராத்தா ஜன்னலினூடாகப் பதற்றத்துடன் பார்த்திருந்தார்.

            பழத்தினைப் பறித்தாயிற்று. அவராகக் கொடுப்பது போல் நுஸ்ரத் ராத்தாவின் உம்மாவிடம் பழத்தினைக் கொண்டுபோய்க் கொடுக்கும் பொறுப்பு என்னிடமும், சிஹானிடமும் ஒப்படைக்கப்பட்டது. பேய்க்கனத்துடனான பெரிய உருண்டையான பழம். பலாப்பிசின் வழிய வழிய இருவரும் பழத்தைத் தூக்கி அதன் இரு பக்கமாகப் பிடித்தபடி மிகச் சிரமத்துடன் அவ்வீட்டிற்கு நேர் மேலே உயர்ந்த மேட்டிலிருந்த மரத்தடியிலிருந்து மெல்லக் கீழே இறங்கத் தொடங்கினோம். சிஹான் அப்போதுதான் சாரம் அணியப் பழகியிருந்தான். தன் சாரம் நழுவுவதாகவும் கட்டிக் கொள்ளவேண்டுமெனவும் சொன்னவனுக்காக ஒரு கணம் பலாப்பழத்தை நிலத்தில் வைத்தோம். யாரும் எதிர்பாராதவிதமாகப் பள்ளத்தில் உருண்டு ஓடத் தொடங்கியது அது.

            பின்னாலே ஓடியும் பிடிக்கமுடியாமல் போன பழம் நுஸ்ரத் ராத்தா வீட்டுச் சமையலறைக் கூரையை, அகன்ற கிணறொன்றின் வாயைப் போல ஓட்டையாக்கி, உள்ளே குதித்து , சமையலிலிருந்த அவரது உம்மாவை அலறி, ஓலமிட வைத்தபின் தான் சிதறிக் கசிந்து ஓய்ந்தது. திடுக்கிடலோடும் பதற்றத்தோடும் வெளியே ஓடிவந்த அவர் பலாமரத்தைப் பார்த்தபடி, நளீம் நானாவையும், அவரது முன்னாள், வருங்காலப் பரம்பரையையும் சப்தமாக சபிக்கத் தொடங்கினார். நாங்கள் மூவரும் எப்பொழுதோ அவ்விடத்தைவிட்டும் ஓடி விட்டிருந்தோம். நளீம் நானாவை அதற்குப் பிறகு அக் காணியில் காணக் கிடைக்கவில்லை. நாங்கள் போனால் காலை முறித்துப் போடுவதாக எங்கள் வீடுகளில் எச்சரிக்கப்பட்டோம். பப்பாளியும், கொய்யாவும், வெரலிக்காய்களும் வீணாகப் பழுத்து உதிர்ந்தன. திராட்சைக் கொடி திரும்பத் துளிர்க்கத் தொடங்கிய நாளொன்றில், பழங்களாலும் பார்வைகளாலும் வளர்ந்துவந்த காதல் இப்படியாக ஒரு பலாப்பழத்தினாலும் எங்களாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி

# சொல்வனம் இதழ் - 11, 30.10.2009

சொற்குறிப்புகள்
* வாப்பா - தந்தை
* உம்மா - தாய்
* நானா - அண்ணன்
* ராத்தா - அக்கா

Sunday, September 6, 2009

வேலையற்றவனின் பகல்

' புலியொன்றைக் கொண்டு வந்து, அதோட கடவாய்ப்பல்லுல என்னோட பொண்ணைக் கட்டினாலும் கட்டுவேனே தவிர, இவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேனெண்டு கனவுலையும் நினைக்காதே அக்கா'

        பழைய சோற்றினை அம்மா அவனுக்குப் போட்டுக் கொண்டிருந்தபோது குசினியில் உட்கார்ந்திருந்த மாமா இப்படிச் சொன்னார். அம்மா ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. சோற்றினைப் போட்டுவிட்டு, மாமாவின் பக்கம் திரும்பாமல் அப்படியே மூலையில் போய் ஒரு பலகைக் குத்தியில் அமர்ந்துகொண்டாள். சேலை முந்தானையால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். அவளுக்குக் கோபமா, ஆற்றாமையா, அழுகையா என்று தெரியவில்லை. எதுவோ ஒன்று.

        அவனைப் பற்றிச் சொல்கிறார். அவனை நிந்திக்கிறார். அவனைக் கேவலமாகக் கதைக்கிறார். அவனுக்குக் கோபம் வர வேண்டாமோ? திரைப்படங்களில் வருவதுபோல சோற்றுத் தட்டை அப்படியே தூக்கி நிலத்திலடித்து, கோபத்தோடு அவரது பெண்ணைத் திருமணம் முடித்துக் காட்டுவதாகச் சவால் விட்டு, வீட்டை விட்டு வெளியே போகவேண்டாமோ? ஆனால் அப்படி எதுவும் செய்யத் தோன்றாமல், அவர்கள் முன்னாலேயே சோற்றினை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தான். காரணம் இருபத்தைந்து வயதாகியும் அவனுக்கு வேலையில்லை. வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் கோபமாவது, ரோஷமாவது, கிடைக்கிற சோற்றினைக் கொட்டிக் கொண்டு, கிடைக்கிற மூலையில் கட்டையைக் கிடத்துவியா என்றது மனது.

        அம்மாவைச் சொல்லவேண்டும். அவள்தான் இந்தக் கதையை இப்பொழுது ஆரம்பித்தாள். மாமாவுக்கு நல்ல வசதி. மூன்று வீடு தள்ளி அவரது வீடு. இது அவரது தாய்வீடு. தினமும் அடிக்கடி வந்துபோவார். அவனும், அம்மாவும் மட்டும் புழங்கும் இந்த வீட்டின் மூன்று அறைகளிலொன்றை இன்னும் அவர்தான் பாவிக்கிறார். அந்தக் காலம் தொட்டு அவரது புத்தகங்களெல்லாம் அதில்தான் நிறைந்திருக்கும். அரச கூட்டுறவு நிலையத்தில் வேலை. சனி, ஞாயிறு அவரது அறைக்குள் போய் மூடிக் கொண்டால், பல மணித்தியாலங்கள் வெளியே வரமாட்டார். வாசிப்பில் மூழ்கிப் போய்விடுவார். புலி வாயில் கட்டப்படப்போகும் அவரது மகள், தனது அம்மா சாப்பிடக் கூப்பிட்டாளெனத் தேடி வருவாள். மூன்று வீடுகள் தாண்டி வந்ததில் அந்தப் பருத்த பெண், முதலில் வாசலில் நின்று பெரிதாக மூச்சு வாங்குவாள். அவளது பெரிய நாசி விடைத்து விடைத்து அடங்கும். அவனை விடவும் நான்கு வருடங்கள் இளையவள், குள்ளமாகவும் கறுப்பாகவும் இருப்பாள். அவனுக்கு மட்டும் வேலையென்ற ஒன்று கிடைத்தாலும் இல்லாவிட்டாலும் எதற்கு இவளைக் கட்டப் போகிறான்.

        அம்மாவுக்கும் இவளை மருமகளாக்கிப் பார்க்கும் ஆசை இருந்திருக்காது. இன்னும் வேலை கிடைக்கவில்லையா என்ற மாமாவின் கேள்விக்கு, சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் வேலை கிடைக்குமென்று ஜோஸியக்காரன் சொன்னதை அப்படியே சொல்லி வைத்தாள். வேலையற்றவனுக்கு எவன் பெண் கொடுப்பானென்ற கேள்வியோடு ஆரம்பித்த மாமாவின் கோபம், புலிக் கடைவாய்ப்பல் வரை பேச்சைத் தொடரவைத்தது. வேலைகள் கிடைத்தனதான். எல்லாமே சின்னச் சின்ன வேலைகள். சாப்பாட்டுக் கடைகளில் கணக்கெழுதுவதும், புடைவைக் கடைகளில் துணி மடிப்பதுவும், வீடு வீடாகச் சாமான்கள் எடுத்துப் போய் விற்பதுவும் அவனால் முடியவில்லை. தான் உயர்தரம் வரை படித்திருக்கிறேனென்ற கர்வம் சிறிது எட்டிப்பார்க்கும். ஆனால் இக்காலத்தில் இந்த வேலைகளுக்கு உயர்தரத்தை விடவும் அதிக தகுதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மாமாவின் சிபாரிசில் அவனுக்குக் கிடைத்த வேலைகளில் ஒழுங்காக நிலைபெறத் தெரியவில்லை என்ற கோபம் அவன் மேல் மாமாவுக்கு உள்ளூர உண்டு.

        மாமா எழுந்து தன்னுடைய அறைக்குப் போனார். அம்மாவிடம் இன்னுமொரு சின்ன வெங்காயம் கேட்டு வாங்கிக் கொண்டான். அம்மா வெங்காயத்தைத் தட்டில் வைத்துவிட்டு வாஞ்சையோடு தலை தடவி விட்டுப் போனாள். காக்கைக்கும் தன் குஞ்சு... அப்பா இருந்தவரைக்கும் கூட இப்படித்தான். ஒரே பிள்ளையென்ற மொத்தமான அன்பையும் அவன் மேல் திணிப்பார். மகனை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல தொழில் கிடைத்து, அந்தப் பழைய வீட்டை உடைத்துக் கட்டிப் பெரிதாக்கி, மகனோடு சேர்ந்து கடைசி வரை வாழும் எண்ணம் அவருக்கிருந்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். அந்த ஆசையெல்லாம் அவர் மூழ்கிச் செத்த தாமரைக் குளத்தோடு மூழ்கிப் போயிற்று. தண்ணீரில் ஊறிப் பருத்த உடலைத்தான் வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். வீடு முழுதும் ஊர் சனக் கூட்டம். ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அம்மா ஒப்பாரி வைத்து அழுதாள். அவனுக்கு அழுகை வரவில்லை. அழடா அழடா என்று சாவுக்கு வந்திருந்தவர்கள் தோளில் தட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லாச் சடங்குகளும் முடிந்து, சில நாட்களில் அப்பா பணம் வாங்கியிருந்தாரெனச் சொல்லிக் கொண்டு வெளியூர்களிலிருந்து ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் நகைகளெல்லாம் விற்கப்பட்டன. மாமாவே வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். கடன்களைச் சமாளித்தாயிற்று. அப்பாவின் பென்ஷன் பணத்தோடு மாதாமாதம் உணவுக்குக் கஷ்டமின்றி எப்படியோ காலம் கழியத் தொடங்கியது. எப்போதாவது ஏதாவது விஷேசங்களுக்குப் போகும்போது மட்டும் அம்மா, அத்தையிடம் போய் கழுத்துச் சங்கிலி, தோடு போன்றவற்றை இரவலாக வாங்கி அணிந்து போவாள். விஷேச வீடுகளின் மகிழ்ச்சியையும் மீறி, சொந்த நகைகளையே இரவலாகக் கேட்டு வாங்கி அணிய நேர்ந்த அவலம் தந்த துயரம் அவள் முகத்தில் இழையோடும்.

        இப்பொழுது அதுவல்ல பிரச்சினை. முக்கிய பிரச்சினை வேலை. அடுத்த பிரச்சினை கல்யாணம். இரண்டுக்கும் ஜோஸியக்காரன் ஒரு முடிச்சிட்டுவிட்டான். இனி தனித்து வெட்டியாக இருந்தது போதும். சோடி சேர்த்துக்கொண்டு வெட்டியாக இரு என்று சொல்லிவிட்டான். அம்மாவுக்கு அது வேத வாக்கியம். 'அந்த குண்டச்சி இல்லையென்றால் என்ன? அவளுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நான் பார்க்கிறேண்டா உனக்கு ஒரு அழகான ராசகுமாரியை' என்றாள் அம்மா ரகசியமாக. அவன் மௌனமாக இருந்தான். அவனது மௌனத்தை, வருத்தமாக எடுத்துக்கொண்டாளோ என்னமோ...' நீ கவலப்படாதே ராசா..அவளொண்ணும் அடக்கமானவள் இல்லை..ராங்கிக்காரி..பேய்க்குப் பேன் பார்ப்பவள்..நான் உனக்கு சொக்கத்தங்கம் போல ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டிவைக்கிறேன் ' என்றாள் மீண்டும். அம்மாவின் பேச்சில் எப்பொழுதுமே ராசாக்களும், ராசகுமாரிகளும், பேய்களும் வருவார்கள். சிறு வயதில் அவனுக்குச் சொன்ன கதைகளிலும்தான். சின்ன வயதிலெல்லாம் முன்னிரவுகளில் அப்பா வரும் வரையில், வாசல் திண்ணையில் அம்மா கால்நீட்டி அமர்ந்திருக்க, அவன் அம்மா மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு கதை கேட்டுக்கொண்டிருப்பான். அந்தக் கதைகளில் இப்படித்தான். ஒரு ராசகுமாரன் காட்டுக்குப் போனானாம்..அங்கொரு ராசகுமாரி சிலையாக்கப்பட்டிருப்பதைப் பார்த்தானாம்..என்று கதைகள் தொடரும். இவன் பாதியில் தூங்கிவிடுவான். மறுநாள் வேறொரு கதை. முந்தைய நாள் கதையை எதிலிருந்து கேட்க மறந்தோமென அவனுக்கு நினைவிருக்காது.

        அவனுக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகமறதி வந்துவிடுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படித்தான். யாரோ ஒரு மந்திரி, நகர சபைக் கட்டிடத்துக்கு வந்திருப்பதாகவும், அவரைப் போய் இந்த நேரத்துக்கு சந்திக்கும்படியும் மாமா கூறியிருந்ததை மறந்துவிட்டான். அன்று இரவு மாமா வீட்டுக்கு வந்து சத்தம் போட்டார். இவன் ' போயிருந்தேனே !' என்றான். 'பொய் சொல்ல வேற ஆரம்பிச்சிட்டியா? நான் முழு நாளும் அங்கதான இருந்தேன்' என்று இன்னும் உறுமத் தொடங்கினார். அவனுக்குப் பொய் சொல்லிப் பழக்கமில்லை. இப்படித்தான் எப்பொழுதாவது ஒன்றிரண்டு சொல்லி மாட்டிக் கொள்வான். இப்படி பொய் சொல்லத் தெரியாததால்தான் வீட்டுக்கு வீடு பொருட்கள் விற்கப் போய் பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. அப்பா இருந்தவரைக்கும் இப்படியில்லை. அப்பாவுக்கும் பொய் சொல்லத் தெரியாது. அவர் மாமாவைப் போல இப்படி உறுமுபவரல்ல. மிக அமைதியானவர். எப்பொழுதாவது அரிதாக வீட்டிலிருப்பார். அப்பொழுதெல்லாம் அவனோடு விளையாடுவதில்தான் அப்பாவின் பொழுது கழியும். அம்மாவும் சிரித்தபடியே விளையாட்டில் சேர்ந்துகொள்வாள். அம்மாவின் அந்தச் சிரிப்பெல்லாம் அப்பாவின் இறப்போடு போயிற்று.

        அப்பா செத்ததும் அப்பாவின் சைக்கிளை அவன் எடுத்துக் கொண்டான். அந்தச் சைக்கிளுக்கு ஆயுள் அதிகம். பல வருடங்களாக அப்பாவுக்காக  உழைத்தது. இப்பொழுது மகனுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறது. அதில்தான் அவன் வேலை தேடிப் போவான். வெயிலில் அலைவான். முன்பு அவனது சிறுவயதில் அப்பா அவனை சைக்கிளின் முன் கம்பியில் அமர்த்தி, ஊர் சுற்றிக் காட்டியதெல்லாம் அவனுக்கு நினைவிருக்கிறது. அவனது ஊருக்கு ரயில் வரவில்லை. எப்பொழுதோ தான் ரயிலில் பயணித்த கதையொன்றை அம்மா சொல்ல, அவன் அதைப் பிடித்துக் கொண்டான். ரயில் பற்றி அப்பாவிடம் தோண்டித்துருவிக் கேட்கத் தொடங்கினான். இவனுக்குச் சொல்லி மாளாது என்று, அப்பா அவனை சைக்கிள் முன் கம்பியில் தலையணை வைத்து, உட்காரவைத்து எத்தனையோ கிலோமீற்றர்கள் மிதித்துக் கூட்டிப் போய் ஏதோ ஒரு ஊரில் ஒரு முறை ரயில் காட்டினார். நீளமான ரயில். வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடமும், ஆச்சியிடமும் கதை கதையாக ரயில் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

        ஆச்சிக்கும் அவன் மேல் அன்பு அதிகம். ஆச்சி என்றால் அம்மாவின் அம்மா. தலைமுடியெல்லாம் நரைத்துப் போய் பஞ்சுப் பொதியை தலையில் ஒட்ட வைத்ததுபோல் வெள்ளை வெள்ளையாக இருக்கும். ஆச்சிக்கு அவனைப் போலவே நல்ல சிவப்பு நிறம். நன்றாக வயதாகிப் போனபிறகு தலை தன்னிச்சையாக இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே இருக்கும். எப்பொழுதாவது அம்மா அவனை அடிக்கத் துரத்தினால் அவன் ஓடி வந்து ஆச்சியின் கழுத்தினைக் கட்டிக் கொள்வான். அம்மா கடிந்துகொண்டு விலகிப் போவாள். இத்தனைக்கும் ஆச்சிக்குக் கண் பார்வை குறைவு. அந்த வீட்டில் முதல் சாவாக ஆச்சியைத்தான் அவன் பார்த்தான். அப்பாவின் இறப்பிற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஆச்சி தவறிப்போனாள். நித்திரைப் பாயிலேயே செத்துப் போயிருந்தாள். அவனுக்கு அப்போது ஏழு வயது. என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடியும், அப்பாவின் பின்னால் ஓடியபடியும் இருந்தான். அந்த ஓட்டம் இன்று வரை ஓயவில்லை. ஊரில் ஒரு வார்த்தை சொல்வார்கள். நாய்க்கு உண்டான வேலையும் இல்லை, ஓடாத நேரமும் இல்லையென்று. அதுபோலத்தான் அவன் ஓட்டமும்.

        எங்காவது வேலையொன்று கிடைக்காதா என்றுதான் அவனும் ஓடிக் கொண்டிருந்தான். கூடப் படித்தவர்கள், அப்பாவுக்குத் தெரிந்தவர்களெனப் பலரைத் தேடிப் போய் சலிக்காது வேலை தேடிக் கொண்டிருந்தான். அவனுடன் கூடப் படித்தவனொருவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டம் பற்றி ஒரு நாள் அவன் கேள்விப்பட்டான்.பொது வாசிகசாலையிலிருந்து அந்த நண்பன் எடுத்துவந்த ஒரு பழைய புத்தகமொன்றுக்குள் ஒரு பழங்கால வெளிநாட்டுக் காசுத்தாளொன்று இருந்ததாம். அதனை எடுத்துக் கொண்டுபோய் யாருக்கோ விற்றதில் கட்டுக் கட்டாகக் காசு கிடைத்ததாம். உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால், அதைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து அவனுக்கு அது பற்றியே நினைவெல்லாம் ஓடியது. வீட்டுக்கு வந்து மாமாவின் அறைக்குள் நுழைந்து பழைய புத்தகங்களையெல்லாம் புரட்டிப் புரட்டித் தேடத் தொடங்கினான். ஒரு பருமனான புத்தகமொன்றுக்குள்ளிருந்து மாமாவினதும் ஒரு பெண்ணினதும் கறுப்பு வெள்ளைப் புகைப்படமொன்று கீழே விழுந்தது. அந்தப் பெண், அவனது அத்தையல்ல. தலையை வகிடெடுத்து, இரு புறமும் வழிக்கச் சீவி, பூ வைத்து, பொட்டு வைத்து, மாமாவின் அருகிலிருந்து அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். மாமா அந்தப் பெண்ணின் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு சிரித்தபடி இளமையாகவும் அழகாகவும் இருந்தார். ஏதோ ஒரு ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து அதே புத்தகத்துக்குள் சில காதல் கடிதங்களும், ஒரு கல்யாணப் பத்திரிகையும் செருகப்பட்டிருந்ததைக் கண்டு எடுத்துப் பார்த்தான். பிறகு அவற்றை மீண்டும் புத்தகத்துக்குள் வைத்து, அப் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தான். அவனுக்கு மாமாவை நினைக்க  பாவமாக இருந்தது. அன்றிலிருந்து மாமா திட்டும்போதெல்லாம் ஏனோ அவனுக்குக் கோபம் வருவதில்லை.

        வெளியே மழை தூறத் தொடங்கி விட்டிருந்தது. திண்ணையில் அமர்ந்துகொண்டு மழை பார்க்கத் தொடங்கினான். பனித்தூவல் போன்ற மழை. கொஞ்சம் கொஞ்சமாக நிலம் ஈரலித்து, மண் வாசம் கிளப்பத்தொடங்கியது. அம்மாவும் உள்ளிருந்து வந்து, வாசல் தூணில் சாய்ந்துகொண்டு மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல 'மழையில் நனையாதே' எனச் சொல்லி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிக்கச் செய்திருக்க வேண்டும்.

        அம்மா திடீரென்று 'மாஸ்டரைப் போய்ப் பார்த்தியா?' என்றாள். அவர், அப்பாவின் நண்பர். நகரத்தில் நல்ல நிலையிலிருக்கிறார். போய்ப் பார்த்து விசாரித்தால் அவனுக்கு வேலை ஏதும் கிடைக்காதா என்ற ஏக்கம் அவளுக்கு. அவன் 'பார்த்தேன்' என்றான். பிறகு கொஞ்ச நேரம் அப்படியே மழை பார்த்தான். அம்மா உள்ளே போகத் திரும்பிய கணத்தில், அவர் வேலை செய்யும் துறைமுகத்தில் ஒரு வேலை காலியாக இருப்பதாக அவர் சொன்னதைச் சொன்னான். அம்மா உள்ளூர மகிழ்ந்தாள். புன்னகைத்தாள். திண்ணையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்துகொண்டாள். அவர் அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவதற்கு ஒரு தொகைப் பணம் கேட்டதையும் அவன் அம்மாவிடம் சொன்னான். அம்மா யோசனையுடன் மழையைப் பார்த்துக் கொண்டே 'தம்பியிடம்தான் கேட்டுப் பார்க்கணும்' என்றாள்.  பிறகு அவனைத் திரும்பிப் பார்த்து 'அவனிடம் இருக்கும். தருவானோ தெரியாது. மகளுக்குச் சேர்த்து வருகிறான். அவளுக்கு இந்த வருஷத்துக்குள் ஒரு கல்யாணம், காட்சியை நடத்திப் பார்க்கணும்னு சொல்லிக் கொண்டிருந்தான்' என்றாள். அவனுக்குள் ஏதோ ஒரு ஆசுவாசம், ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி உள்ளுக்குள் பரவத் தொடங்கியது. வெளியே மழை வலுக்கத்தொடங்கி விட்டிருந்தது.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி 
# சொல்வனம் இதழ் (04-09-2009) 
# தடாகம்
# திண்ணை


Saturday, August 1, 2009

பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !


 
      எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த பெண் சடாரெனக் கீழ விழுந்ததுல எனக்குச் சரியான அதிர்ச்சியாகிப் போச்சுது. சொந்த ஊரிலெண்டால் ஓடிப்போய் உதவியிருக்கலாம். என்ரை மனசு ஒரு கணம் பதறிப் போச்சுது. இப்பொழுது என்ன செய்றதென்டு தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தன். என்ரை கண்ணுல ஆருமே தட்டுப்படேல்ல. ஒரு ஈ,காக்கை கூடக் காணக் கிடைக்கேல்ல..
   
    அரபு நாட்டுச் சூடான பகல் வேளையது. கடும் வெக்கை.காத்துக் கூட கடும் சூடாத்தான் வீசும். அவசரத் தேவையில்லாம ஆரும் வெளிய இறங்கமாட்டினம். வெயில் ஆரையும் வெளியில் இறங்கவிடாது. பன்னிரண்டு மணிக்கு அத்தனை அலுவலகங்களும் பகலுணவு இடைவேளைக்காக மூடப்பட்டதெண்டால் மூன்று அல்லது நான்கு மணிக்குத்தான் மீண்டும் திறக்கப்படும். நான் கடும் பசியிலிருந்தன். சூட்டையும்,வெக்கையையும் பொருட்படுத்தாமல் மதிய உணவுக்காகப் போய்க் கொண்டிருந்தன். அப்பதான் என் முன்னால போன அவ விழுந்தவ.
   
    அது ரெண்டு வங்கிகளுக்கு இடைப்பட்ட சிறிய ஒழுங்கை. வருகிறவங்கள் வங்கியின்  பின்புறத்தில வாகனங்கள நிறுத்துறதுக்காகக் கட்டப்பட்டிருக்குற இடத்துல வாகனங்களை நிறுத்திவிட்டு வருவினம். கீழே விழுந்து அரபு மொழியில் முனகிக் கொண்டிருந்தவளுக்கு இருபது வயதுக்குள்ள தானிருக்கும். நல்ல வடிவாக இருந்தவள் ஈரான் இல்லாட்டி லெபனான் தேசத்தவளாக இருக்கவேணும். அவங்களது உடுப்புக்கள்தான் இந்த நாட்டில இப்படி அரையும் குறையுமாக இருக்கும்.

     ஒரு கூலித் தொழிலாளியாக இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்திருக்கிற நான் ஏற்கெனவே லேசாக் கருப்புத்தான் எண்டாலும் பாலைவன வெயில் என்னை இன்னும் கருப்பாக்கிட்டுது. ஏற்கெனவே தன்ட அழகினால் பெருந்திமிர் பிடிச்சவள் போலக் காணப்பட்டவள் எழுந்து கொள்ளச் சிரமப்பட்டு இயலாதவளாக என்னை நோக்கிக் கை நீட்டியதில எனக்குப் பெரும் சங்கடமாப் போச்சுது.

    ஒரு பெண் அதிலும் வடிவான பெண் என்னை நோக்கிக் கை நீட்டியதுல சங்கடமாப் போச்சுதெண்டாலும் அந்த இடத்துல அவளுக்கு உதவுறதுக்கு ஆருமில்லையெண்ட காரணத்தினால அவளைக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டன். அவளின்ர கைகள் கடும் மென்மையாக இருந்ததில எனக்கு ஒரு மாதிரியாகிப் போச்சுது .இதுவரையில எந்தப்பெண்ணினதும் கைகளைத் தொட்டிராத என்ரை கைகள் காய்ச்சுப்போய்க் கரடுதட்டி இருந்திச்சுது. தங்கச்சிகள் ரெண்டு பேரும் வயசுக்கு வந்த பின்னால அவங்களது கைகளைக் கூடத் தொட்டதில்ல. ஊரில கல்லுடைக்கப் போற அவங்களிண்ட கைகளும் கூடக் காய்ச்சுப்போய்த்தான் இருக்கும்.

    நல்ல வாசனையோடு இருந்தவள் ஜீன்ஸும்,சட்டையும்,அரை அடிக்கும் சற்றுக் குறைவான அடி உசந்த செருப்புக்களும்  போட்டிருந்தவ. எனக்கு அந்தச் செருப்புக்கள் கனக்க ஆச்சரியத்தைத் தந்தன. என்ரை அம்மாவோ, தங்கச்சிகளோ இது போன்ற அடி உசந்த செருப்புக்களை அணிந்த பெண்களைப் பார்த்திருக்க மாட்டாங்கள். அவங்களெண்டு மட்டுமில்ல. கூலி வேலைகளுக்காக மட்டுமே வீட்ட விட்டு வெளியே கிளம்புற என்ரை ஊர்ப் பெண்களெவரும் கூடப் பார்த்திருக்க மாட்டாங்கள்.

    நான் இந்த நாட்டுக்கு வந்த கொஞ்சநாட்களுக்குள்ளேயே இது போல அடி உசந்த செருப்புக்கள் போடுற பெண்பிள்ளைகள் கனக்கப்பேரைப் பார்த்தாச்சுது. ஆனாலும் அதுக்கான வியப்பு மட்டும் என்னை விட்டும் இன்னும் விலகேல்ல. மாபிள்கள் பதிக்கப்பட்ட தரையில புது லாடமடிச்ச குதிரை போற சத்தமிருக்கேல்லே ? அதே மாதிரியான சத்தத்தோட சிலர் நடக்கேக்க பார்க்க வினோதமாயிருக்குமெனக்கு. என்ரை சிறு அறையில அந்த மாதிரி உசந்த செருப்புக்களைப் போட்டுக் கொண்டு நடப்பதாக நினைச்சிக் கொண்டு கால் முன்விரல்களால மட்டும் நடந்து பார்த்து நொந்திருக்கிறன். என்னைப் பொறுத்தவரையில அந்த மாதிரியான செருப்புக்களைப் போடுறவங்கள் கடும் திறமை வாய்க்கப்பெற்றவங்கள்.

    எனக்கு நினைவு தெரிஞ்ச காலந்தொட்டு என்ரை அம்மா என்றைக்குமே சாதாரண ரப்பர் செருப்புக் கூடப் போட்டதை நான் கண்டதில்ல. அவரின்ற அடிக்கால்கள் ரெண்டும் பித்தவெடிப்பாலும், கல்குவாரியில் நிறைஞ்சிருக்கும் சில்லுக் கல்லு இருக்கேல்ல?அது குத்தியும் காய்த்துத் தடித்துப் போய்க் கிடக்கும். அதில எந்த உணர்ச்சிகளும் தெரிவதில்லை எண்டுகூடச் சொல்லுவா அம்மா.

    தங்கச்சிகள் ஸ்கூலுக்குப் போட்டுப் போறதுக்கெண்டும் கூலி வேலைக்குப் போகேக்க போட்டுக் கொண்டு போறதுக்கெண்டும் ரெண்டு சோடி றப்பர் செருப்புக்கள் வேற வேற கலர்கள் ல வச்சுக் கொண்டிருக்கினம். ஸ்கூலுக்குப் போட்டுப் போகும் செருப்புக்கள் மட்டும் தான் ஒரே நிறத்தில ஒரே அளவோடு இருக்கும். அதையும் வீட்டுக்கு வந்ததுமே கழுவி மூலையில் பத்திரமா வச்சிடுவினம் . மற்றைய சோடி எப்பொழுதோ ஸ்கூலுக்குப் போட்டுச் சென்று வார் அறுந்ததாகவோ, இல்லையெண்டால் நன்றாகத் தேய்ஞ்சுபோனதாகவோதான் இருக்கும்.

    நான் கூட அப்படித்தான். என்ரை ஆறு வயசில முதன்முதலா என்ரை அப்பா என்னை ஊர் ஸ்கூலுக்குச் சேர்க்கப் போகேக்க தான் கால்ல றப்பர் செருப்புப் போட்டன். அந்த ஊரில பதினோராம் வகுப்பு முடியுமட்டுக்கும் செருப்பு மட்டும் தான். மேல படிக்குறதுக்காக பக்கத்துப் பெரிய ஊருக்குப் போகச் சொல்லி எல்லோரும் சொல்லேக்க எனக்கு செருப்புப் போட்டுக் கொண்டு அங்கேயெல்லாம் படிக்கப் போகப் பெரும் தயக்கமாயிருந்துச்சுது. அப்ப என்ரை ஊர் ஸ்கூல் அதிபர் தான் நான் பதினோராம் வகுப்புச் சோதினையில நல்லாப் பாசாகி ஊர்ப்பாடசாலைக்கு நல்லபெயர் வாங்கித் தந்தனெண்டு சொல்லி ஒரு சோடிச் சப்பாத்துக்களைப் பரிசளிச்சவர்.

    அண்டைக்கு எனக்கு சப்பாத்துப் போட்டுக்கொண்டு வானத்துல நடக்குறது போலத் தாங்கொணாத களிப்பு. அந்தச் சோடியை  வீட்டுக்குக் கொண்டுவந்த நாள் என்ரை தங்கச்சிகளும் ஆசையோடு அதைப் போட்டுப்பார்த்தவள்கள். இந்த மாத சம்பளத்தில அவையள் ரெண்டு பேருக்கும் நல்ல செருப்பு இரண்டு சோடி வாங்கி வைக்கவேண்டுமென நினைச்சுக் கொண்டன்.

    அந்த உசந்த செருப்புத் தடுக்கியதிலதான் இவள் விழுந்திருக்கவேணும். எழுந்து நிண்டுகொள்ளச் சிரமப்பட்டவள், ஒரு அடிபட்ட பாம்பினைப் போல 'ஸ்ஸ்ஸ்' எண்டு முனகினாள். ஒரு அடி எடுத்துவைச்சவள் மேலும் நடக்க முடியாமல் அவளாகவே பக்கத்திலிருந்த என்ரை  தோளினைப் பிடிச்சுக்கொண்டாள். பின்னர் அரபு மொழியில் அவள் சொன்னதெதுவும் எனக்குப் புரியேல்ல.

    நான் புரியேல்லை என்டது போலச் சாடை செய்தன். பிறகு அவள் ஆங்கிலத்தில் கூறியதை வைச்சும் தூரத்து நிழலில நிறுத்தியிருந்த சிவப்பு நிறக்காரினைக் காட்டியதைக் கொண்டும் அவளிண்ட கார் வரையில நடந்து போக என்னை உதவும் படி கூறுகிறாள் என்றதப் புரிஞ்சுகொண்டனான்.

    'தயக்கமில்லாமல் வெளிநாட்டுக்குப் போ ராசா..நீ எங்கேயோ போயிடுவாய் ' என்டு விசா வந்த அண்டைக்கு அம்மாவுடன் ஊர் ஜோஸியக்காரரைப் பார்க்கப் போன போது ஜோஸியக்காரர் சொன்னது சம்பந்தமேயில்லாமல் இப்பொழுது என்ரை நினைவில வந்துச்சுது.

அவள் என்னை விடவும் உயரமானவளாக இருந்ததுல என்ரை தோளைப் பற்றியிருந்தாள். அவளது மற்றக் கை என்ரை கைகளைப் பற்றியிருந்துச்சுது. என்ரை வாழ்வின் மிகப்பெரும் தயக்கம் என்னைச் சூழ்ந்தது போல இருந்துச்சுதெண்டாலும் அவளை நான் கார் வரைக்கும் கூட்டிப் போனன்.

    காரின் அருகினில் போய்ச் சேர்ந்ததும் அதுக்கான சாவியை விட்டுத் திறந்து சாரதி இருக்கையில மெதுவாக அமர்ந்து கொண்டவள், நான் நகர முற்பட்ட வினாடி 'மீண்டும் ஒரு உதவி' என்றாள். அவள் தன்ட கைப்பையிலிருந்து பேனையை எடுத்து என்ரை  உள்ளங்கையை நீட்டச் சொல்லி அதில நான்கு இலக்கங்களை எழுதினாள். எனக்கு இண்டைக்கு நடப்பதெல்லாம் பெரும் வியப்புக்குரியதாகவும் குழப்பமளிப்பதாகவும் இருந்துச்சுது. என்ரை வாழ்விலேயே இன்றுதான் பெரும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாளெண்டு  எண்ணிக் கொண்டன்.

    அவள் திரும்பவும் தன்னோட கைப்பையிலிருந்த வங்கியிலிருந்து காசெடுக்கும் ஏடீஎம் கார்டினை எடுத்து நீட்டினாள். நான் புரிஞ்சு  கொண்டவனாக எவ்வளவு எனச் செய்கையில கேட்டன். அவள் மீண்டும் என்ரை உள்ளங்கையினை வாங்கி 5000/= என எழுதி காசு  எடுத்துவரும்வரையில் காரில காத்திருப்பதாகச் சொன்னாள்.

    அவள் காசு எடுப்பதற்காகத்தான் அந்த ஒழுங்கையால் போயிருக்கவேணும். ஒழுங்கையின் மூலையில் வங்கிக்கு முன்னால் இரு ஏடீஎம் மெஷின்கள் இருக்குது. நான் என்ரை அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தவாறே மீண்டும் ஒழுங்கையால் ஓடினன். வங்கிகள்ல இருந்து நானிப்படிக் காசு எடுப்பது இதுதான் முதல் முறை. மெஷின்கள் கொடுத்த அறிவுருத்தல்களின் பிரகாரம் நான் என்ரை உள்ளங்கையைப் பார்த்தவாறு செயல்பட வேண்டியிருந்திச்சு. அந்த வங்கியில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு எடுக்கக் கூடிய தொகை 5000/= மட்டும் தான்.

    கார்டினைப் போட்டுக் காசு எடுக்குறதுவும், இவ்வளவு பெருந்தொகையை ஒரே முறையில் எண்ணிப்பார்க்குறதுவும் எனக்கு இதுதான் முதல் முறை. ஏடீஎம் மெஷின் இருந்த அறைக்குள்ளே பல தடவைகள் அக்காசுத்தாள்களை எண்ணிப்பார்த்தன். புது உலகத்தில மிதக்குற மாதிரி உணர்ந்தன். திரும்பவும் அவளின்ரை காரை நோக்கி ஓடிப்போனன்.

    அவள் உள்ளங்கை அளவேயான சின்னக் கண்ணாடியொன்றில பார்த்துத் தன் உதடுகளுக்குச் சாயமிட்டுக் கொண்டிருந்தாள். என்னிட்டயிருந்து பணத்தினை எண்ணி வாங்கியவள் கணக்கின் மீதியைக் கேட்டாள். எனக்கு அவள் கேட்பது புரிந்தும் புரியாமலுமிருந்திச்சு. மீண்டும் என்னிட்ட கார்டினைத் தந்தவள் 'பேலன்ஸ் ரிஸீட்' எனச் சொல்லி லேசாச் சிரிச்சாள். மறுக்க வழியின்றி அதனை வாங்கிக் கொண்டு மீண்டும் மெஷினுக்கு ஓடினன்.

    கடும்பசி ஒரு பக்கம் வயிற்றில தாளம் போட்டுக் கொண்டிருந்துச்சு. என்ரை மேலேயே எனக்கு ஒரு கணம் கோபம் கூட வந்துச்சுது. மறுகணம் 'எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படிப்பட்ட வடிவான பெண்ணின்ட நம்பிக்கை? ஆரென்றே அறியாத என்னிடத்தில எவ்வளவு நம்பிக்கையோட கார்டினையும் ரகசிய இலக்கங்களையும் தருகிறாள்?' எண்டு நெனச்சிக் கொண்டே பேலன்ஸ் ரிஸீட்டோடு ஓடி வந்து பார்க்க, கார் அங்கிருக்கேல்ல.

    என்னவாச்சுது இவளுக்கு? எங்கே போனவள் ?அப்படியென்ன அவசரம் அதற்குள்? எனக்கு எதுவும் புரியேல்ல.வெயிலால கடுமையா  வியர்த்து வழிஞ்சது. சில நிமிஷங்கள் அங்கு நின்று பார்த்தன். பின்னர் அவள் என்னைத் தேடி வங்கியின் முன்பக்கமாக வந்திருப்பாளோ எண்டு நெனச்சு மீண்டும் மெஷினுக்கருகில ஓடிவந்தன்.

    அங்கேயும் அவள் இல்லை. பசியும்,வெயிலும் என்ரை உடலுக்கு ஒரு உதறலைத் தந்து கொண்டிருந்துச்சுது. அவள் மீண்டும் என்னைத் தேடிவருவாள் எண்டு நம்பினன்.வெயிலிலிருந்து தப்பிக்க ஏடீஎம் மெஷினிருந்த சிறு அறைக்குள்ளேயே சில நிமிஷங்கள் காத்துக் கொண்டிருக்கேக்க முன் வீதியில அந்த வாகனம் வந்து நிண்டுச்சுது.

    அதிலிருந்து நாலு பேர் இறங்கி மெஷினிருந்த அறைக்குள் வருவதைக் கண்டு, அவங்களுக்கு இடம் கொடுத்து வெளியேற முற்பட்ட என்னை  அவங்கள் இறுகப்பிடிச்சுக் கொண்டாங்கள். தடித்து, உயர்ந்திருந்த அவங்கள் சூடான் தேசத்தவராக இருக்கவேணும். பெரிய உதடுகள் துடிக்க மிரட்டும் தொனியில் விசாரிக்க ஆரம்பித்த அவங்கள் பொலிஸ்காரர்கள். அது பொலிஸ் வாகனம்.

    அந்த ஏடீஎம் கார்ட் ரெண்டு நாட்களுக்கு முன்பு திருடு போனதொன்று எண்டும், மெஷினிருந்த அறையின் கேமராவின் மூலம் நான் மாட்டிக் கொண்டனெண்டும் , ஒரு அறபி ஷேக்குக்குச் சொந்தமானதை எப்படித் திருடினாய் எண்டும் விசாரித்ததில எனக்கு எதுவும் விளக்கிச்  சொல்ல பாஷை தெரியேல்ல.

    ஆங்கிலத்தில 'எனக்கொண்டும் தெரியாது' எண்டு மட்டும் திக்கித் திணறிச் சொல்லமுடிந்தது என்னால. என்ரை கையிரண்டையும் இறுக்கமாகப் பிடிச்சு இழுத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில ஏற்றினாங்கள். திடீரென எனக்கு இழைக்கப்பட்ட அநீதியிண்ட பாரத்தாலயும்,கடும் பசியினாலயும் நான் கண்கள் மயங்கிச் சரியும் இறுதிநொடியில பொலிஸாரின் அடி உயர்ந்து தடித்த சப்பாத்துக்களைத்தான் கடைசியாக் கண்டன். ஜோஸியக்காரனின்ட குரலும் காதுக்குள் ஒலிச்ச மாதிரிக் கேட்டது.

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

நன்றி - உயிர்மை

Thursday, June 25, 2009

அடைக்கலப் பாம்புகள்


       எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம். தோலில் என்ன மாதிரியான வடிவங்களிருந்தன என்று நினைவில்லை. நான் அந்தக் காலைவேளையில் கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். வீடு கூட்டிக் கொண்டிருந்த தங்கை  கட்டிலுக்கடிக்கடியில் தும்புத் தடியைப் போட்டு இழுத்ததில் உள்ளிருந்த பாம்பு மாட்டிக்கொண்டு வெளியே வந்து விழுந்தது. அவள் 'பாம்பு, பாம்பு' எனப் பெரிதாகக் கத்தத் தொடங்கி விட்டிருந்தாள். நான் சத்தம் கேட்டு அதிர்ந்து முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தபொழுது அவள் ஓடி விட்டிருந்தாள். பாம்பைத் துணைக்குச் சேர்த்த தும்புத்தடி நிலத்தில் கிடந்தது. பாம்பைக் காணவில்லை.

        சவரம் செய்து கொண்டிருந்த அப்பா, முகத்தில் பாதி நுரையோடு தங்கையின் அலறலுக்கு ஓடி வந்து என்னறையை எட்டிப் பார்த்தவாறு நின்றிருந்தார். அம்மாவின் ஒரு கையில் ஈர மா அப்பியிருந்தது. சமையலறையில் வேலையாக இருந்திருக்க வேண்டும். பாம்பு திரும்பவும் போய் கட்டிலடியில் ஒளிந்திருக்க வேண்டுமென்பது அவர்களது ஊகம். 'டேய்..இறங்காதேடா..நிலத்தில காலை வைக்காதேடா' என எனது கட்டிலைச் சுற்றியும் என்னைக் கொத்தவென்றே பல நூறு பாம்புகள் நெளிவது போன்று வாசலில் நின்றிருந்த அம்மா பதறிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்தப் பாம்பு நாங்களிருந்த மொத்த வீட்டையும் விழுங்கிவிடுமெனப் பயந்தோ அல்லது தனது சாகசத்தை விவரிக்கவெனவோ தங்கை அயல்வீடுகளுக்கெல்லாம் செய்தி பரப்பி உதவி கேட்டு விட்டிருந்தாள். அயல்வீடுகளின் சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எனது அறை வாசலை நிறைத்தார்கள். ஏதோ அவர்களது பேச்சும், மொழியும் பாம்புக்குக் கேட்டு அது வேறு திட்டத்துக்கு நகருமென நினைத்தார்களோ என்னவோ எல்லோருமே மெதுவான குரலில் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். நான் கட்டிலில் மேற்சட்டையின்றி இருந்ததால் எல்லோரின் முன்பும் இயல்பாக வந்த ஒரு கூச்சத்தோடு காய்ச்சல் கண்டவனைப் போல போர்வையால் போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். இப்படி எழும்பிய முகத்தோடு இவ்வளவு அசிங்கமாக ஊரை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென பாம்பு நினைத்ததோ இல்லையோ, நான் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

        பாம்பு சீறிப் பாய்ந்து வந்து தன் வாயை அகலத் திறந்து அவர்கள் எல்லோரையும் ஒரே மூச்சில் விழுங்கி விடுமோ என்பது போல அந்த அறைக்குள் அடியெடுத்து வைக்கப் பலரும் பயந்தார்கள். பாம்பு கட்டிலின் அடியில் எந்த மூலையில் ஒளிந்திருக்கிறது எனப் பலரும் தூர இருந்தே குனிந்து குனிந்து பார்த்தார்கள். அறைக்குள் பரவியிருந்த மின்சார வெளிச்சம் கட்டிலுக்கு நிழலைக் கொடுத்து அதனடியை இன்னும் இருட்டாக்கியிருந்தது. ஒருவரது பார்வைக்கும் பாம்பு எட்டவில்லை. ஒருவர் தனது கூரிய கண்களுக்குத் தென்பட்ட பாம்பு கட்டிலின் வலது மூலையிலிருக்கிறது என்றார். இன்னொருவர் இடது மூலையிலென்றார். இப்பொழுது ஒற்றைப் பாம்பு இரண்டு பாம்புகளாகி விட்டிருந்தது. தங்கை அதற்குள் ஏதோ பெருங்கதையைச் சொல்வதைப் போல மூச்சு வாங்கி வாங்கித் தான் அந்தப் பாம்பை இழுத்துப் போட்டதைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் இரு அடி நீளப்பாம்பு எனச் சொன்னது பலரது வாய்வழியாகப் போய் இறுதியில் ஆறு அடி நீளப்பாம்பாகி ஓய்ந்தது.

        கட்டிலடியில் வந்து ஒளித்திருப்பதனால் சிலர் அது சாரைப் பாம்பாக இருக்கும் என்றார்கள். சிலர் நல்ல பாம்பென்றும், இல்லாவிட்டால் புடையனாக அல்லது கண்கொத்திப் பாம்பாக இருக்கக் கூடுமென்றும் சொன்னார்கள். புடையனென்றால் அது நல்ல விஷமாம். சாரை அவ்வளவாக விஷமில்லையாம். கண்கொத்திப் பாம்பென்றால் கண்ணை மட்டும் குறி பார்த்துக் கொத்திவிடுமாம். அது நல்ல பாம்பென்றால் ஏதேனும் பழைய பகையை மனதில் வைத்து பழி வாங்க வந்திருக்குமென்றார்கள். நான் பாம்புக்கு என்ன செய்திருக்கிறேன். அது என்னைப் பழி வாங்க?

        பெருநாட்களுக்கு, திருநாட்களுக்கு ஊருக்குள் வரும் பாம்பாட்டி, மகுடி ஊதுகையில் ஆடும் நீளமான நல்ல பாம்பைக் கூட எட்டி நின்றே பார்த்திருக்கிறேன். அதுவும், எல்லோரும் சுற்றிவர நின்று பாம்பு, 'எந்நாளும் ஒரே இசைதான்' என்று மகுடி இசையை வெறுத்துத் தங்கள் கால்களுக்கிடையால் எங்காவது ஓடி விடுமோ எனப் பயந்து, அழுக்குச் சாக்கடையருகில் நிற்பது போல ஆண்கள் அன்று உடுத்திருக்கும் தங்களது புதுச் சாரனை அல்லது களிசானை, பெண்கள் தங்கள் புதுப்பாவாடையை அல்லது சேலையை முழங்காலோடு சேர்த்துப் பிடித்தவாறு ஓடுவதற்குத் தயாராக நின்றபடிதான் பாம்பாட்டியின் மகுடி வாசிப்பைக் கேட்டு அச்சத்தோடு பாம்பு நடனத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பார்கள்.

        பாம்பை விடவும் பாம்பாட்டியுடன் கூடவரும் குரங்கு அதிகமான ஆட்டத்தைக் காட்டி ரசிக்கச் செய்யும். மனிதர்களைப் போலவே சின்னச் சின்னதாய் வண்ண வண்ண ஆடை அணிந்து, சின்னதாக ஒரு தொப்பி போட்டுக் கொண்டு பல்லை இளித்தபடி ஆடும்போது சில மனிதர்களது நடனத்தை விடவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். ஒரு நீண்ட கோலைக் கழுத்தில் வைத்துக் கொண்டு திருடன், பொலிஸ் கதை சொல்லும். அதை விடப் பெரிய குரங்குகள்தான் பொலிஸில் இருப்பதாலோ என்னமோ அக் கதையில் மட்டும் எப்பொழுதும் திருட்டுப்பயலின் கதாபாத்திரம்தான் குரங்குக்கு வழங்கப்பட்டிருக்கும். அதுவும் தலையில் பானை திருடிப் போவது போலவும் பிறகு பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு பொலிஸ் தன்னைக் கைது செய்து கொண்டு போவது போலவும் நடித்துக் காண்பிக்கும். இப்பொழுதெல்லாம் கைது செய்யப்பட்டுப் பல்லிளித்துக் கையசைத்துச் செல்லும் அரசியல்வாதிகளைப் போல நடிக்க அப்பொழுதே குரங்குக்குத் தெரிந்திருக்கிறது என்பதில்  ஆச்சரியம்தான் எனக்கு.

        இறுதியில் பாம்பினதும், குரங்கினதும் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் குரங்கு, பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தனது தொப்பியை நீட்டியபடி காசு கேட்டு வளைய வரும். அப்போது பார்த்துக் கொண்டிருந்த சில குரங்குகள் காசு போடாமலேயே பின்னால் நகர்ந்து மாயமாவதையும் கண்டிருக்கிறேன். அப்பொழுதுகளில் கூட நான் பாம்புக்கோ, குரங்குக்கோ, அவற்றின் சொந்தக்காரனுக்கோ மனதளவில் கூடத் துரோகம் செய்ததில்லை. காசு போட்டுவிட்டுத்தான் நகர்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னில் நல்ல பாம்புக்கென்ன கோபமிருக்கமுடியும்?

        வந்திருந்த இன்னுமொருவர் அது மண்ணிறப் பாம்பு என்பதால் அதற்கு வேறு ஒரு பெயர் சொன்னார். பெயர் நினைவில்லை. ஆனால் அந்தப் பெயருடைய பாம்பைத் தொட்டாலே உயிர் போய்விடுமென்றார். வந்திருந்த எல்லோரும் பாம்பை நான் என் நெற்றியில் வைத்திருப்பதைப் போல என்னைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலொருவர் என்னைக் கட்டிலிலிருந்து அப்படியே தூரப் பாய்ந்து ஓடி வந்துவிடும்படி சொன்னார். அதிலொரு சிக்கலிருந்தது. கட்டிலை விட்டும் பாய வேண்டுமானால் எழுந்து கட்டிலின் மேல் ஏறி நிற்க வேண்டும். கட்டிலின் மேல் ஏறி நின்றால் தாழ்ந்த கூரையில் சத்தமாகச் சுழலும் பழங்காலத்து மின்விசிறி கழுத்தை வெட்டி முண்டமாக்கிவிடுமென ஐயப்பட்டேன். அதனால் அதுவும் சாத்தியமாகவில்லை.

        முன்னொரு முறை தயிர்க்கார மாமி வீட்டுப் பெண்ணை இப்படித்தான் ஒரு மண்ணிறப் பாம்பு தீண்டிவிட்டது. அந்த மாமி வீடு அடுத்த ஊரிலிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பத்துநிமிட சைக்கிள் பயண தூரம். மாமியென்றால் சொந்த, இரத்தபந்த உறவுமுறை மாமி ஏதும் இல்லை. கிராமங்களில் அப்படித்தான் ஊர் மக்களை, தெரிந்தவர்களை  ஏதாவது உறவு முறை வைத்து அழைக்கவே பழக்கப்பட்டிருந்தோம். அதனால் நாம் அவரை மாமி என்றழைத்தோம். அத்தோடு இன்னுமொரு காரணம் இருந்தது. அந்த மாமிக்கு ஒரு அழகான, எங்களை விடவும் இளவயதில் ஒரு மகளிருந்தாள். அந்த விதவை மாமி தனது மகளோடு எங்கோ தூரத்திலிருந்து வந்து, அடுத்த ஊரிலிருந்த தன் தம்பி வீட்டில் தங்கியிருந்தார். வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமலோ, அல்லது வருமானத்துக்கென்றோ தயிர் தயாரித்து விற்கத்தொடங்கியிருந்தார். மண் சட்டிகளில் நிரப்பி வீட்டுத் திண்ணையிலிருந்த கண்ணாடி அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தயிரை அவரது மகள்தான் விற்பாள். மாமிக்குக் கணக்கு வழக்குத் தெரியாது. அப்படியொரு அழகான பெண் அடுத்த ஊரில் தயிர் விற்கிறாளெனக் கேள்விப்பட்டதும் நானும், எனது நண்பர்கள் இருவரும் சைக்கிள்களில் ஒருமுறை அந்த ஊருக்குப் போய் அவளது வீட்டுமுன்பிருந்த தெருவில் சுற்றி அவளைப் பார்த்துவந்தோம்.

        முழுக்க முழுக்கத் தயிரும் வெண்ணையும் நெய்யும் மட்டும் தின்றே வளர்ந்திருப்பாளோ என எண்ண வைக்கும்படியான மிக அழகான நிறம். கூர்மையான விழிகள். நல்ல கறுப்புப் பட்டுத் தாவணியின் நுனிகள் இரண்டில் முடிச்சுக்களிட்டு நேராகக் கொடியில் காயப்போட்டது போல ஒரு சுருக்கம் கூட இல்லாமல் நீண்ட அழகிய, அடர்த்தியான கூந்தல். இந்த மாதிரியான கூந்தல் சீனப்பெண்களுக்கே வாய்க்கக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அவிழ்த்து விட்டிருந்தாள். அவளைப் பார்த்த கணம் முதல் நாங்கள் மூவரும் அவளைக் காதலிக்கத் திட்டமிட்டோம். தனக்குத்தானெனச் சொல்லி அப் பதின்ம வயதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டோம். இறுதியில் ஒரு தீர்வுக்கு வந்தோம். மூவரும் போய் தினமும் அவளை வளைய வருவதும், அவள் யாரை விரும்புகிறாளோ அவனுக்கு மற்றவர்கள் விட்டுக் கொடுக்கவேண்டுமெனவும் ஒற்றுமையாகத் தீர்மானமெடுத்துக் கொண்டோம்.

         எங்களூருக்கு கிழமைக்கு ஒரு முறை தயிர்க்காரன் வருவான். ஊரிலுள்ளவர்கள் அவனிடமே எப்பொழுதும் தயிர் வாங்கிக்கொள்வார்கள். கடனுக்கும் தந்துசெல்வான். மாதம் முடியப் பணம் கொடுப்போம். கத்தியால் வெட்டியெடுக்கும்படியான நல்ல, சுத்தமான கெட்டித்தயிர். அப் பெண்ணைப் பார்க்கப் போகவேண்டுமென்றால், அவளுடன் பேச வேண்டுமென்றால் அவர்களிடம் போய் தயிர் வாங்கவேண்டும். தயிர்க்காரனிடம் வாங்கிப் பழகிப் போயிருந்த எனது வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும் அப் பெண்கள் தயாரித்து விற்கும் தயிரை வாங்கத் தயாரில்லை. அப்பொழுதுதான் நாங்கள் தயிர்க்காரனுக்கு ஒரு துரோகம் செய்தோம். தான் தயாரிக்கும் தயிர் கெட்டியாக, கிழவன் ஏதோ தீயதைக் கலக்கிறானென ஊருக்குள் பரப்பிவிட்டோம். கிணற்றடியிலிருந்த ஒரு வாயாடிக் கிழவியிடம் 'அது உண்மையா?' என்பதுபோல விசாரித்தும் பார்த்தோம். அதன்பிறகு அவ் வதந்தி இலகுவாக ஊருக்குள் பரவிவிட்டது.

        இப்பொழுது எனது வீட்டுக்கு, அயல் வீட்டுக்கு, இன்னும் ஊருக்குள்ளிருந்த சில சொந்தக்கார வீடுகளுக்கென்று தயிர் வாங்கிவரும் பொறுப்பை நானெடுத்துக் கொண்டேன். அப்படியே நண்பர்களும் ஒவ்வொரு வீடாகப் பொறுப்பெடுத்திருந்தார்கள். மூவரும் தினமும் வேளைக்கொருவராகப் போய் தயிர் வாங்கி வந்துகொடுத்துச் சமூக சேவையாற்றிக் கொண்டிருந்தோம். நான் தயிர் வாங்கப் போகும்வேளை எப்பொழுதுமே முறைத்துப் பார்த்தபடி அவளது மாமாவும் கூடவே இருப்பார். அவள் ஏதாவது புத்தகம் வாசித்தபடி இருப்பாள். என்னைக் கண்டதும் மெலிதாகச் சிரித்தபடியே, காசை வாங்கிக் கல்லாவில் போட்டு விட்டுத் தானியங்கிக் கதவைப் போலத் திரும்பி தயிர்ச் சட்டிகளை அலுமாரியிலிருந்து எடுத்துவைப்பாள். மாமா அதை நாரில் கட்டிப் பின் சைக்கிளின் பின்பகுதியில் பிணைத்துத் தருவார். இனி எடுத்துக் கொண்டு வரவேண்டியதுதான். சைக்கிளில் ஏறும் கணத்தில் அவளைப் பார்ப்பேன். அவள் என்னைக் கண்டுகொள்ளாமல் திரும்பவும் புத்தகத்துக்குள் மூழ்கிப் போயிருப்பாள். அவள் முதுகுக்கும் கதிரைக்கும் சிக்காத தலைமுடியில் சில காற்றிலாடி நாளைக்கும் வா என்கும்.

        இவ்வளவுதான் எனக்கும் அவளுக்கும் நடந்திருக்கும். ஆனால் இரவில் நண்பர்கள் மூவரும் கூடிக் கதைக்கும்பொழுது இச் சம்பவத்துக்குள் பல பொய்கள் வந்துவிழும். அந்தப் பெண் தனியே இருந்தாள் என்றும், என்னைப் பார்த்துச் சிரித்தாள் என்றும் என்னை விரும்புவதாகச் சொன்னாளெனவும் நான் சொல்வேன். நண்பர்களும் இதேபோலக் கதையளப்பார்கள். அவள் தனக்குத்தானென ஒவ்வொருவரும் உள்ளுக்குள் மருகி  சிலிர்த்துக் கொள்வோம். இப்படிச் சில நாட்கள் கழிந்திருக்கும். ஒருநாள் தயிர் வாங்கப் போனவேளை அவளில்லை. தயிரும் அன்று விற்கப்படவில்லை. என்றுமே வெளியில் வந்து கண்டிராத அவளின் தாய், அன்று வெளியே வந்தார். கோட்டுப் போல மெலிந்த அந்த மனுஷி வெளியே வந்து தன் மகளை விஷப்பாம்பு கொத்திவிட்டதென்றும் நாட்டுமருந்துக்கும் விஷம் இறங்காமல் நகரத்திலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலையோடு சொன்னார். நான் சைக்கிளை மூச்சு வாங்க வாங்க வேகமாக மிதித்துவந்து நண்பர்களிடம் தகவலைப் பரிமாறினேன்.

        அவர்களும் பதறிப்போனார்கள். நாங்கள் மூவரும் பஸ் பிடித்து வைத்தியசாலைக்குப் போய் அவளைப் பார்த்துவருவது எனத் தீர்மானித்துக் கொண்டோம். அவ்வேளை ஊருக்குள் பஸ் காலையும் மாலையும் மட்டுமே வந்துபோகும். நாங்கள் அடுத்த நாள் காலை பஸ் பிடித்துப் போய்க் காத்திருந்து நோயாளர் பார்வை நேரத்தில்  வைத்தியசாலைக்குள்ளே போனோம். முறைத்துப் பார்த்தபடி மாமா நின்றிருந்தால் தற்செயலாக, வேறு யாரையோ பார்க்கவந்தது போல காட்டிக் கொள்ளவேண்டுமென முன்பு பேசிக் கொண்டிருந்தோம். நல்லவேளையாக அவள் மட்டுமே அங்கு இருந்தாள். மிகுந்த கரிசனையோடு வந்திருக்கும் எங்களைப் பார்த்ததும் ஒருவித வெட்கத்தோடு புன்னகைத்தாள். எழுந்து உட்கார முயற்சித்தாள். விடிகாலையில் மாட்டிடம் பால் கறக்கும் போது ஏதோவொரு மண்ணிறப் பாம்பு அவள் காலைக் கொத்திவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அன்றுதான் அவளது குரலைக் கேட்டோம். மிக இனிமையான குரல்.

        நாங்கள் மூவரும் எதிர்பார்க்காச் சமயம் கையில் தேனீர்ப் போத்தலோடு நன்கு வளர்ந்து, உயர்ந்த, திடகாத்திரமான ஒரு இளைஞன் எங்களருகில் வந்து நின்றான். அவள், எங்களை 'ஒரு ஊருக்கே தயிர் வாங்க வருபவர்கள்' என அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அவன் புன்னகைத்தான். பிறகு எங்களிடம் அவள், அவர் தன் மாமாவின் மகன் என்றாள். அவளைத் திருமணம் செய்யப்போகிறவர் என்றாள். எங்கள் மூவர் முகமும் பேயறைந்து வாடிப் போயிற்று. மாமாவின் முறைத்த கண்கள் இப்பொழுது அவன் முகத்திலிருந்தது போலப்பட்டது. அன்று அவளிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்த நாங்கள் 'அந்த விஷப் பாம்பு ஏன் அவனைக் கொத்தியிருக்கக் கூடாது?' எனப் பாம்பின் மேல் கோபப்பட்டோம். அதன்பிறகு அந்த ஊர்ப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. திரும்பவும் தயிர்க்காரக் கிழவன், கெட்டித் தயிரோடு ஊருக்குள் வந்துபோகத் தொடங்கினான்.

        இப்பொழுது கட்டிலடியில் ஒளிந்திருப்பது தண்ணீர்ப் பாம்பென்றால் அவ்வளவு பயம் இல்லை. தண்ணீர்ப் பாம்புக்கு அவ்வளவு விஷமில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தண்ணீருக்குள் இருக்கும் போது அது தீண்டினால் கரைக்கு வந்துவிட வேண்டுமென்றும், கரையிலிருக்கும்போது தீண்டினால் தண்ணீருக்குள் இறங்கிவிட வேண்டுமென்றும் ஊரில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்குத் தெரிந்த நண்பனொருவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீர்ப் பாம்பொன்று கால் சுண்டு விரலைத் தீண்டிவிட்டது. உடனே கரைக்கு ஏறித் துடைத்தது பாதி, துடைக்காதது மீதியென அவசர அவசரமாக உடுத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினான். 'பயப்படாதடா..விஷமெல்லாம் இப்ப இறங்கியிருக்கும்டா' என்று சொல்லச் சொல்லக் கேட்காமல் 'போற உசுரு வீட்லயே போகட்டும்' என்று வீட்டுக்கு ஓடிப் போனான். பிறகு உடனே வைத்தியரிடம் போய் ஊசியெல்லாம் போட்டுக் கொண்டான். அதுபோல இப்பொழுது ஒரு ஊசியோடு போகுமென்றால் பயப்படாமல் நிலத்தில் காலை வைக்கலாம். உயிரோடு போகுமென்றால் எப்படிக் காலைக் கீழே வைப்பது? அதில் வேறு தங்கை போட்டு விட்டுப் போன தும்புத்தடி, பாம்பைப் போலவே உருவெடுத்துத் தோன்றிக் கொண்டிருந்தது.

        அறை முழுதும் பெற்றோல் வாசனையைப் பரவவிட்டால் ஒளிந்திருக்கும் பாம்பு எங்கிருந்தாலும் வெளியே ஓடி வந்துவிடுமென ஒருவர் சொன்னார். அந்த விடிகாலையில் நகரத்துக்கு ஓடிப்போய் பெற்றோல் வாங்கிவருவது சாத்தியப்படாது என்பதனால் அந்த யோசனை கைவிடப்பட்டு எனது அறை காப்பாற்றப்பட்டது. 'சரி..பெற்றோலுக்குப் பதிலாக மண்ணெண்ணைய் பாவிப்போம்' என இன்னொருவர் கூறினார். மண்ணெண்ணைய் வீட்டிலிருந்தது. இப்பொழுது மண்ணெண்ணையை எப்படி அறை முழுதும் ஊற்றுவதா, விசிறுவதா, தெளிப்பதா எனச் சிறிய ஆலோசனை நடந்தது. இறுதியில் நீண்ட மூங்கில் கழியொன்றின் முனையில் ஒரு புடவையைச் சுற்றி அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கட்டிலுக்கடியில் அங்குமிங்குமாக ஆட்டினால் ஒளிந்திருக்கும் பாம்பு, அதன் வாடை தாங்காமல் எப்படியும் வெளியே ஓடிவந்துவிடுமெனும் முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கும் முதலில் வாசலில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். பிறகு வாசலின் இரட்டைக் கதவில் ஒன்று மூடப்பட்டு மற்றதன் அருகில் மண்ணெண்ணெய்ப் புடவையை எதிர்முனையில் சுற்றியிருந்த நீண்ட கழியை வைத்தபடி ஒருவர் குந்திக் கொண்டிருந்தார். யன்னல்கள் எல்லாம் மூடப்பட்டிருந்ததால் வெளியேறும் பாம்பு எப்படியும் கதவு வழியாகத்தான் வருமென அவர் ஓடத்தயாராக இருந்தபடியேதான் அக் கழியை கட்டிலடிக்கு அனுப்பி ஆட்டிக் கொண்டிருந்தார். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலால் ஆட்டியும் பாம்பு வரவில்லை. எனக்குத்தான் அந்த வாசனைக்கு மூக்கரித்துக் கொண்டிருந்தது.

        'அதுதான் முன்பே சொன்னேன்..பாம்புக்கென்ன மோப்பம் புடிக்கிற சக்தியா இருக்கு?' என்றபடி வேறொருவர் முன்னே வந்தார். அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தவர்தான். 'அப்போ மகுடிச் சத்தம் கேட்டா மட்டும் அது ஆடுதே..அதுக்கென்ன காதா இருக்கு?' என்று திருப்பிக் கேட்டார் கழியை வைத்திருந்தவர். 'இப்படிச் சும்மா கதைச்சுக்கொண்டிருக்காம ஆக வேண்டியதைப் பார்ப்போம்' என்றார் ஆலோசனைக் கூட்டத்தின் மற்றவர். அவர் எனது அப்பா. அப்பாவுக்கு பாம்புடனான அனுபவங்கள் நிறைய இருந்திருக்கும். இருந்திருக்கின்றன என அவரே சொல்லியுமிருக்கிறார். அவரது சிறிய வயதிலெல்லாம் ஊரில் இந்தளவுக்கு நெருக்கமாக வீடுகளோ, கடைகளோ இருந்ததில்லையாம். வீட்டுக்கு முன்னாலுள்ள வயல்..அதைத்தாண்டிக் காடு..அதையும் தாண்டினால் தூரத்தே தெரியும் மலை. முன்னரெல்லாம் காட்டுக்குள் இரவு நரிகள் ஊளையிடுவது கேட்குமாம். ஊருக்குள் கோழிகளை வேட்டையாட காட்டுப் பூனைகள் வந்து போகுமாம். இப்பொழுதும் மலை இருக்கிறது. காடுமில்லை. வயலுமில்லை.

        அப்பொழுது அப்பம்மாவுக்குச் சொந்தமான பெரிய வயலில் ஒரு பெரிய, நீள நாகம் இருந்திருக்கிறது. அதைக் காவல் நாகமென அப்பா சொன்னார். அது நீளமானது. எலிகளிலிருந்தும், இன்னும் விஷ ஜந்துகளிலிருந்தும், திருடர்களிடமிருந்தும் அவ் வயலைக் காத்து வந்தது. தண்ணீர் செல்லும் வாய்க்காலின் மூலையொன்றில் படுத்து ஓய்வெடுக்கும் அதனை அப்பா நிறையத் தடவை பார்த்திருக்கிறார். அவரை அது எதுவும் செய்யாதாம். அந்த வயலுக்குச் சொந்தக்காரர்களை அது எதுவுமே செய்யாதாம். பல பரம்பரைகளாக அது இருந்து வந்ததாம். பிறகு அப்பம்மா, அப்பாவுக்கு அவ் வயலை எழுதிக் கொடுத்த பொழுதும் அங்கேயே இருந்திருக்கிறது. அப்பா, அப்பம்மாவின் விருப்பத்துக்கு மாறாக வயலை மூடி, மண் நிரப்பி, கட்டிடங்கள் கட்ட விற்ற பின்னர் ஓர் நாளில் அப் பாம்பு அவ் வாய்க்காலில் செத்துக் கிடந்ததாம். அது செத்த அன்று அப்பம்மா சாப்பிடக் கூட இல்லையாம். அன்றோடு வயலுக்கும் காவலற்றுப் போயிற்று. இயற்கைக்கும் காவலற்றுப் போயிற்று.

        இப்பொழுது திரும்பவும் ஆலோசனைக் கூட்டம் கூடியிருந்தது. 'ஒரு கீரிப் பிள்ளையை அறைக்குள்  விட்டால் அது பாம்பை எப்பாடு பட்டேனும் வெளியே இழுத்துக் கொண்டுவந்து விடும் ' என தெருமுனைப் பெரியவர் சொன்ன யோசனைதான் அந்த யோசனைகளிலேயே மிகவும் அபத்தமான யோசனையாகப்பட்டது. பாம்புக்கு நிஜமாகவே காதிருந்தால், அதற்கும் நம் மொழி தெரிந்திருந்தால் ஊர்ந்து ஊர்ந்து சிரித்திருக்கும்.

        அறைக்குள் பாம்பு எப்படி வந்திருக்குமென பெண்கள் கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததுவும் வேடிக்கையாக இருந்தது. சிலர் விறகுக் கட்டுடன் சில சமயம் காட்டுப் பாம்புகள் சேர்ந்து வருமென்றார்கள். அப்படி ஒரு சமயம் அதைச் சொல்லிக் கொண்டிருந்த பெண்ணின் மாமியாரை விறகுக்கட்டோடு வந்த ஒரு பாம்பு கடித்துவிட்ட செய்தியை பாம்புக்கு நன்றி கலந்த புன்னகையோடு பகிர்ந்துகொண்டாள். பிறகு பாம்புதான் செத்ததாம். மாமியாரே அதை அடித்துக் கொன்றுபோட்டாராம். அப்போது அவர் பாம்பைத் திட்டிய வசவுகளில் பாதி தனக்கென்றாள். அத்தோடு நின்றுவிடாமல் தூரத்துக்குக் கொண்டுபோய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு வந்தாராம். பாம்புகள் பற்றியெரியும் வாசனை கூட மனிதர்களுக்கு ஆகாது என அப்பெண் சொன்னாள். இச் சமயம் எங்கள் வீட்டுக்குப் புதிதாக விறகுக்கட்டு எதுவும் வந்திருக்கவுமில்லை. இப் பாம்பெப்படி வந்திருக்கும்?

        அடுத்து அப்பாவுக்கு வந்த யோசனையை செயல்படுத்திப் பார்த்தார்கள். அடுத்த வீட்டுக்குப் போய் வீழ்ந்துகிடந்த தென்னமோலையின் கீற்றுக் கீற்றாக உருவியெடுத்து வந்து மூங்கில் கழியின் ஒரு முனையில் கட்டினார்கள். கதவடியில் அமர்ந்தபடி அந்த நீண்ட மூங்கில் கழியின் ஒரு முனையைப் பற்றியபடி இப்பொழுது அப்பா. மறுமுனையில் எண்ணெய்த் துணிக்குப் பதிலாக நீளநீளமான தென்னமோலைக் கீற்றுக்கள். அதன் மூலம் கட்டிலடியை அவர் கூட்டுவது போல அங்குமிங்குமாக உசுப்பிவிட்டார். அதற்குப் பலனிருந்தது. கட்டிலடியைக் கூட்டுவதற்கு இடம் விடுவோமென பாம்பு நினைத்ததோ என்னவோ வெளியே ஓடி வந்துவிட்டது. அது மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறமென இப்பொழுது நன்றாகத் தெரிந்தது.

        ஈரடியுமல்ல, ஆறடியுமல்ல. எல்லோரையும் பதைபதைக்க வைத்த அது, ஒரு அடிக்கும் குறைவாக இருந்த ஒரு புல்லுப் பாம்பு. ஒரு குஞ்சுப் பாம்பு. முற்றத்தில் உலாத்தியிருந்தால் புழு என எண்ணி மைனாப் பறவை தூக்கிப் போகக் கூடிய அளவான சின்னப்பாம்பொன்று. நேற்று முற்றத்தில் பதிக்கவென மைதானத்திலிருந்து சதுரம் சதுரமாக  வெட்டிக் கொண்டு வந்து சுவரோரமாகப் போட்டிருந்த சிறு புல்லுப் பாத்தித் துண்டுகளோடு சேர்ந்து வந்துவிட்டிருக்கிறது. பின்னர் தனித்திருக்கப் பயந்து முன்னிரவில் யன்னல் வழியே அறைக்குள்ளே வந்து விட்டிருக்கிறது.

        வாசலடியிலிருந்தவர்கள் கூப்பாடு போட்டபடி அப் பாம்பு ஓட வழி விட்டார்கள். அடியடா..பிடியடா எனச் சத்தங்கள் வேறு. நானும் இப்பொழுது கட்டிலிருந்து தைரியமாக இறங்கிவிட்டேன். பெரும் வீரர்களைப் போல பாம்பின் பின்னாலேயே விரட்டிப் போனோம். அது ஊர்ந்து ஊர்ந்து போய் நாங்கள் என்றுமே தேடி மீளப் பெற்றுக் கொள்ளமுடியாதபடிக்கு புதுக் கட்டடங்கள் கட்டக் கொண்டு வந்து போட்டிருந்த பெரிய கருங்கல் குவியலின் இண்டு இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டது, எங்கள் வயலைப் போல.

- எம்.ரிஷான் ஷெரீப், 
இலங்கை.

Monday, June 15, 2009

இருப்புக்கு மீள்தல் - 06


         ஒரு குழந்தையைத் தூக்குவது போல அறுபது கிலோகிராம் எடையை வைத்தியர் தூக்கிக் கட்டிலில் படுக்கவைத்தார். 'முதல் முயற்சிதானே. போகப்போகச் சரியாகிவிடும்' எனப் புன்னகையோடு சொன்னார். எனது பதற்றம் நீங்கும்வரை அருகிலேயே இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். எனது பொழுதுபோக்குகள் பற்றி விசாரித்தறிந்தார். காலித் ஹுசைனியின் எழுத்துக்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். அவரது கதாபாத்திரங்களின் வைத்தியசாலை அனுபவங்களைப் பற்றிக் கதைத்தோம். மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் குறித்துச் சொன்னபடி அன்றைய இரவு உணவை அவரே ஊட்டிவிட்டார். மருந்துகளையும் அவரே தந்தார். கதைத்துக் கொண்டிருந்தபடியே தூங்கிப்போய்விட்டேன்.

        அடுத்தநாட்களிலும் நடைப்பயிற்சி தொடர்ந்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவிட்டேன். சோர்வும் உடல் பலவீனமும் தொடர்ந்தும் இருந்ததுதான். எனினும் அறையை விட்டும் வெளியே வந்து சுற்றிவர இருந்த புல்வெளிகளிலும் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். நீண்ட நாட்களின் பின்னர் வெளிக்காற்று உடலில் பட மிகவும் இதமாக இருந்தது. அதிகநேரம் வெளியில், அந்த மருத்துவமனை வளாகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். புல்வெளியிலமர்ந்து ஏதேதோ சிந்தனையிலாழ்ந்திருந்ததைப் பார்த்த வைத்தியர் வெள்ளைக் காகிதங்களும், பேனையும் கொண்டு வந்து தந்து கவிதைகள் எழுதச் சொல்லிக் கட்டளையிட்டார்.

        இரண்டு வருடங்களாக கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறெதற்கும் பேனையைத் தொட்டவனில்லை. எல்லா எழுத்துக்களும் கணினி வழியேதான். அகில இலங்கை ரீதியில் அழகிய கையெழுத்துக்கெனப் பரிசு பெற்றிருந்த எனது கையெழுத்து எனக்கே சகிக்காமல் மற்றும் புரியாமல் கோணல் மாணலாக வந்தது. எதுவும் எழுதமுடியவில்லை. வெள்ளைத் தாள்கள் மையிட்டு நிரப்பப்படாமல் அப்படியே கிடந்தன.

        பார்க்க வந்த நண்பர்களோடு இயல்பாகக் கதைப்பது இப்பொழுது முடியுமாக இருந்தது. ஈரானியச் சகோதரியின் குழந்தைகளோடு விளையாடினேன். பழைய ஆரோக்கியத்துக்கு மீண்டு வந்துகொண்டிருந்தேன். இனி இயல்பாக இருக்கலாமென என் மேலே எனக்கு நம்பிக்கை வந்த பொழுதொன்றில் எனது அறைக்குப் போகவேண்டுமென வைத்தியரிடம் வேண்டுகோளை முன்வைத்தேன்.

        அவர் அதையும் ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். இன்னும் ஓர் நாள் தங்கிப் போகும்படி கேட்டுக் கொண்டார். முழு உடல் பரிசோதனை நிகழ்ந்தது. அன்றைய தினமும் நிறையக் கதைத்தோம். அவரது தேசக் கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார். இனிமையான ராகத்தில் பாடியும் காட்டினார். மிகவும் ரசித்தேன். அவரது அனுபவத்திலேயே என்னைக் காப்பாற்றியதுதான் மிகப் பெரிய சவாலாக அமைந்திருந்ததெனச் சொன்னார். என்னைத் தூக்கிவந்து அவரிடம் ஒப்படைத்த கணம் முதல் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கவரும்போதெல்லாம் நான் சுவாசித்துக்கொண்டிருந்தது பெரிய ஆச்சரியம் தந்தது எனவும் இறைவனுக்கு நன்றி என்றும் சொன்னார். இரண்டாம் உயிர் பெற்று நான் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் வாழ்நாளிலேயே என்னை மறக்கமுடியாதெனவும்  சொன்னார். இறுதியாக 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

        எங்கெங்கோ பிறந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டில் சந்தித்துக்கொண்டோம். அந்த வைத்தியர் பாலஸ்தீனியர். அமெரிக்காவில் வைத்தியம் கற்றவர். அவரது மனைவி பாகிஸ்தானியர். அத் தாதிகள் பிலிப்பைனையும், லெபனானையும் சேர்ந்தவர்கள். எனக்குச் சேவை செய்தவர் சூடான் தேசத்தவர். இன்னும் இலங்கை நண்பர்கள், ஒன்றாக வேலைசெய்யும் ஈரான், லெபனான்,பாகிஸ்தான், கொரியா, இந்தியா மற்றும் நேபாள தேசத்தவர்கள். இணையம் தந்த அன்பு நண்பர்கள் உலகின் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். எல்லோரினதும் அன்பான, உருக்கமான பிரார்த்தனைகள்தான் என்னை எனக்கே மீட்டுத்தந்திருக்கின்றன. நான் இவர்களுக்காக, இந்தக் கணம்வரை என்ன செய்திருக்கிறேன் ?

        வைத்தியர் என்னைப் போக அனுமதித்த நாளில் நண்பர்கள் அனேகர் வந்திருந்தனர். அறை நண்பர்களையும், அலுவலக நண்பர்களையும் அழைத்து எனது மருந்து, உணவு முறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார். இன்னும் இரு கிழமைகள் முழுதாக அறையினில் ஓய்வெடுத்துப் பின் இயலுமெனில் மட்டும் வேலைக்குப் போகும்படி அன்புக் கட்டளையிட்டார். புன்னகையோடு தலையசைத்து வைத்தேன். மிகுந்த நன்றிகளை வார்த்தைகளில் பரிமாறி தாதிகளிடமும், பணியாளரிடமும் விடைபெற்றேன்.

        அன்று பூத்த புதுரோஜாக்களால் செய்த பூங்கொத்தினை வைத்தியர் எனக்குப் பரிசளித்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. நெற்றியில் முத்தமிட்டுப் பத்திரமாகப் போய்வரும்படி அனுப்பிவைத்தார். தொடர்ந்தும் வேளாவேளைக்குத் தொலைபேசியில் அழைத்து நலம்விசாரித்துக் கொண்டும் மருந்துகளை நினைவூட்டிக்கொண்டுமிருக்கிறார். இந்த வெள்ளிக்கிழமை அவரைப் போய்ப் பார்க்கவேண்டும். என் வாழ்நாள் சகல ஆரோக்கியத்துடனும் நீடிக்கவென எனக்காகப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் அனைவரையும் ஓர் நாள் நேரில் சந்திக்கவேண்டும்.

அந்த இனிய நாளுக்காகக் காத்திருக்கிறேன் !

(நிறைவு)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Wednesday, June 10, 2009

இருப்புக்கு மீள்தல் - 05


இப்பொழுது புதிதாகக் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்துவிட்டிருந்தது. பேசாமல் இறந்துபோயிருக்கலாமோ என எண்ணும்படியான வலி உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது. வாயைத் திறக்கவோ, பேசவோ, மெலிதாகப் புன்னகைக்கவோ கூட முடியாதபடி தசைகள் எல்லாம் இறுகிப் போய் வலித்தன. இருந்தும் பேச முயற்சித்தேன். எதுவுமே ஒத்துழைக்கவில்லை. பேச்சு வராமலே போய்விடுமோ எனவும் அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன். பார்க்க வந்தவர்கள் எல்லாம் விழிகள் கசியப் பார்த்து மௌனமாக நகர்ந்தனர். வைத்தியர் அடிக்கடி வந்துபார்த்து அன்பாக ஏதேனும் கதைத்துக் கொண்டிருந்தார். இருபத்துநான்கு மணித்தியாலங்களும் அந்த வைத்தியரும், இரண்டு தாதிகளும் என்னை அவர்களது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருந்தனர். ஈரானியச் சகோதரி என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஏதேனும் திரவ உணவுப்பொருட்கள் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்தார். எதையும் பருகமுடியவில்லை.

கண்களை மூடினால் இமைகளுக்குள் எரிந்தன. தூங்கவும் முடியவில்லை. இருந்தும் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் அகன்ற பின்னர் தூங்கமுயற்சித்தேன். ஏதேதோ யோசனைகள் தோன்றித் தோன்றி மறைய தலைக்குள் ஏதோ பெரும்பாரமாய் அழுத்தியது. எப்பொழுது தூங்கிப்போனேனென நினைவிலில்லை எனினும் தூங்கி எழும்போது காய்ச்சல் விட்டிருந்தது. அதற்குப் பதிலாக இடக் கையும், இடக் காலும் செயலிழந்து போயிருந்தது. ஒரு பாதி பொம்மையை என்னுடலின் இடப்புறத்தில் கிடத்திப் பொருத்தியது போல அப்பாகங்கள் அசையாமலும், அசைக்கமுடியாமலும் கிடந்தன. வைத்தியர் வந்துபார்த்து பதறிப்போனார். முதுகுப்புறத்தில் ஊசி ஏற்றினார். வாந்தியாகப் போனாலும் பரவாயில்லையென உப்புக் கலந்த பானம் ஏதோ பருக வைத்தார். பருகிச் சிறிது நேரத்திலேயே நான் திரும்பவும் தூங்கிப் போய்விட்டேன்.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேனென நினைவிலில்லை. யாரோ மிருதுவாக கைகளையும் புருவங்களையும் நீவி விட விழித்துக் கொண்டேன். புதிதாக இரு வைத்தியர்கள் அருகிலிருந்தார்கள். என்னைப் பற்றிய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நான் விழித்ததும் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். அவர்களது செவிகளை எனது வாயருகே வைத்து பேசச் சொல்லிக் கேட்டார்கள். எனது கைகளைத் தம் கரங்களுக்குள் பொத்தி விரல் நகங்களை ஆராய்ந்தார்கள். எனது இமைகளை விரித்து ஒளி செலுத்தி உற்றுப் பார்த்தார்கள். சோதனைக் கூடப் பிராணியொன்றைப் போல வேதனையோடு எல்லாவற்றுக்கும் இசைந்துகொடுத்துக் கொண்டிருந்தேன். ஏதேதோ புது மருந்துகளுக்குப் பரிந்துரைத்துவிட்டு அவர்கள் நகர்ந்தார்கள்.

எனக்கான பிரார்த்தனைகள் நண்பர்களிடத்தில் தொடர்வதாக சகோதரி தொலைபேசியில் சொன்னார். தொடர்ந்த சிகிச்சையின் இரத்தப்பரிசோதனைகளில் குருதியில் கலந்திருந்த நச்சின் அளவு குறைந்துவருவதாக அறிக்கைகள் நற்செய்தி சொல்லிற்று. மரணத்திலிருந்து மீண்ட உடல் மருந்துகளையும், வைத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது. காரணம் சகோதரியினதும் எல்லோரினதும் அன்பான பிரார்த்தனைகளன்றி வேறு என்ன?

அடுத்த சிலநாட்களில் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நல்லபடியான மாற்றம். உடல் புண்கள் ஆறத் தொடங்கியிருந்தன. உடலியக்கம் சீராகி, இறுக்கிப் பிடித்த தசை வலியும் உடல்வலியும் இனிப் போதுமெனச் சிறிது சிறிதாக விட்டு விலக ஆரம்பித்திருந்தன. வலியும் தொண்டை அடைப்பும் குறைந்து பேச ஆரம்பித்தேன். வைத்தியரின் நகைச்சுவைகளுக்குப் பழையபடி சிரிக்கமுடிந்தது. ஈரானியச் சகோதரி தினந்தோறும் உணவுப் பதார்த்தங்கள் செய்து கணவர் மூலமாக அனுப்பிக் கொண்டிருந்தார். கஞ்சி, பழச்சாறு போன்ற திரவப்பதார்த்தங்களை தாதிகள் ஊட்டிவிட்டார்கள். உடலில் இணைக்கப்பட்டிருந்த மருந்துக் குழாய்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முழுதாக அகற்றப்பட்டன. அந்த அறைக்குள்ளேயே எழுந்து மெதுவாக வைத்தியரின் துணையோடு நடமாடத் தொடங்கினேன். எவ்வளவு நாளைக்கு அறைக்குள்ளேயே அடைந்துகிடப்பதென, தனித்து எழுந்து நடக்கமுயற்சித்த நாளில் கால்கள் துவள பளிங்குத் தரையில் வெட்டப்பட்ட மரம்போல வீழ்ந்தேன்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்

Friday, June 5, 2009

இருப்புக்கு மீள்தல் - 04


இம்முறை சற்று அதிக மணித்தியாலங்கள் மயக்கம். ஏறத்தாழ மூன்று நாட்கள். நண்பர்கள் வேலை நேரங்கள் தவிர்த்து ஓய்வு நேரங்களிலெல்லாம் வந்து பார்த்துக் கவலையோடு திரும்பிப்போனார்கள். அவர்களது உரையாடல்களெல்லாம் மிகவும் பதற்றத்துடன் என்னைப் பற்றியே இருந்திருக்கக் கூடும். அவர்களுடனான எனது இனிய நினைவுகள் மீட்டப்பட்டிருக்கக் கூடும். நான் மீண்டு வருவேனோ, மாட்டேனோ என்ற பரபரப்பு எல்லோரிலும் தொற்றியிருந்திருக்கும். திரும்பவும் மூன்று நாட்கள் கழிந்த பின் ஓர் நாள் மிகவும் தாகத்தோடு மீண்டும் விழித்தேன். அதே தாதி. அதே பரபரப்பு.

தாதி, திரும்பவும் போய் உடனே வைத்தியரோடு வந்தாள். அதே இளவைத்தியர். அதே குழந்தைப் புன்னகை. நான் திரும்பவும் தண்ணீர் கேட்டேன். குரல் ஒத்துழைக்கவில்லை. சைகை செய்தேன். என்னருகே குனிந்தார். ஒரு குழந்தையிடம் சொல்வதைப் போன்ற அன்பான குரலில் சொன்னார்.

' நீங்கள் தொடர்ச்சியாகப் பலநாட்கள் பட்டினியிலிருந்திருக்கிறீர்கள். உடல் மிகவும் பலவீனமுற்றிருந்திருக்கிறது. உங்கள் உணவில் மறைந்திருந்த விஷம் உங்கள் தொண்டைக்குழியினூடு இறங்கிச் சென்ற வழியெங்கிலும் புண்களைத் தோற்றுவித்தபடி நகர்ந்திருக்கிறது. அவற்றின் புண்கள் முழுதாகக் காயும்வரையில் உணவெதற்கும் பரிந்துரைக்க முடியாதவனாக இருக்கிறேன். மன்னியுங்கள். தண்ணீரையும் கூட இன்னும் சில மணித்தியாலங்கள் கழித்தே அருந்தத் தரலாம்.'

மிகவும் அன்பான குரல் அவரிடமிருந்து வழிந்தது. அன்பு, வழிய வழியத் தரப்படும் அன்பு. காதலிக்கக் கெஞ்சும் நாட்களில் மனிதர்களிடம் மிகைத்திருக்கும் அதே அன்பான, இழைவான குரல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. அவரது குடும்பம், சக ஊழியர்கள், நண்பர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களென எண்ணிக்கொண்டேன். தாதியிடம் எதையோ எடுத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டார். அவள் நகர்ந்ததும் என்னருகில் குனிந்தார். ' எனது அன்புக்குரியவரே! அழகாக இருக்கிறீர்கள். எந்தக் குறைபாடுமற்றவராக இருக்கிறீர்கள். இளவயதினராக இருக்கிறீர்கள். உங்கள் குருதியெங்கிலும் நச்சு பரவியிருக்கிறது. நாங்கள் மருந்துகளின் மூலம் அவற்றை நீக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம். இறைவன் நாடினால் உங்களை எப்படியும் காப்பாற்றிவிடுவேன். நீங்கள் வாழவேண்டும். ' என்றார். உடல் முழுதும் நீலம் பாரித்துத் தோல் கறுத்துப் போயிருந்த நான் இன்னும் அபாயகட்டத்தைத் தாண்டவில்லையென அப்பொழுதுதான் உணர்ந்தேன்.

பல மணித்தியாலங்கள் கழித்துத் தரப்பட்ட முதல் தண்ணீர், தாகித்திருந்த நாவு வழியே சொட்டுச் சொட்டாக இறங்கியது. தொண்டை முதல் உள்நனைத்துப் போன அது சில நிமிடங்களே உள்ளே இருந்து பின்னர் வாந்தியாக வெளியே வரத் தொடங்கியது. ஒரு தாயின் பரிவோடு தாதி துடைத்துவிட்டாள். வைத்தியர் வந்து பார்த்து குளுக்கோஸ் மருந்துகளை நரம்பு வழியே தொடர்ந்தும் ஏற்றக் கட்டளையிட்டார். பெருங்கவலையோடும் பெருமூச்சோடும் தலைகோதி விட்டார். நான் புன்னகைத்தேன். பேச முயற்சித்தேன். வாந்திக்குப் பிறகு இப்பொழுதும் தொண்டை வழியே வெறும் காற்றுத்தான் வந்தது.

மணித்தியாலங்கள் நகர்ந்தன. நண்பர்கள் வந்து பார்த்துச் சென்றனர். இடையிடையே என்னுடன் கதைக்கவென நண்பரின் கைபேசிக்கு சகோதரியும் வீட்டாரும் முயற்சித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிதும் சிரமத்தோடு அவ்வுரையாடல்களை எதிர்கொண்டேன். முழுதாக, எனக்குப் புதிதான அனுபவம் இது. நண்பர்கள் எல்லோரும் எனது நிலை வீட்டுக்குத் தெரியாதபடி பார்த்துக்கொண்டார்கள். தொடர்ந்தும் தோல்நிறம் கறுத்துக்கொண்டே போனது. எல்லோரும் போய் நானும் மருந்துகளின் உபயத்தில் கண்மூடிக் கிடந்த நேரம் சடுதியாக உடல் உஷ்ணம் அதிகரித்துக் கொண்டே போய் ஒரு நிலையில் பேச்சும் உடலசைவுகளும் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போகத் துவங்கியது. என்னையறியாமலே நான் மரணிக்கத் தொடங்கியிருந்தேன்.

(தொடரும்)


- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Monday, June 1, 2009

இருப்புக்கு மீள்தல் - 03

பின்னர் என்ன? அம்மாவின், சகோதர,சகோதரிகளின், நண்பர்களின் கூட்டுப் பிரார்த்தனையும் தொடர் சிகிச்சையும் என்னை எழுந்து நடமாடச் செய்தது. திரும்பவும் ஆறுமாதத்துக்கு அம்மா என்னை மீளப்பிறந்த குழந்தையாய்த் தாங்கினார். எனக்காக, வீட்டிலுள்ள அனைவரும் கூடப் பத்தியச் சாப்பாடுதான். உப்பும், மசாலாக்களுமற்று வெறுமனே அவித்த காய்கறிகளும், சோறும் உணவுக்கெனவும் இனிப்பு சேர்க்கப்பட்ட இளநீர் தாகமெடுக்கையில் அருந்தவெனவும் தரப்பட்டுக்கொண்டே இருந்தன. உறக்கம், அது தவிர்த்து அம்மாவின் கண்காணிப்பில் முற்றத்தில் சிறு உலாத்தல், அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு மாலை வகுப்பெடுத்தல் இப்படியாகப் பொழுதுகள் நகர்ந்துகொண்டே இருந்தன. அந்தூரியமும் ரோசாவும் வளர்த்தேன். அலுப்பூட்டினால் பார்த்து ரசியெனப் புது மீன் தொட்டியொன்றும் வர்ணமீன்களும் வரவேற்பறையை அலங்கரித்தன.

வாசிக்கவெனப் புத்தகங்களை சகோதரர்கள் வாங்கிவந்துகொண்டே இருந்தார்கள். நண்பர்களும் தொடர்ச்சியாகத் தேடி வந்துகொண்டே இருந்தனர். அப்பொழுதெல்லாம் நிறைய வாசிக்கவும் எழுதவும் செய்தேன். மனம் சொன்னவற்றையெல்லாம் எந்தத் தயக்கங்களுமற்று, எந்த நிர்ப்பந்தங்களுமற்று எழுத்துக்களாக்கிக் காகிதங்களில் மேயவிட்டேன். எல்லாவற்றையும் காலத்தோடு தாண்டிவந்து பலவருடங்களாகிடினும் இன்னும் நினைவில் இருந்துகொண்டே இருக்கின்றன எல்லாமும்.

இப்பொழுதும் அம்மாவும், அன்பானவர்களும் பக்கத்திலிருந்தால் நன்றாக இருக்குமேயென நினைத்துக்கொண்டேன். கண்விழித்துப் பார்த்தேன். கைநரம்பினூடு மருந்து கலக்கப்பட்ட திரவத்தைச் செலுத்தியபடி தலைகீழாய்த் தொங்கவிடப்பட்டிருந்த போத்தலில் திரவமட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. தாதி புதிய போத்தலை மாற்றமுயற்சித்துக் கொண்டிருந்தாள். எனக்குத் தாகமாக இருந்தது. உள்நாக்கு வரையில் வரண்டுபோய்க் கிடந்தேன். புன்னகையோடு என் விழிகளை நேரே பார்த்தவளிடம் மிகச் சிரமப்பட்டுத் தண்ணீர் கேட்டேன்.

அவள் வைத்தியரிடம் கேட்டுவருவதாகச் சொல்லிவிட்டுப் போனாள். சில நிமிடங்கள் தன்பாட்டில் கரைந்தபடி இருந்தன. இரவா,பகலா என இன்னும் தெரியவில்லை. எனது தேசத்தின் வைத்தியசாலைகளில் வரும் வாடையைப் போன்றதொரு வாடை இங்கு இல்லை. எனினும் ஏதோ ஒரு நெடி என்னைச் சுற்றி ஒரு வலையைப் பரப்பி அலைந்துகொண்டே இருந்தது. தாதி, வைத்தியரை அழைத்து வந்தபொழுது மூக்கின் வழியும், இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் வழியும் குருதி மிகவும் உக்கிரமாகக் கசிந்துகொண்டிருந்தது. நான் திரும்பவும் மயங்கிப்போயிருந்தேன்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Tuesday, May 26, 2009

இருப்புக்கு மீள்தல் - 02

 
       சவத் துணி உடுத்து, சவப்பெட்டிக்குள் படுத்து, சூழப் பல இதயங்களை விம்மச் செய்தபடி கல்லறைக்கு நகரும் ஊர்வலம் இப்பொழுது எனக்கு வாய்க்கவில்லை. வாழ்தலுக்கான உத்வேகத்தைத் தரும்படியான எந்தவொரு நிகழ்வும் சமீபத்தில் நடக்கவில்லைதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் இந்நாட்டு வெயிலைப்போல தனிமை துரத்தியதுதான். சில துரோகங்களைத் தாங்கச் சக்தியற்றதான மனம் பல நாட்களாக உணவு மறுத்து, புன்னகை மறுத்து, உறக்கம் மறுத்து அழுதுவழிந்து தவித்துக் கிடந்ததுதான். அதற்காக மரணம் ஒரு விமோசனமா?

        ஒரு இளம் மருத்துவரைத் தாதி உடனே அழைத்துவந்தாள். ஒரு ஆறுமாதக் குழந்தையைப் போன்ற புன்னகையொன்று அவர் முகத்தில் தவழ்ந்தது. எனது உடல் நிலைமை குறித்து என்னை விடவும் நன்கறிந்தவர் அவரெனினும் என்னிடமே அன்பாக விசாரித்தார். தலை கோதிவிட்டார். எனக்கு என்ன நிகழ்ந்திருந்ததென மென்மையாகச் சொன்னார். எனது உடல் மிகவும் பலவீனமுற்று இருப்பதாகவும் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படியும் கூறி, புன்னகைக் குழந்தையை என்னிடம் தந்து நகர்ந்தவர், அவ்வளவு நேரமும் காத்திருந்தவர்களுள் எனக்கென கையெழுத்திட்ட நண்பரை மட்டும் என்னிடம் வர அனுமதித்தார். ஏதோ ஒரு அச்சத்தில் பதறியபடி உள்ளே வந்தவர் எனது விழிப்பைக் கண்டதும் மகிழ்ந்துபோனார். எனது வீட்டின் இலக்கம் வாங்கித் தன் கைபேசியில் அழுத்தி சகோதரனிடம் பேசச் சொன்னார்.

        உடலில் விஷமேறி நான் மருத்துவமனையின் வெள்ளை விரிப்பில், தாண்டப் போகும் அபாயகட்டத்தை நகர்த்தியபடி சோர்வாக பச்சைத் திரைச்சீலைகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருக்கிறேனென்பதனை வீட்டார் அறிவார்களா? அவர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்தபொழுது மிகவும் நலமாக இருப்பதாகப் பொய்யைச் சொல்ல வேண்டியிருந்தது. மாதக்கணக்கில் பேசும் வாய்ப்புக் கிட்டாமல் முதன்முதல் உரையாடியபொழுது இத் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள மனம் அனுமதிக்கவில்லை. ஏதேதோ பேசினோம்.

        நான் விழித்த செய்தியை, வெளியே காத்திருந்தவர்களிடம் சொல்லவென நண்பர் அகன்ற பின்னர் கண்களை மூடிக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. தொடர்ச்சியாக முப்பத்தாறு மணித்தியாலங்கள் மயங்கிக் கிடந்தது போதாதா? வெளியுலகில் ஏது நடக்கிறதென அறியாமல் விழி மூடிக்கிடந்தது போதாதா? ஏதோ ஒரு நினைப்பு மனதினில் பெரும்பாரமாய் வந்து உட்கார்ந்தது. வேறு சிந்தனைக்கு மாறச்சொல்லி மனதை ஊக்குவித்தேன். உறக்கத்துக்குப் பதில் இறுதியாக, இதற்கும் முதலாக எப்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேனென்பது நினைவுக்கு வந்தது.

        முன்பொரு நாள் இதுபோல மஞ்சள் காமாலை என்னில் மிக உக்கிரமாகத் தாக்கி வைத்தியசாலையில் மயங்கிக் கிடந்திருக்கிறேன். அது எனது உயர்தரப்பரீட்சை நேரம். மயக்கம் தெளிந்தபோது அம்மாவும் சகோதரர்களும் அருகிலிருந்தது இன்னும் நினைவிலிருக்கின்றது. அழுது சிவந்த அம்மாவின் கண்கள் கண்ணாடித் தொட்டியில் பேணி வளர்க்கப்படும் செம்மஞ்சள் தங்கமீன்களை ஒத்தவையாயிருந்தன. விழித்தெழுந்து நான் மிகவும் மன்றாடி, வைத்தியரிடம் அனுமதி வாங்கி வைத்தியசாலையிலிருந்தே பரீட்சை எழுதவெனப் போய் எழுதிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டேன். வயிற்றின் மேற்பகுதியில், நெஞ்சின் வன்கூட்டுக்குக் கீழ்பகுதியில் தசை மேலெழுந்திருந்தது. ஈரல் மிகவும் உக்கிரமாக வீங்கியிருக்கிறதென வைத்தியர் சொன்னார். அம்மா மிகவும் பயந்துபோனார். நான் மருந்துகளின் உபயத்தில் ஏதுமறியாது உறங்கிக்கொண்டிருந்தேன். முன் தினம்தான் மஞ்சள்காமாலை தாக்கி ஈரல் வீங்கிய சிறுமியொருத்தி அதே வைத்தியசாலையில் செத்துப் போயிருந்தாள். கூற்றுவன் அப்பொழுதும் அம்மாவின் அருகிலமர்ந்து என்னைப் பார்த்திருந்திருக்கக் கூடும்.

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.
நன்றி - விகடன்

Thursday, May 21, 2009

இருப்புக்கு மீள்தல் - 01


மரணம்... நான் மயக்கமுற்றுக் கிடந்தவேளையிலும் என் அருகிலேயே விழித்தபடி பார்த்திருந்திருக்கிறது என்பதனைப் பின்னர்தான் அறிந்தேன். இரத்த நாளங்களெங்கிலும் அப்பொழுதுதான் அருந்திய உணவிற்குள் ஒளிந்திருந்த விஷம் வேகமாகப் பரவியபடி இருக்கையில் அருகில் யாருமற்ற சூழலில் தனித்து, மயக்கமுற்றுக் கிடப்பதென்பது கூற்றுவனைத் தோளிலமர்த்திப் பார்த்திருக்கச் செய்வதன்றி வேறென்ன? நான் அப்படித்தான் கிடந்திருந்திருக்கிறேன். புறச்சூழல் நிசப்தத்தை, செவிகளில் மெதுமெதுவாக ஏற்ற, மயங்கிச் சரிந்திருக்கிறேன். விழி சொருகும் இறுதிக் கணத்தில் என்ன நினைத்தேனென இன்னும் ஞாபகத்திலில்லை.

இன்னும் உணவருந்திய பகல்பொழுது நினைவிலிருக்கிறது. பிறகுதான் மயங்கியிருக்கிறேன். விடுமுறை நாளில் அலுவலக வேலைக்கென வந்து ஏறத்தாழ நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக உள்ளே தனித்த நிலையில் விழுந்துகிடந்தேனென என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சக அலுவலகர் பின்னர் சொன்னார். அங்கு உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பொழுது அவரிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக்கொண்டு, வெளியே காத்திருக்கச் சொன்னார்களாம். காத்திருந்த பொழுதில் அவரிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது எனக்கான முதல் பிரார்த்தனை.

ஊர் நண்பர்கள், சக ஊழியர்கள் பதறித்துடித்து ஓடிவந்து காத்திருந்தும், மயங்கிப் பின் முப்பத்தாறு மணித்தியாலங்களுக்கு முன்பதாக நான் கண்விழிக்கவில்லை. இருபத்துநான்கு மணித்தியாலங்கள் தாண்டியும் விழிப்பு வராமல் போகவே வைத்தியர்கள் எனது அபாயநிலையை வீட்டுக்கு அறிவிக்கும்படி சொல்லிவிட்டார்களாம். யாரிடமும் எனது வீட்டுத் தொலைபேசி எண் இல்லை. என்னோடு சேர்ந்து வீழ்ந்து உடைந்து சிதறிப் போன கைத்தொலைபேசியும் அலுவலகத்தில் எனதிருக்கையருகில் அப்படியே கிடக்கும். அதுபோலவே அங்கங்கே உறைந்து போய் எல்லோரும் எனது விழிகள் திறக்கக் காத்துக் கிடந்தார்கள். சக அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஈரானியச் சகோதரி, அவரதும் எனதும் நண்பர்களுக்கெல்லாம் நான் நோயுற்ற செய்தியை அனுப்பி எனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார் எனப் பின்னர் அறிந்தேன்.

ஒன்றரை நாட்கள் கடத்தி நான் விழித்துப் பார்த்தபொழுது வேறொரு உலகத்தில் இருக்கிறேனோ என்ற நினைவினைத் தோற்றுவிக்கும்படி என்னைச் சுற்றிலும் ஏராளமான மருந்து, மருத்துவ உபகரணங்கள் வாடிக் கிடந்த என்னுடலில் இணைக்கப்பட்டிருந்தன. அணிந்திருந்த ஆடை மாற்றப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓயாது சேர்ந்தடித்து நொறுக்கியதைப் போன்றதொரு சோர்வையும் வலியையும் என்னில் உணர்ந்தேன். என் நிலையைக் கண்காணிக்கவென எப்பொழுதும் கூடவே இருக்கும்படி நியமிக்கப்பட்ட ஒரு மருத்துவத்தாதி என்னிலேற்பட்ட சிறு சலனத்துக்கு முகம் முழுதும் மகிழ்வோடு அருகினில் ஓடி வந்து கன்னத்தில் இலேசாகத் தட்டி முழுதும் விழிக்கும்படி செய்தாள். பகலா, இரவா எனத் தெரியாதபடி விழித்தேன். எங்கிருக்கிறேன் எனத் தெரியாமல் விழித்தேன். எனக்கு என்ன ஆனதெனப் புரியாமல் விழித்தேன். அவ்வளவு நேரமும் காத்திருந்த கூற்றுவன் என் உயிர் வாங்கிப் போகும் உத்தேசமற்று நகர்ந்துபோனதை அறியாது விழித்தேன். ஏன் விழித்தேன்? ஏன் இவ்வுலகை மீளவும் பார்த்தேன் ?

(தொடரும்)

- எம்.ரிஷான் ஷெரீப்.

நன்றி - விகடன்.

இருப்புக்கு மீள்தல் - 02 இங்கே...

Saturday, April 11, 2009

நிழற்படங்கள்

நவீன விருட்சம் காலாண்டு இதழில் பிரசுரமான எனது 'நிழற்படங்கள்' சிறுகதையை தமிழ்மணம் நட்சத்திரப்பதிவாக இங்கே பார்க்கலாம்.

Wednesday, March 4, 2009

விடுபட்டவை



வண்டு ஏற்படுத்திச் சென்ற துளைகளுக்குள் காற்று நுழைந்து மூங்கிலை இசைபாடச் செய்தபடி நகர்ந்த அக்கணத்தில் எனக்குத் தெரியவில்லை. உனது அண்ணாதான் நீ வீட்டிலிருப்பதாகவும், உன் கைபேசியைக் காரில் தவறி விட்டுப் போனதாகவும் வீட்டுக்குப் போன உடனே உன்னிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னார். அழைத்து அழைத்துச் சோர்ந்து போன எனது மனப்பாரங்களுடன் சேர்த்து, நீ தவறவிட்ட எனது அழைப்புக்களையும் நீ உன் கைபேசியில் கண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியும். நீ வேண்டுமென்றே அப்படிச் செய்பவனல்ல. என் மேல் உனக்குக் கோபமும் வெறுப்பும் மிகைத்திருக்கக் கூடும். இருப்பினும் எவ்வாறாயினும் நீ எனது அழைப்புக்களைத் துண்டிப்பவனல்ல. நீ நல்லவன். எனக்குத் தெரிந்த நல்லவர்களில், அன்பானவர்களில் நீ முதலாமவன். என் மதிப்புக்குரியவன். என்றைக்குமே என் விருப்புக்குரியவன்.

'அப்படியானால், அது உண்மையானால் ஏன் என்னை விட்டுப் போனாய்?' என்ற கேள்வி உனக்குள் எழக்கூடும். அன்றுனை அழ வைத்து, தேட வைத்து, வாட வைத்துக் கை விட்டுப் போன பின்னர் எதற்குனைத் திரும்ப அழைத்தேனென நீ எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். எனக்குள் சுட்ட சில யதார்த்தங்கள், நியாயங்கள், உனது குடும்பத்தைச் சூளைக்குள் எரியும் தணலாய்ப் பொசுங்க வைத்த எமது வாழ்வின் கொடிய கைகள் எனச் சில விடயங்கள் என்னை உன்னை விட்டும் ஒதுங்க வேண்டிச் செய்தன. உன்னிடம் சொல்லியிருக்கலாம்தான். வாழ்வின் இறுதி வரை என்ன கஷ்டமெனினும் கூட வருவேனெனச் சொல்லி அன்பைப் பொழிந்த உன்னைக் கஷ்டத்துக்குள்ளாக்க விரும்பவில்லை. அவ்வேளை நீயாவது, நீ மட்டுமாவது எங்கேனும் நன்றாக மகிழ்வோடு வாழ வேண்டுமென்றே உள்ளம் விரும்பியது. விரும்புகிறது.

இரு தினங்களுக்கு முன்னால் பணி புரிந்துவரும் நாட்டை விட்டு அம்மாவின் சுகவீனமுன்னை அவசரமாக வெளியேறச் செய்து, தாய்நாட்டை ஏகச் செய்தது. அம்மாவின் நலம் குறித்து உன் நண்பர்களிடம் விசாரித்ததில் சாதகமான எந்தப் பதிலும் கிட்டவில்லை. உனக்கே அழைப்பினை எடுத்தாலென்ன என்ற கேள்வி அப்பொழுதுதான் என்னுள் முளைத்திற்று. விட்டுப் போன என்னை, எனது குரலை எதிர்கொள்ளும் சங்கடத்தை உனக்கு எப்படித் தருவது என்ற தயக்கத்திலேயே பாதி நேரம் ஓடிற்று. உணவோ, உறக்கமோ எதிலும் நாட்டமற்ற மனம், எதைப்பற்றியும் எண்ணத்தூண்டாத வெறுமையை, பொறுமையை ஏற்றிருந்த மனம், உன்னிடம் பேசச் சொல்லி அடம்பிடித்தபடி அலைந்தது.

கடந்த காலங்களில் உன்னை விட்டுப் பிரிந்த நான், உனது விசாரிப்புக்களின் போது ஆனந்தமாகவும், எந்தக் கவலைகளுமற்றும் வாழ்வதாகக் காட்டிக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் போலி நடிப்புத்தானே என்னை வெறுக்கச் செய்து, உன்னிலிருந்து முழுவதுமாக என்னை அகற்றி உன்னை இன்று மகிழ்வானவனாக வாழச் செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது சலனமற்று ஓடும் உன் அழகிய வாழ்வில், எனது குரலெனும் கல்லெறிந்து அலைகளையெழுப்ப விருப்பமற்று, உனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவது குறித்து மனம் அல்லாடிக்கொண்டே இருந்தது.

இறுதியில் பெருந்தயக்கம் ஒதுக்கி உனக்குத் தொலைபேசினேன். காருக்குள் ஒளிந்திருந்த கைபேசி 'என்னைக் கொஞ்சம் மாற்றி..' ராகத்தை யாருமற்ற வெளியில் அதிர்வுகளைக் கிளப்பியபடி உன் பக்க அழைப்பின் குரலாக ஒலித்து ஒலித்து ஓய்ந்தது. பல மணித்தியால அழைப்பின் பிறகு, அண்ணன் கண்டெடுத்து, ஒரு தேவ கணத்தில் உனது குரல் எதிர்முனையில் தோன்றி என்னைச் சாந்தப்படுத்தியது.

முதலில் எனது குரல் உன்னில் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. என்னை நீ எதிர்பார்த்திருந்திருக்கவும் மாட்டாய். பெயரைச் சொன்ன பின்னால் உனது இதழ்கள் உதிர்த்த முதல் சொற்களில் கோபமும், வியப்பும் ஒரு சேர வழிந்ததை ஒரு கணம்தான் உணர்ந்தேன். பிறகு அம்மாவின் உடல்நலம் குறித்த ஆறுதலான வார்த்தைகளைத் தந்திட்டாய். உனது வேலைகள், கடமைகள் குறித்த விடயங்களைப் பகிர்ந்தாய். நல்லவேளை இறுதிவரை நீ என் நலம் விசாரிக்கவில்லை. வினவியிருந்தால் பல மாதங்களுக்குப் பிறகான நமது உரையாடலில், அந்தத் தொலைபேசி அழைப்பில் நலமெனச் சொல்லி என் குரல் ஒரு பொய்யை உரைத்திருக்கக் கூடும்.

அன்பானவனே, நானுன்னைப் பிரிந்த நாளின் காலைவேளை நினைவிருக்கிறதா உனக்கு ? நமக்குப் பிடித்த மழை, துளித்துளியாக முற்றவெளியெங்கும் இறங்கி தேகங்களைக் குளிரச் செய்திருந்தது. அந்தக் குளிர் உனக்குப் பிடித்தமானது. எவ்வளவு குளிரானாலும், அதிகாலையில் பச்சைத் தண்ணீரில் குளிப்பவன் நீ. இழுத்துப் போர்த்தி உறங்குமெனை உன் தலை சிலுப்பித் தெளிக்கும் நீர்ச் சொட்டுக்களாலேயே எழுப்புவாய். அன்றும் அப்படித்தான். எனினும் அன்றைக்கொரு மாற்றம். வார இறுதி விடுமுறைக்காக வந்திருந்த உனது நண்பர்களின் குழந்தைகள் நமது அறையில் பூக்களைப் போல உறங்கிக் கொண்டிருந்தனர். நாமிருவரும் ஓசையெழுப்பாத பூனைக் குட்டிகளாகி மேல் மாடியிலிருந்து கீழே வந்தோம்.

அன்று நாங்கள் மட்டும்தான் தாமதித்து எழுந்திருந்திருக்கிறோம். உனது நண்பர்கள், விருந்தினர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கூடத்தில் கலகலத்தபடி பேசிக் கொண்டிருந்தது பெரும் மகிழ்வினைத் தந்தது. ஏலக்காய் மணக்கும் உனது தேனீரின் சுவையை அறிந்த அவர்களில் சிலர் அக்குளிர் வேளையில் சுடச் சுடத் தேனீர் உன்னைக் கேட்டதற்கிணங்கி நீ சமையலறைக்குப் போக வேண்டியதாயிற்று. அவர்களின் மகிழ்வை, வாழ்வினை ஆனந்தமாகக் களிக்கும் விதத்தினை அவர்களது பேச்சில், சிரிப்பில் அன்று நான் அருகிலிருந்து கண்டேன். நீ அவர்களில் ஒருவன். அவர்களது வயதினை ஒத்தவன். நீயும் அப்படியே ஆனந்தமாக வாழவேண்டியவன். நானுன்னை அவர்களை விட்டும் தனியாகப் பிரித்துவிட்டேனோ என்ற எண்ணம் என்னில் கிளர்ந்து இதயம் முழுதும் பரவியது. ஒரு குற்ற உணர்வை என்னில் விதைத்தது.

என்னால் உனக்கு விரும்பியபடி பயணங்களில்லை. பணி புரியும் இடத்திலும் என்னைப் பற்றியே சிந்தனை. உனது எழுத்துக்களில், நேசத்தில், எல்லாவற்றிலுமே நான். நான். நான் மட்டுமே தான். திருமணம் கூடத் தேவையின்றி வாழ்நாள் முழுதும் என்னுடனேயே இருக்க வேண்டுமென்ற சிந்தனை கூட உன்னில் ஒளிந்திருந்தது. வீட்டிற்கு இளையவன் நீ. சகல வசதிகளும் வாய்ந்த செல்லப்பிள்ளை நீ. உன் சந்ததியைக் காண பெருவிருப்போடு இருக்கும் உனது முழுக் குடும்பத்தையும் எனக்காகப் பகைத்துக் கொள்பவனாக உன்னைக் காண எனக்குச் சக்தி இருக்கவில்லை. அன்றுதான் நீயறியாது நான் வெளியேறினேன்.

நீ எனக்காக அன்பினால் பார்த்துப் பார்த்துச் செய்த, நமது பிரியத்திற்குரிய அழகிய பெருவீட்டின் வாயிலைக் கடந்தேன். . கொட்டும் மழையில் என் கண்ணீரைத் தனியாகக் கண்டறிந்துகொள்ள யாருமிருக்கவில்லை. என் விழிகளிலிருந்து வழிந்த அனல், வெளியே படிந்திருந்த குளிரினை உருக்கியகற்றி எனக்கு வழி சமைத்துக் கொடுத்தது. உன் அன்பினை மட்டுமே வழித்துணையாய்க் கொண்டு என் எதிர்காலப் பாதையறியாப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

எல்லோரும் போய்விட்ட பின்பு அல்லது வீட்டில் உனது பணிகள் ஓய்ந்த பின்பு நீ என்னைத் தேடியிருப்பாய். எனது சுவாசம் நிறைத்த உனது அறையினில், வெளித் திண்ணை ஊஞ்சலில், மொட்டை மாடியில், நீச்சல் குளத்தில் ஏன் மழை பெய்திட்ட போதும் பன்னீர்ப் பூக்களைச் சிதறவிடும் அந்த அழகிய மரத்தைச் சுற்றியும் கூடத் தேடியிருப்பாய். நான் உன்னிடத்தில் என்னை விட்டு வெளியேறியிருந்தேன் என்பதை உணர முடியாமல் தவித்தபடி இருந்திருப்பாய். ஒரு காகிதத்தில் சிறுகுறிப்பையேனும் கிறுக்கி வைக்காமல், எனது எல்லைகளைக் கூட நீ எட்டாவண்ணம் நான் தொலைந்துபோனேன் அன்று. என்னைக் குறித்தான வெறுப்பு உன் மனதில் முளைக்கும்வரை அழுதபடி இருந்திருப்பாய்.

அழகனே, நீ எந்தக் குறைகளுமற்றவன். உன் இளவயதிற்கேற்ற நல்வாழ்க்கை, இல்வாழ்க்கை வாழவேண்டியவன். விபத்தொன்றில் சிக்கி, அநாதையாகத் தனித்துக் கிடந்தவனை உன் வீட்டுக்கு அழைத்து வந்து அன்பூட்டிக் குணப்படுத்தி, அரவணைத்துப் பார்த்துக் கொண்டதே போதும். இப்படிப்பட்ட ஊனமுற்றவனை நண்பனாகக் கொண்டு, இறுதி வரை எனக்காகவே அத்தனை தியாகங்களையும் செய்தபடி, என்னுடனேயே வாழ உனக்கென்ன விதி நண்பா ? என் போன்றோருக்கென பல விடுதிகள் உள்ளன. என் துயரங்கள் என்னுடனே மடியட்டும். உனது மகிழ்வான வாழ்வுக்கான அழகிய பிரார்த்தனைகளையும், முழு மனதுடனான என் தூய அன்பையும் உனக்கென மட்டுமே நான் என்றும் பேணிக் காப்பேன். அது போலவே என் வாழ்நாள் முழுவதற்குமாக நான் உன்னில் கண்ட அன்பு ஒன்றே என்னை எஞ்சிய நாட்களை மகிழ்வோடு வாழவைக்கும். நம்பு. இனி வாழ்வில் என்றும் நல்லதே நடக்கும். உனக்கும். எனக்கும்.

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

நன்றி - விகடன்